Sunday, June 29, 2008

அன்பின் கையெழுத்து

ஒரு மழை நாளில்
ஓர் குடைகீழ்
நாம் நிற்க
என் கையெழுத்திட்டு
நான் உனக்கு
வழங்கிய புத்தகம்
இதோ இத்தனை
வருடங்கள் கழித்து
ஒரு பழைய
புத்தகக் கடையில்

வாங்கிச் செல்கிறேன்

புத்தகத்தில் அழிந்திருக்கிறது
என் பெயரும்
நம் அன்பும்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

Wednesday, June 25, 2008

நீங்களும் ஒரு பறவையும்

நீங்கள் ஒரு பறவையை
சுடும்போது
கவனத்துடன் குறிவைக்க வேண்டும்

தோட்டா பட்டதும்
செத்து விழ வேண்டும் பறவை

மீதி உயிர் இருந்து
மண்ணில் புரண்டு
மெதுவாய் போகும்படி ஆகக்கூடாது

சுடப்பட்ட பறவை
விழுந்த பிறகு
சில நொடிகள் முடிந்தால்
அஞ்சலி செய்யலாம்

பறவையின் இன்ன பிற
உறவுகளுக்காக
ஒரு வருத்தச்சொட்டு சிந்தலாம்

பின் பறவையை
எப்படி சமைப்பது
என்னென்ன செய்வது
என்பது பற்றி பேசலாம்

மதுக் கோப்பைகளின் நடுவே
மேசை மீது
நிரப்பப்பட்டிருக்கும் கறி

நீங்கள் சுவைக்கிறீர்கள்
பற்களில் நசுங்கும்
பறவையின் சத்தம் கேட்டபடி

அப்போது உங்கள்
கண்களை கலைத்துப்
போகிறது ஒரு பறவை

உங்கள் துப்பாக்கியை
முகம் திருப்பி வைத்து
காற்றில் நீந்தி
வானத்தில் அதன் சிறகுகள்
நடனமிடுவதைப் பாருங்கள்
முடிந்தால் ரசித்து

Thursday, June 19, 2008

பார்த்தபடி படிக்கட்டுகள்

லிப்ட் வாய்க்கப் பெறாத
மூன்றாவது மாடி

மூச்சு இறைப்பதைப்
பார்த்தபடி படிக்கட்டுகள்

காலெடுத்து வைக்க
முடியும் அப்பார்ட்மெண்ட்

இருந்து பார்த்து
ஊருக்குப் போய்விட்டார் அப்பா

அவர் விட்டுச் சென்ற
வார்த்தைகளில்
விதிக்கப்பட்ட இந்த வீடெங்கும்
பரவிக் கிடக்கும்
எங்கள் கிராமம்

Wednesday, June 18, 2008

பொம்மைகள்

குழந்தை உடைத்த
பொம்மையிலிருந்து
குழந்தைக்கு கிடைத்தன
மூன்று பொம்மைகள்

கூண்டிலிருந்து...

தொழில் மாற்ற
உத்தேசித்து
கூண்டைத் திறந்து
போகச் சொல்கிறான்
ஜோஸ்யக்காரன்

அவன் காலை
சுற்றி சுற்றி வருகிறது
சுதந்திரம் மறந்த கிளி

கூர்காவின் கடிதம்

ஒருவன் கடிதம் படிக்க
மற்றவன் கேட்க
இசைக் கச்சேரி போலிருந்தது
கூர்காக்களின் மொழி

கேட்டுக் கொண்டே வந்தவன்
குழந்தையை கைகளில்
கொஞ்சுவது போல்
பாவனை செய்து
ஆட ஆரம்பித்து சிரித்தான்

தான் அப்பா ஆனதாக
மார் தட்டி
சத்தம் போட்டான்

ஓடிப்போய்
மிட்டாய் வாங்கி வந்து
எனக்கும் தந்ததில்
நினைத்தது சரி என்று
தெரிந்தது

தூர உணர்வுகளை
கொட்டிக் கொண்டிருந்தது
கடிதம்

என் நடை முடிந்து
வருகையில்
போயிருந்தான்
கடிதம் படித்தவன்

கடிதத்தின் எழுத்துக்களில்
விளையாடியபடியே இருந்தன
அமர்ந்திருந்த
கூர்காவின் கணகள்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)