Friday, December 30, 2011

தீவிரம்

உன் தீவிரம்
இரவைக் குலுக்குகிறது

சுவடற்று கிடக்கிறேன்
கனவின்
பின் வாசலில்

Wednesday, December 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

786-

நினைவு
தள்ளி விட
நினைவைத்
தள்ளிவிட்டு
நின்றேன்
விழாமல்

787-

எந்த வழியாக
வந்தீர்கள்

நான் உண்டாக்கிய
வழியாக

788-

நீங்கள்
சொல்லி இருக்கலாமே
என்றேன்

நீங்கள்
கேட்டிருக்கலாமே
என்றார்

789-

ஏதோ ஒரு கவிதையில்
இரவை
கிழித்தெறிந்தபோது
விடிந்திருந்தது

790-

விழித்திருக்கச் சொல்லவில்லை
இந்த நள்ளிரவு
நான்தான் தூங்காமல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இருளின் பிம்பங்களை

791-

மறைக்க
மறைத்தது
மறைத்தது
என்னை

792-

கொல்வதற்கு முன்
ஆடு வாங்க வந்தேன்

கொன்று விட்டார்கள்
இறைச்சி வாங்கிச் சென்றேன்

793-

சவப்பெட்டியை
பிணம் அசைப்பதில்லை
உன் வரியில்
உயிரில்லை

794-

தனிமையிடம்
தோற்றுவிடுகிறேன்

தனிமையும்
தோற்றுவிடுகிறது

சரியான விகிதத்தில்
வெற்றியைப்
பகிர்ந்து கொள்கிறோம்
இப்படி

795-

எல்லாமே
சொல்லப்பட்டுவிட்டன

எவ்வளவோ சொல்லியும்
பேனாவின் நாக்கு
சத்தமாய் உச்சரிப்பதை
நிறுத்தக்காணோம்

வருகிற வழியில்

வருகிற வழியில்தான்
நண்பர் வீடு

நண்பர் நட்பை
முறித்துக்கொண்டார்

நான் வழியை
முறித்துக்கொள்ளவில்லை

கை நீட்டும் குழந்தை

கை நீட்டுகிறது குழந்தை
ஒன்றுமில்லை
உள்ளங்கையில்
முத்தம் மட்டும்
வைக்கிறேன்
பெரும் சந்தோஷத்துடன்
ஓடுகிறது
உலகைக் கொண்டு
செல்வதைப் போல

திரும்பிய குழந்தை

பள்ளிச் சென்று
திரும்பிய குழந்தை
நனைந்திருந்தாள்

துடைத்தபடியே
பள்ளியில் நடத்தியது பற்றி
கேட்கிறாள் அம்மா

மழை கற்றுக்கொடுத்தது பற்றி
சொல்கிறாள் குழந்தை

Tuesday, December 27, 2011

கடைசி உதடு

பெட்டி
பெட்டி
பெட்டி
பெட்டி
என உதடுகள்
மாறி மாறி
சொல்ல
கடைசி உதடு
சொல்லி
முடிக்கும்
சவப்பெட்டி

Sunday, December 25, 2011

குடித்த பின்

குடித்த பின்
உன்னை உடைத்து விடுவேன்
மதுக்கோப்பையிடம் பேசினேன்

கேட்டு மெளனமாய்
சொன்னது

அப்படியே உடைத்தாலும்
உன்னைப் போல்
சிதைந்து போகமாட்டேன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

780-

யார் என் இலையில்
பசியைப்
பரிமாறியது

781-

மனதில்
அறியப்படும் சுமை
தோளுக்கு பாரமாக
இருப்பதில்லை

782-

என் ஆயுதம்
கீழே கிடந்தாலும்
கையெட்டும் தூரத்திலேயே
இருக்கிறது

783-

நீங்கள் எறிந்த கத்தியை
உங்கள் மேல்
திருப்பி எறிகிறேன்
சரியாக
குறி பார்த்து

784-

நான் தூங்கி இருக்கக்கூடாது
என் வேடத்தில்
நுழைந்து விட்டவன்
எனது காட்சியில்
நடித்துக் கொண்டிருக்கிறான்

785-

உருகுவதையே
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒளியைப் பார்க்கத்
தவறிவிட்டேன்

Wednesday, December 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

775-

கவிதையின்
கீழிறங்குகிறது ரத்தம்
கொல்லப்பட்டவனும் எழுதியவனும்
ஒன்றானவனாக இருக்க
கீழிறங்கி
நீள்கிறது ரத்தம்
கவிதையின்
கடைசி வரியாய்

