Wednesday, December 26, 2007

நான்...

நான்
நான்
நான் நான் என்று
நுரைத்துப் பொங்க
நான்களைச்
சேமித்துவைத்தேன்
குறைவின்றி
கூடித்திமிறி
குதித்தாடி வெளியேறின
ஒருநாள் எல்லாம்
என்னை
உடைத்துப்போட்டு

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Monday, December 24, 2007

கிளியின் புன்னகை

கூண்டு கிளியுடன்
வருவேன் என்று
காத்திருக்கும்
மகளிடம் போய்
எப்படிச் சொல்வேன்
வாங்கி வரும் வழியில்
கிளியை வானம் விட்டதும்
கூண்டினை தூக்கி எறிந்ததும்

கதைபோல் மகளிடம்
சொல்லும் போது உணரலாம்
பறவையின் சுதந்திரம்

அப்போது அவள் உதட்டில்
வந்து அமரும்
அந்த கிளியின் புன்னகை

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Wednesday, December 19, 2007

எல்லா கதவையும்
திறந்து வைத்திருக்கிறாள் சிறுமி
வரைந்த வீட்டில்

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியானது)

Tuesday, December 18, 2007

அவருக்காக
நான் மன்னிப்புக் கேட்டேன்

எனக்காக
யாராவது கேட்பார்கள்

தவறுகள் சுற்றித்திரியும்
பயமற்று

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியானது)

Sunday, December 09, 2007

கதையின் பயணங்கள்

ரயில் பயணத்தை அழகாக்கியவர்
கதை சொல்லிக்கொண்டே வந்தார்

ஒப்பனைக் கலப்பில்லாத
அவர் சொற்களிலிருந்து
வெளியான உயிர்
எங்களோடு பயணம்
செய்வது போலிருந்தது

மலைக்குகை தாண்டியது ரயில்
சத்தமிட்டபடி

கதையை சீக்கிரம்
முடித்து விடுவீர்களா என்றேன்

நான் இறங்குவதற்கு முன்பா
நீங்கள் இற்ங்குவதற்கு முன்பா
யோசனைகளை கண்ணில்
குவித்தபடி கேட்டார்

அவரும் நானும்
இறங்கிய பின்னும்
கதை தொடர்ந்து கொண்டிருந்தது
பயணத்தை
வேறு வேறு பயணிகளோடு

நாக்குகள்

நாக்கால் மூக்கைத்தொட்டு
வேடிக்கைக் காட்டியவனை
எல்லோரும் பார்த்தார்கள்

அவன் தட்டு
காலியாக இருந்தது

சிரித்து கைதட்டி
திரும்பச் செய்யச் சொன்னாள் சிறுமி

சிறுமிக்காக
மீண்டும் செய்தான்

வீட்டிலிருந்த யாராலும்
முடியவில்லை

தோல்வியுடன் திரும்பின
நாக்குகள்

கடுகடுப்பாய் இருந்தவர்
நாக்கைக் கடித்துக்கொண்டார்

பசிக்கு ஏதாவது போடவா
கேட்டார்கள்

சிரித்து மகிழ்ந்த சிறுமியால்
பசியடங்கிப்போன அவன்
அவளுக்கு ஒரு முத்தம்
தர வேண்டும் என்றான்

கதவு மூடப்பட்டது

சென்று கொண்டிருந்த
அவனோடு வந்து
மறைந்து போனது
சிறுமியின் அழுகுரல்

Thursday, December 06, 2007

கேட்காதே...

