Thursday, November 29, 2007

தற்கொலை செய்ய இருந்த
மின் விசிறியிலிருந்து வெளியேறுகின்றன
மரணத்தின் புழுக்கங்கள்

Wednesday, November 28, 2007

எறும்பின் சொற்கள்

பிரித்து வைத்திருந்த
புத்தகத்தில் நிகழ்ந்தது

எழுத்துக்கள் எல்லாம்
எறும்புகளாயின

வெள்ளையானது பக்கம்

தாளில் ஒளிந்திருக்கும்
எதையோ கண்டுபிடிப்பதுபோல்
அங்கும் இங்கும் வேகமாயின

எறும்புகளின் சந்தையானது
விரித்து வைத்த புத்தகம்

மூடினால் நசுங்கி
இறந்து போகலாம்

புத்தகம் திறந்திருக்க
அறையை மூடிவிட்டுக் கிளம்பினேன்

திரும்பியபோது
அப்படியே இருந்தன எழுத்துக்கள்

எறும்புகள் எதுவுமில்லை

பிரமிப்பிலிருத்து மீண்டு
நகர்ந்தது பார்வை
கவிதையின் தலைப்புக்கு

எறும்பின் சொற்கள்

எறும்பைக் கொல்லாத
ஒரு மனிதனை
தான் இறந்து போவதற்குள்
பார்க்க வேண்டும் என்று
ஒரு எறும்பு சொல்வதுபோல்
முடிந்திருந்த்து

புத்தகத்தை மூடாமல்
அப்படியே பார்த்தேன்

தாளை சுதந்திரவெளியாக்கி
போனது ஒரு எறும்பு

Tuesday, November 13, 2007

கனவிலிருந்து...

கனவிலிருந்து
வெளியேறிய தேள்
இரவைக் கொட்டும்
விஷமற்ற புன்னகையில்
அதிகாலை ஒளி

மழை

நான் இருந்த இடத்தில்
இல்லாதபோது
பெய்தது மழை
இல்லாத என்னை
நனைத்தபடி
பார்க்கிறது மழை
ஒதுங்கிய என்னை

Tuesday, November 06, 2007

கூட்டம் நிறைந்த பேருந்து

திரும்புகிறது பேருந்து
நின்றபடியே பெரியவர்
எழுந்து இடம்தர
யாருக்கும் இடமில்லை
மனதில்
லேசாக சாய்கிறார்
கண் மூடித் திறக்கிறார்
நெறிசலில் நெளிகிறது
நின்று நகர்கிறது
இன்னும் வீங்கிப் பேருந்து
இருமலைத் துண்டால் மூடுகிறார்
கசியும் சத்தம்
உள் முழுதும்
வருகிறது என் நிறுத்தம்
இருக்கை பெரியவருக்குதான்
புன்னகைத்து
உட்காரச்சொல்லி
இறங்குகிறேன்
போகிறது பேருந்து
பெரியவர் இல்லை
கூடவே இறங்கியவர்
சொல்லிப் போகிறார்
காலியான வாகனம்
செளகர்யமாக இருக்கும்
கூட்டம் நிறைந்த பேருந்தில்தான்
வாழ்க்கை இருக்கிறது