776-

உன்னிடம்
பதில் இல்லையா
பதிலிடம்
நீயில்லையா

777-

நான் அழுவதை
கண்ணாடியில் பார்த்தபோது
கண்ணாடிப் பார்த்தது
நான் புன்னகைப்பதை

778-

உடல் ஒரு தீப்பெட்டி
ஒவ்வொரு குச்சியாய்
எரித்துக் கொண்டிருக்கிறேன்

779-

உருண்டோடும் திராட்சைகள்
விளையாடும்
பழத்தோட்டம்

Saturday, December 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

773-

இந்த முகங்களில்
எது என்
சொந்த முகம்

774-

அங்கும் இங்கும்
தவ்வும்
தூரம் போகாத்
தவளை மனம்

Thursday, December 15, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

771-

உன் பெரிய
கனவென்ன

சின்னக் கனவை
பெரிதாக்குவது

772-


கூழாங்கல்லைப் போல்
உருண்டோடி விடுபவர்களை
மலைப்பயணத்தில்
துணைக்கழைத்துச்
செல்லாதீர்கள்

Tuesday, December 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

769-

மெய்யறிய
பொய்யானேன்

770-

இந்த மலை விளிம்பில்
இரண்டு சாத்தியம்

விழுந்து போகலாம்
பறந்து போகலாம்

விழுந்து போக
இருந்த என்னை
சுமந்தபடியே
பறந்து போனேன்

Monday, December 12, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

763-

இந்த வரி
எழுதாதபோது
இன்னும் அழகாகவே
இருந்தது

764-

வாள் எனும் சொல்லை
உரக்கச் சொன்னேன்
காற்றை கிழித்து
அடங்கியது எனக்குள்

765-

வரைந்த தூக்குக்கயிறு
எறும்பு இழுத்துப் போக
நேராச்சு

766-

பொருளற்ற கவிதையில்
நானே
பொருள்

767-

முடியவில்லை ஆட்டம்
ஒப்பனையை
இறக்கி வைக்காதீர்கள்

768-

என்னை வீழ்த்துவதற்கான
வீயுகங்களை வகுக்கிறீர்கள்
அவைகளை நான்
கடந்து போவது தெரியாமல்

Sunday, December 11, 2011

ரொட்டித் துண்டு

பசியே சொல்கிறது
கொஞ்சம் ரொட்டித்துண்டை
மீதம் வை
அடுத்த வேளைக்கு
எனக்கு வேண்டும்

Wednesday, December 07, 2011

பூ

பூவைக் கிள்ளி முடித்த குழந்தை
இதழ்களில் தேடுகிறது
பூவை

Tuesday, December 06, 2011

முடிந்துவிடும்

மழையைப் பார்த்தபடியே
தேநீர் அருந்துகிறாள் மூதாட்டி
தேநீர் முடிவதற்குள்
மழை முடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

760-

பிரபஞ்சம் என்னைக்
கல்லாக எறியும்

பூவாகத் தாங்கிக்
கொள்ளும்

761-

மனதில் தொடங்கி
உடலில் முடியும்
அலைபாய்தல்

762-

என் பதிலை
கேள்வியாக்குகிறீர்கள்
அதற்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் எனக்கில்லை

போ

தற்கொலையே
போ

தானாக
பூத்தது போல
அதுவாக உதிரும்
இந்த மலர்

Saturday, December 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

755-

நான் நள்ளிரவில்
பகலை
நெய்பவன்

756-

கேட்காத இடத்தில்
கொட்டுவதும்
கேட்கும் இடத்தில்
துப்புவதும்
மனிதர்கள் செய்யும்
அபத்தம்

757-

நான் இறப்பதை
அனுமதிக்கவே மாட்டேன்
இறக்கும் வரை

758-

கால்களுக்குப்
பிடிபடாத பாதை என்று
எதுவுமே இல்லை

759-

ஓய்வு கொள்ளும்
உறங்காது
ஆயுதம்

Friday, November 25, 2011

நம்பிக்கை

பூவு வாடிப்போறதுக்குள்ள
வித்துடுவிங்களாப் பாட்டி

வாங்கிட்டுப் போறவங்களுக்கும்
வாடித்தானப்பா போவும்

வியாபாரத்துல சேதாரத்த
முதல்லயே
பாக்கக்கூடாது தம்பி

கட்டிக் கொடுக்கிறாள் பாட்டி
வாடாத நம்பிக்கைகளுடன்

அதே வரி

மருத்துவமனைக்கு வெளியே
காப்பியோ டீயோ
வாங்கிய மூதாட்டி
வாகனங்கள் பார்த்து
மூச்சிறைக்கக் கடந்து
புலம்பியபடியேப் போகிறாள்
புள்ளப் பொழைச்சிக்கணும்