கடந்து போகும் அவனைப்
பார்த்திருக்கிறேன்
பல முறை

ரகசியமாய் பேசிச்செல்வான்

ஒரு நாள்
கேட்க நேரிட்டது
அவன் சொன்னதை

பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை

அவன் வரிகளை
மெளனமாய் பார்ப்பதற்குள்
போயிருந்தான்

ஒரு மழைநாளில்
அவனுக்குத் தேநீர்
வாங்கித் தந்து கேட்டேன்

உரத்துப் பார்த்தான்

பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை

வாயிலிருந்து நெருப்பு
சுழன்று வந்து
அவனுள் போனது

இன்னொரு தேநீருக்குப்பின்
அதன் பொருள் கேட்டேன்

கேட்காதே
நீயே தேடு என்றான்

சிரித்தான்
சத்தமாய் சொல்லிச் சென்றான்

நீ பிறக்காதவன்
நான் இறக்காதவன்
துடைக்கும் புகைப்படம்
ஞாபக தூசிகள்
திறக்கும் காலம்

Thursday, November 29, 2007

தற்கொலை செய்ய இருந்த
மின் விசிறியிலிருந்து வெளியேறுகின்றன
மரணத்தின் புழுக்கங்கள்

Wednesday, November 28, 2007

எறும்பின் சொற்கள்

பிரித்து வைத்திருந்த
புத்தகத்தில் நிகழ்ந்தது

எழுத்துக்கள் எல்லாம்
எறும்புகளாயின

வெள்ளையானது பக்கம்

தாளில் ஒளிந்திருக்கும்
எதையோ கண்டுபிடிப்பதுபோல்
அங்கும் இங்கும் வேகமாயின

எறும்புகளின் சந்தையானது
விரித்து வைத்த புத்தகம்

மூடினால் நசுங்கி
இறந்து போகலாம்

புத்தகம் திறந்திருக்க
அறையை மூடிவிட்டுக் கிளம்பினேன்

திரும்பியபோது
அப்படியே இருந்தன எழுத்துக்கள்

எறும்புகள் எதுவுமில்லை

பிரமிப்பிலிருத்து மீண்டு
நகர்ந்தது பார்வை
கவிதையின் தலைப்புக்கு

எறும்பின் சொற்கள்

எறும்பைக் கொல்லாத
ஒரு மனிதனை
தான் இறந்து போவதற்குள்
பார்க்க வேண்டும் என்று
ஒரு எறும்பு சொல்வதுபோல்
முடிந்திருந்த்து

புத்தகத்தை மூடாமல்
அப்படியே பார்த்தேன்

தாளை சுதந்திரவெளியாக்கி
போனது ஒரு எறும்பு

Tuesday, November 13, 2007

கனவிலிருந்து...

கனவிலிருந்து
வெளியேறிய தேள்
இரவைக் கொட்டும்
விஷமற்ற புன்னகையில்
அதிகாலை ஒளி

மழை

நான் இருந்த இடத்தில்
இல்லாதபோது
பெய்தது மழை
இல்லாத என்னை
நனைத்தபடி
பார்க்கிறது மழை
ஒதுங்கிய என்னை

Tuesday, November 06, 2007

கூட்டம் நிறைந்த பேருந்து

திரும்புகிறது பேருந்து
நின்றபடியே பெரியவர்
எழுந்து இடம்தர
யாருக்கும் இடமில்லை
மனதில்
லேசாக சாய்கிறார்
கண் மூடித் திறக்கிறார்
நெறிசலில் நெளிகிறது
நின்று நகர்கிறது
இன்னும் வீங்கிப் பேருந்து
இருமலைத் துண்டால் மூடுகிறார்
கசியும் சத்தம்
உள் முழுதும்
வருகிறது என் நிறுத்தம்
இருக்கை பெரியவருக்குதான்
புன்னகைத்து
உட்காரச்சொல்லி
இறங்குகிறேன்
போகிறது பேருந்து
பெரியவர் இல்லை
கூடவே இறங்கியவர்
சொல்லிப் போகிறார்
காலியான வாகனம்
செளகர்யமாக இருக்கும்
கூட்டம் நிறைந்த பேருந்தில்தான்
வாழ்க்கை இருக்கிறது

