Wednesday, December 26, 2007

நான்...

நான்
நான்
நான் நான் என்று
நுரைத்துப் பொங்க
நான்களைச்
சேமித்துவைத்தேன்
குறைவின்றி
கூடித்திமிறி
குதித்தாடி வெளியேறின
ஒருநாள் எல்லாம்
என்னை
உடைத்துப்போட்டு

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Monday, December 24, 2007

கிளியின் புன்னகை

கூண்டு கிளியுடன்
வருவேன் என்று
காத்திருக்கும்
மகளிடம் போய்
எப்படிச் சொல்வேன்
வாங்கி வரும் வழியில்
கிளியை வானம் விட்டதும்
கூண்டினை தூக்கி எறிந்ததும்

கதைபோல் மகளிடம்
சொல்லும் போது உணரலாம்
பறவையின் சுதந்திரம்

அப்போது அவள் உதட்டில்
வந்து அமரும்
அந்த கிளியின் புன்னகை

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Wednesday, December 19, 2007

எல்லா கதவையும்
திறந்து வைத்திருக்கிறாள் சிறுமி
வரைந்த வீட்டில்

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியானது)

Tuesday, December 18, 2007

அவருக்காக
நான் மன்னிப்புக் கேட்டேன்

எனக்காக
யாராவது கேட்பார்கள்

தவறுகள் சுற்றித்திரியும்
பயமற்று

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியானது)

Sunday, December 09, 2007

கதையின் பயணங்கள்

ரயில் பயணத்தை அழகாக்கியவர்
கதை சொல்லிக்கொண்டே வந்தார்

ஒப்பனைக் கலப்பில்லாத
அவர் சொற்களிலிருந்து
வெளியான உயிர்
எங்களோடு பயணம்
செய்வது போலிருந்தது

மலைக்குகை தாண்டியது ரயில்
சத்தமிட்டபடி

கதையை சீக்கிரம்
முடித்து விடுவீர்களா என்றேன்

நான் இறங்குவதற்கு முன்பா
நீங்கள் இற்ங்குவதற்கு முன்பா
யோசனைகளை கண்ணில்
குவித்தபடி கேட்டார்

அவரும் நானும்
இறங்கிய பின்னும்
கதை தொடர்ந்து கொண்டிருந்தது
பயணத்தை
வேறு வேறு பயணிகளோடு

நாக்குகள்

நாக்கால் மூக்கைத்தொட்டு
வேடிக்கைக் காட்டியவனை
எல்லோரும் பார்த்தார்கள்

அவன் தட்டு
காலியாக இருந்தது

சிரித்து கைதட்டி
திரும்பச் செய்யச் சொன்னாள் சிறுமி

சிறுமிக்காக
மீண்டும் செய்தான்

வீட்டிலிருந்த யாராலும்
முடியவில்லை

தோல்வியுடன் திரும்பின
நாக்குகள்

கடுகடுப்பாய் இருந்தவர்
நாக்கைக் கடித்துக்கொண்டார்

பசிக்கு ஏதாவது போடவா
கேட்டார்கள்

சிரித்து மகிழ்ந்த சிறுமியால்
பசியடங்கிப்போன அவன்
அவளுக்கு ஒரு முத்தம்
தர வேண்டும் என்றான்

கதவு மூடப்பட்டது

சென்று கொண்டிருந்த
அவனோடு வந்து
மறைந்து போனது
சிறுமியின் அழுகுரல்

Thursday, December 06, 2007

கேட்காதே...

கடந்து போகும் அவனைப்
பார்த்திருக்கிறேன்
பல முறை

ரகசியமாய் பேசிச்செல்வான்

ஒரு நாள்
கேட்க நேரிட்டது
அவன் சொன்னதை

பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை

அவன் வரிகளை
மெளனமாய் பார்ப்பதற்குள்
போயிருந்தான்

ஒரு மழைநாளில்
அவனுக்குத் தேநீர்
வாங்கித் தந்து கேட்டேன்

உரத்துப் பார்த்தான்

பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை

வாயிலிருந்து நெருப்பு
சுழன்று வந்து
அவனுள் போனது

இன்னொரு தேநீருக்குப்பின்
அதன் பொருள் கேட்டேன்

கேட்காதே
நீயே தேடு என்றான்

சிரித்தான்
சத்தமாய் சொல்லிச் சென்றான்

நீ பிறக்காதவன்
நான் இறக்காதவன்
துடைக்கும் புகைப்படம்
ஞாபக தூசிகள்
திறக்கும் காலம்