அவசர கதியில்
ஒரு கணம் நின்று
பிரார்த்தனைச் செய்யத்
தோன்றுகிறது

இழுக்கும் வேகத்தில்
நிற்காமல்
உச்சரித்து ஓடுகிறது மனம்
அதே வரியை
புள்ளப் பொழைச்சிக்கணும்

Wednesday, November 23, 2011

கல்

உங்கள் மீது
எறிய சேர்த்த கல்
குவிந்து கிடக்கிறது

அதனுள்ளே
என்னுயிர்
புதைந்து கிடக்கிறது

Tuesday, November 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

749-

என்ன மிச்சமிருக்கிறது
என்ற கேள்வியே
மிச்சமிருக்கிறது

750-

வாழ்க்கையின் உயரம்
அளவிட முடியாதது
மரணத்தின் நீளம்
சவப்பெட்டி
அளவே கொண்டது

751-

கண்ணாடிப் பெட்டிக்குள்
இறந்தவரின் முகமும்
மரணத்தின் முகங்களும்

752-

உள்ளிருந்தது
எழுத்தின்
உள்ளிருந்தது

753-

நிர்வாணத்தில்
அழகாய்
ஆதி உலகம்

754-

உன் கனவைத்
தின்றேன்
ஆப்பிள் சுவை

Sunday, November 20, 2011

பட்டாம் பூச்சியே

பட்டாம் பூச்சியே
உன் பெயரைச்
சொல்லிச் செல்

காற்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

742-

ஊனம் அழி
ஞானம் அறி

743-

மனதில் சேறு
உதட்டில்
சந்தனப் புன்னகை

744-

மிதக்கிறேன்
மேகத்தைப்
பிய்த்துப் போட்டபடி

745-

இறந்து கிடக்கிறேன்
என் உயிரின்
மேல்

746-

தயக்கம்
ஒருவித
சுய மரணம்

747-

பயணங்களைத்
தின்றபடி ஓடுகிறது
என் குதிரை

748-

கிள்ளி எறிந்த சொல்
வலி சொல்ல
எப்படி மொழி பெற்றது

Friday, November 18, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

736-

என் பெயரின் பின்னால்
ஒளிந்திருக்கும்
குற்றங்களின் பெயர்கள்

737-

மன்னிப்பிலிருந்து
மறுபடியும்
தவறுக்குள்
நுழைந்துவிட்டேன்

738-

அவனுள்
அணைந்து போகாத நெருப்பு
எரிந்துகொண்டிருந்தது

அவன்
அணைக்க விரும்பினாலும்
தன்னை அணைத்துக்கொள்ள
விரும்பாத
நெருப்பு அது

739-

நான் போய்தான்
தீரவேண்டும்
நீங்கள் துண்டு துண்டாக
வெட்டினாலும்
மரணமாகவாவது

740-

நமது வேடங்கள்
தீர்மானிக்கப்பட்டு விட்டன
ஒப்பனைக்குத்தான்
நேரம் பிடிக்கிறது

741-

கையெட்டும் தூரத்தில்
வைத்துவிட்ட நினைவைத்
தேடுகிறேன்
எங்கெங்கோ அலைந்து
என்னையே மறந்து

Sunday, November 13, 2011

*மகளின் கட்டளைகள்

விடுமுறைக்கு
ஊருக்கு வந்த மகள்
அப்பாவை போனில் கூப்பிட்டு
உரக்கச் சொன்னாள்

அப்பா நான் வர்ற வரைக்கும்
மீன் தொட்டி மீன்கள
கவனமாப் பாத்துக்குங்க
அதுங்ககிட்ட
அடிக்கடி பேச்சுக்குடுங்க

பால்கனிச் செடிக்குத்
தண்ணி ஊத்துங்க

படிக்கட்டு பக்கம்
வர்ற அணிலுக்கு
தானியம் போடுங்க

மாடியில வந்து
உட்கார்ற காக்காவுக்கு
சோறு வைங்க
பாக்காம விட்றாதிங்க

நாய்க்குட்டிய
வாக்கிங் கூட்டிட்டுப் போங்க
கொஞ்சம் தூரமாப்பா
சின்னதா சுத்திட்டு வரவேணாம்

அப்புறம் ஜன்னலோரத்துல
வந்து உட்கார்ற புறா
அதுவா பறந்து போயிடும்
விரட்டி விட்றாதிங்க

என் டேபிள் மேல
ஒரு யானை
வரைஞ்சி வச்சிருக்கேன்
அத எடுத்து
பத்திரமா உள்ள வைங்க
யானைக்கு ஒரு பேரும்
யோசிச்சு வைங்க