Saturday, September 15, 2007

குழந்தைகள் உலகம்

தாளில் வரைந்த
வட்டத்தைத்
தள்ளிவிட்டாள் அம்முக்குட்டி

வெளியேறிய வட்டம்
சக்கரமானது

சமையல் கட்டில்
நுழைந்த சக்கரத்தைச்
சத்தம் போட்டாள் அம்மா

அங்கிருந்து
திரும்பிய சக்கரம்
அப்பா காலைத் தட்டியது

பூனை என்று
பயந்த அப்பா
உடனே உதைத்தார்

அடிபட்டு
முனகிய சக்கரம் எழுந்து
வீடு முழுதும்
விளையாடியது

கைதட்டிய அம்முக்குட்டி
சக்கரத்தைக் கூப்பிட்டாள்

முகதிருத்தத்தில் காயமாகி
ரத்தம் துடைத்து
வெளியே வந்த அப்பா
கிறுக்கலை நிறுத்திப்
படிக்கும்படித் திட்டினார்

அப்பாவைப் பார்த்த
அம்முக்குட்டி
வரையத்தொடங்கினாள்
பெரிய மீசை கொண்ட
பூனையை

Saturday, September 08, 2007

துக்கம் தராத பாடல்

தூக்கமற்ற இரவில்
வயலினைப் பார்க்கிறன்
இசைக்கலைஞன்

நதி எனப்பாய்ந்த
இசை ஊற்றுகள்
மறுபடி நனைக்கின்றன

இமைகளை
சேர்க்க விடாத இரவு
சத்தமிடுகிறது

தனக்குள் விழித்திருக்கும்
முகம் தெரியாத ஒன்றை
வாசிக்க விரும்புகிறான்

குழந்தையாகிறது
கைகளில் வயலின்

அடிவானத்தில்
வண்ணங்கள் பூசும்
விடியலைப் பார்த்தபடி
இசைக்கிறான்
யாருக்கும் துக்கம் தராத
ஒரு பாடலை

மழை வடிவில்...

மழை வடிவில்
கடவுள் வந்திருந்தார்
ஒழுகும் கூரை
உள்ளே இருப்பவர்களைப் பார்க்க

ஞாபகம் இருக்கிறது

ஞாபகம் இருக்கிறது
அவன் காசு கேட்கவில்லை
பசியை சொல்லவில்லை
தெருமுனையில்
குளிரில் விரைத்து
இறந்து போன கிழவன்
ஒரு கை நடுங்க
மறுகை கோர்த்து
அய்யா... ஒரு போர்வை
இருந்தா கொடுங்க
பல சமயம்
என்னிடம் கேட்டது
ஞாபகம் இருக்கிறது

Tuesday, September 04, 2007

இருள்பை

திரும்பிய இரவில்
இருளைக் கத்தரித்து
ஒரு பை செய்தேன்
ஒவ்வொரு பயமாய்
அதில் போட்டு வந்தேன்
வழி நெடுகிலும்
வீட்டை அடையும்வேளை
எதிர்படும் யாரிடமாவது
பையை மாற்றிவிடத் திட்டம்
என் நீளமான விசிலுடன்
சேர்ந்திருந்தன
வேறு சில குரல்களும்
ஒன்றை ஒன்று தின்ன
ஆரம்பித்த பயங்கள்
இல்லாமல் போயின
இருள்பை பிய்ந்து
இரவோடு போனது
கதவு திறந்து
கூப்பிட்டது வீடு
விசிலில் இணைந்திருந்தது
பாடலின் பல்லவி

Wednesday, August 22, 2007

உடைந்த இசைத்தட்டு
சுழலுகிறது காற்றில்
வலி மறந்து

Tuesday, August 21, 2007

எண்களின் வலை

கணித பாடத்தின்
விடை கேட்டு வந்த குழந்தை
உம்மென்று
முகத்தை வைத்திருந்தாள்

எண்களுக்குள்
சிக்கிக் கிடந்த அவளை
வெளியில் எடுக்க
பெரும் சிரமமாயிற்று

பென்சிலைக் கடித்தபடி
சொல்லித்தரச் சொன்னாள்

என் பால்ய பூஜ்யத்தை
மறைத்துப் போட
கிடைத்தது
சரியான விடை

சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து
முத்தம் கொடுத்துப் போனாள்
பிரம்பின் பயம் நீங்கி

அவள் மேல்
விளையாடிய எண்கள்
காலடியில் கிடந்தன
சத்தங்கள் அற்று

Sunday, August 19, 2007

இழந்த மரம்

அவசரமாய் காகிதம் கிழித்து
காது குடைந்தபடிப் பார்த்தேன்
நான் கிழித்திருந்தது
மகள் வரைந்த மரத்தை
என்னால் தன் மரம்
செத்துப்போனதாக
அழுது புரண்டாள்
நிறுத்த முடியவில்லை
கையிலிருந்த காகிதத்தில்
பிய்ந்துபோன கிளை
கிளையை விட்டு
வெளியேறிய பறவைகள்
அவளோடு சேர்ந்து
சண்டைக்கு வந்தன
கிளை விரிந்து காடானது
காட்டின் சத்தம்
காதை உடைத்தது
நேரமாயிற்று அடங்க
குழந்தையின் அழுகையும்
காட்டின் கோபமும்

Saturday, August 04, 2007

தூறலைப்பிடிக்கும் சிறுமி

கை நீட்டி
தூறலைப் பிடித்துக்கொண்டிருந்த சிறுமி
கண்ணில் மின்னல் பொங்கச் சொன்னாள்
இந்தத் தூறலை வைத்து
மழையை வளர்க்கப்போகிறேன்
விரலிடுக்கில் துளிகள் நழுவ
முகம் சாய்த்துக்
கை குவித்தாள்
பள்ளி விட்டு வந்த
ஒரு நாளில்
சிறுமியிடம் கேட்டேன்
எந்த அளவிற்கு
மழை வளர்ந்திருக்கிறது என்று
தன் புத்தகப் பையில்
சில குட்டி மேகங்களைச் சேர்த்து
வைத்திருப்பதாகப் பூரித்தாள்
நனைய மழை வேண்டுமா
பார்த்தபடி கேட்டாள்
அப்போது எட்டிப்பார்த்த
வானவில் துண்டு சிரித்து
மறைந்து போனது

( செப்டம்பர் 2007 'புதிய பார்வை' இதழில் வெளியானது)

Saturday, July 21, 2007

உன்னைத் துப்பாக்கியால் விசாரிக்கப்போகிறேன்

உன்னைத் துப்பாக்கியால் விசாரிக்கப்போகிறேன்
என்றது குரல்
துப்பாக்கி பிடித்த கரம் தெரிந்தது
மங்கலான வெளிச்சத்தில் அசைந்தது
உயிர் மீது வைக்கப்பட்ட குறி என்பதால்
பயம் சகதியாகி உள்ளிறக்கியது
தொடங்கியது விசாரணை
உன்னை சுடுவதில் தவறில்லை
நீ நாட்களை சோம்பேறித்தனத்துடன் துவக்குகிறாய்
காலைச் சூரியனைப் பார்த்ததில்லை
சுயநலத்தின் வலை
உன் நகர்வுகளைப் பின்னுகிறது
துப்பாக்கியின் கோபம் கூடியது
நேற்று கூட
காசு கேட்ட ஒரு சிறுமியை
உற்றுப்பார்த்துப் போடும் போது
கையை அழுத்திப்பிடித்தாய்
பூவை
நிலவை
நாய்க்குட்டியை
நீ ரசித்ததில்லை
இன்னும் விசாரணையை
நீட்ட விரும்பவில்லை
தீர்ப்பைத் தரப்போகிறேன்
சொன்ன துப்பாக்கி வெடித்தது
அதிர்ச்சியில் உறைந்து எழுந்தேன்
வலி
ரத்தம்
மரணம்
எதுவுமில்லை
இரவைத் துளைத்திருந்தன
துப்பாக்கியின் தோட்டாக்கள்

Wednesday, July 18, 2007

சந்திப்பு

ஒரு ரயில் பயணத்தில்
சந்திக்க நேரிட்டது
கணக்கு ஆசிரியரை

பள்ளி நாட்களுக்குள்
போய் வந்தோம்

இப்போதும்
என்னால் உணரமுடிந்தது
அவர் பிரம்பின் வலியை

வாழ்க்கையை
சரியான கணக்கில்
வைத்திருக்கிறாயா என்றார்

ஆமாம் என்றேன்

கண் மூடி
தலை அசைத்து
ரயில் சத்தத்தை ரசித்தார்

என் நிறுத்தம் வர
விடை பெற்றேன்

கண்ணாடியை சரிசெய்து
மீண்டும் ஒரு முறை
என்னைப் பார்த்து சிரித்தார்
பள்ளி நாட்களில்
சிரித்தே பார்த்திராத
கணக்கு ஆசிரியர்

Thursday, July 12, 2007

வெயில் பட
சுவரில் ஓவியம்
சிலந்தி வலை
சிரித்த குழந்தை
எச்சிலில்
கடவுள் நதி

Saturday, July 07, 2007

லாந்தர் விளக்கில்
மின்சாரம் கண்டுபிடித்தவரைப்
படிக்கும் சிறுமி

Saturday, February 17, 2007

வெற்றுத்தாள்

வரைந்த ஓவியத்தின்
சில பகுதிகளைத்
திருத்த
அழித்தேன்

ஓவியத்தை புதுபிக்க
எடுத்துக்கொண்ட முயற்சியில்
அழித்ததே அதிகமானது

தின்று முடித்தது ரப்பர்
மொத்த கோடுகளையும்

வெற்றுத்தாளில்
பரவி இருந்தது
நிசப்தம்

பாரம் இறங்கிய
பரவசத்தில்
படபடத்தது தாள்
காற்றில்

Monday, January 22, 2007

புகைப்படம்

புன்னகைக்கச் சொல்லி
எடுத்தவரின் புன்னகையும்
இருக்கிறது புகைப்படத்தில்

Tuesday, January 09, 2007

மனம் தயாரித்த கதை

மனம் தயாரித்த
கதைக்குள் போனேன்
வரவேற்றப் பெரியவர்
பூச்செண்டு கொடுத்தார்
ஏதோ ஒரு பக்கத்தில்
சின்னப்புன்னகை
குழந்தைகள் தம்
கால்பந்து விளையாட்டைப்
பார்க்க வைத்தனர்
கதைக்குள் நிறைய
சந்திப்புகள்
மரணம் பற்றிச் சொன்னது
உடைந்த பனித்துளி
கை நீட்டிய இடமெல்லாம்
பழங்களும் பூக்களும்
ஒரு அத்தியாயத்தில் அருவி
முழுதும் நனைத்தது
கையில் சிக்கிய மீன்கள்
விரலை விட்டு வெளியேறின
கதையின் சில வார்த்தைகள்
மீன்களின் கண்களில்
முடியாத கதையில்
எங்கிருக்கிறேன் என்று
தெரியவில்லை
உள்ளே வந்த குரல்
இழுத்துப்போட்டது
மீன் கொழம்ப கொஞ்சம்
பையனுக்கும் வைங்க

மழையில்

கையிருக்கும் முகவரி
கரைகிறது மழையில்
கால் வழி ஓடும் நதியில்
சொல்லிச்செல்கின்றன மீன்கள்
புதுப்புது விலாசங்களை

Tuesday, January 02, 2007

நூலகத்தை எடுத்துப்போகும் பெண்

தாளலயத்துடன்
ஆடும் ஊஞ்சலைப்போல
அங்குமிங்கும் போய்
வாயில் கவ்வி இருக்கும்
பென்சிலால்
குறிப்புகள் எடுத்து
புத்தகங்கள்
மாறி மாறி வைத்து
கிடைக்கும்
இடம் அமர்ந்து
ஜன்னல் ஒளி ரசித்து
முகத்தின் முத்துக்கள் துடைத்து
கண்களை
எழுத்துக்குள் குவித்து
சொற்களை சுவாசித்து
கடிகாரம் பார்த்து
வேகம் கூட்டி
இன்னும் புத்தகம் தேடி
நடையுடன் ஓடி
ஒரு கணத்தையும்
சேதமாக்காமல்
நூலகத்தையே தனக்குள்
கொண்டுபோகிறாள்
ஒரு பெண்
அவளைபடித்துக் கொண்டிருக்கும் நான்
கை இருக்கும் புத்தகத்துக்கு
எப்படி திரும்ப