எல்லாவற்றையும்
பொறுமையாகக்
கேட்டுக்கொண்ட அப்பா
மெல்ல
மகளின் வனத்திற்கு
காவலாளியாக
மாறத் தொடங்கினார்

*கல்கி இதழில் (20.11.2011) வெளியான கவிதை

Monday, November 07, 2011

அவர்கள்

யார் யாரையோ
புனிதர்களாக்கி விட்டோம்
அவர்கள் தங்களைக்
கடவுளாக்கிக் கொண்டார்கள்

போய்க் கேள்

கோபப்பட்டு
என்ன ஆகப்போகிறது என்று
ஒதுங்கிப்போகும் நண்பனே
கேள்
கோபப்படாமலும்
ஒன்றும் ஆகப்போவதில்லை
போய்க் கேள்

Friday, November 04, 2011

திரும்பவில்லை

எல்லோரும்
அவரவர் இடத்திற்குத்
திரும்பி விட்டார்கள்
கடவுள் மட்டும் இன்னும்
கோயிலுக்குத்
திரும்பவில்லை

யாரோ தொலைத்த குழந்தை

யாரோ தொலைத்த குழந்தை
என்னிடம் கிடைத்த
கொஞ்ச நேரத்தில்
அன்பாகி இருந்தது

கதை கேட்டது
கைதட்டிச் சிரித்தது
பலூன் உடைத்தது
பெயர் சொன்னது
கட்டிப் பிடித்துக் கொண்டது
என்னையும்
குழந்தையாக்கியது

தொலைத்தவர்களை
கண்டுபிடித்து
குழந்தையைத் தர
நிம்மதியும் சந்தோஷமும் சேர
கையெடுத்துக் கும்பிட்டுப் போயினர்

மறுபடி
குழந்தை தொலைந்து போனது
என்னிடமிருந்து

Thursday, November 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

733-

உடல் நடுங்க
பார்க்கிறது யானை
மதம் பிடித்த பாகனை

734-

அனுமதி பெற்று
உள்ளே வரவும்

அனுமதி பெறாமல்
வெளியேறினேன்

735-

அடித்து திருத்தி
எழுதிய கடிதம்

அடித்தலில்
போயிருந்தன உண்மைகள்

திருத்தலில்
மேலெழுப்பின பொய்கள்

வினாடிகள்

புணர்தலின் நிமித்தம்
ஒரு பெண்ணோடு
பேச விரும்புகிறவனின் நட்பு
விந்துக்கான வினாடிகளோடு
முடிந்து விடுகிறது

Tuesday, November 01, 2011

யாருக்கும் தெரியாமல்

விளை நிலங்களில் எல்லாம்
கட்டிடம் முளைப்பதைப்
பார்த்த விவசாயி
கலங்கிப் போனான்

யாருமற்றப் பயிரைப் போல
வாடிப் போனான்

கட்டிடங்கள்
நிமிர்த்தி அடுக்கி வைக்கப்பட்ட
சவப்பெட்டிகளாக
அவனுக்குத் தோன்றின

பேச்சற்று எல்லோரும்
வேடிக்கைப் பார்ப்பது ஏன்

எதுவும் கேட்காமல்
போவது ஏன் என

ஆயிரம் கேள்விகள் கேட்டு
தனக்குள் அறுந்து போனான்

இளைஞர் சந்ததிக்கு
எச்சரிக்கை கடிதமும்

கையாலாக சமூகத்திற்கு
கண்டனக் கடிதமும்
ஒன்றாய் எழுதி வைத்துவிட்டு
தூக்கில் தொங்கினான்

அதிகாலை பிஞ்சு ஒளியில்
உண்மை போல ஆடியது
அவன் உடல்

யாருக்கும் தெரியாமல்
அவன் கடிதம்
களவாடப்பட்டது

அவன் மரணம்
புதைக்கப்பட்டது

Monday, October 31, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

730-

நான் வளர்க்கும்
பெருங்கனவு
எனை
வளர்த்தெடுக்கும்
உலகளவு

731-

சிறு கல்
எறி

பெரு மலை
பிடி

732-

ஆத்மாவைத்
தொலைக்காதவனை
பிரபஞ்சம்
தொலைப்பதில்லை

*குட்டி தேவதைகள்

மருத்துவர் அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்

என் எண் வரவில்லை
அதனால் இன்னும் கூப்பிடவில்லை

வலியை ஆறுதல்படுத்தியபடி
நினைவால் தடவிக்கொடுத்தபடி
அமர்ந்திருக்கிறேன்

மருந்து நெடி கூடிய அந்த ஹாலில்
ஆடி ஓடிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி

அம்மாவிடம் ஓடுவதும்
அவள் கையிலிருக்கும் குழந்தையை
முத்தமிடுவதுமாய்

அந்த பட்டாம் பூச்சியின் அசைவுகள்
வலியை மறக்கச் செய்கின்றன

பரவும் மணம் போல
அவள் வாசனையை
எல்லாக் கண்களும் முகர்கின்றன

அவள் பெயர் கேட்கத் தோன்றுகிறது

குட்டி தேவதைகளுக்குப் பெயர் எதற்கு
மனம் ஒரு பதிலையும் தருகிறது

ஒருவர் அவளைப் பிடித்து பெயர் கேட்கிறார்

சம்பிரதாயக் கேள்விகளை நிராகரிப்பவள் போல
சொல்ல முடியாது எனச் சிரித்தபடியே ஓடுகிறாள்

அந்த சிரிப்பில் சிதறி விழுகின்றன
சில பெயர்களும் கொஞ்சம் இசையும்

என் கையிருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஓடி வருகிறாள்

இதில் பொம்மைகள் இல்லையே என்கிறாள்

உள்ளே பொம்மைக் கதைகள் இருக்கின்றன என்கிறேன்

ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறாள்

என் பொய்கள் ஏதோ ஒரு கதையை
அழைத்து வரத் தொடங்கினேன்

ஒரு தேசத்துல ஒரு குட்டி இளவரசி இருந்தா
அவ பேரு…பேரு…ம்….சின்ட்ரலா…

அம்மா இந்த மாமா என் பேரச் சொல்றாரு
எனச் சொல்லியபடியே ஓடினாள்

உண்மையான என் பொய்க்கு
நன்றி சொல்லியபடியே
கண் துளியைத் துடைக்க
என் எண்ணை சொல்லிக் கூப்பிட்டார்கள்

முழுதுமாய் நீங்கிய வலியுடன்
நுழைந்தேன் மருத்துவர் அறைக்குள்

*தினகரன் தீபாவளி(2011)மலரில் வெளியானது

*அதனதன் இடத்தில்

கோயிலுக்கு வந்த எல்லோரும்
பிரார்த்தனை செய்து கொண்டார்கள்

பிரசாதம்
பகிர்ந்து கொண்ட நேரத்தில்
மகளிடம் தந்தைக் கேட்டார்

நீ என்ன
பிரார்த்தனை செய்து கொண்டாய்

அதிக மார்க் எடுக்க வேண்டும் என்றா

டாக்டர் ஆக வேண்டும் என்றா

வெளிநாடு போக வேண்டும் என்றா

எல்லாவற்றிற்கும்
இல்லை என்று தலையாட்டிவிட்டு
பிறகு சொன்னாள்

இந்த கோயில் யானையை
உடனே கொண்டுபோய்
காட்டில் விட்டுவிட வேண்டும் என்று
வேண்டிக் கொண்டதாக

மனிதர்கள் அதை செய்ய மாட்டார்கள்
கடவுளையும் செய்ய விட மாட்டார்கள்

சிரித்தபடி சொன்னாள்
சோகம் இழையோட

அசை போட்ட எல்லோரும்
அவளைப் பார்க்க
அவள் தூரத்திலிருந்த
யானையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அது தும்பிக்கை நீட்டி
அவளை அழைப்பது போலிருந்தது

வா இருவரும்
காட்டுக்கு ஓடி விடலாம் என
கூப்பிடுவது போலவும் இருந்தது

*ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2011)வெளியானது

Sunday, October 30, 2011

சந்தை

இந்தச் சந்தை
அபாயகரமானது

உங்களுக்குத் தெரியாமல்
நீங்கள் விற்கப்படுவதற்குமுன்
விற்க வந்ததை
விற்றுவிட்டு
வெளியேறி விடுங்கள்

இந்த சந்தை
மிகவும் அபாயகரமானது

Saturday, October 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

728-

வெளியைத் தொட்டு
வெள்ளைத் தாளில் வைத்தேன்
பிரபஞ்சத்தின் நிறம்

729-

நீங்கள்
எழுதிய வரிகளில்
கடந்து போயிருக்கிறீர்களா

யானை

யானையை
வரைகிறாள் குழந்தை

குழந்தையைப் போல யானை
அவள் விரல்கள்
சொல்வதைக் கேட்கிறது

முடியும்

நீண்டுகொண்டே போகிறது
உங்கள் கதை
நிற்காமல்
எப்போது முடியும்

நீண்டு கொண்டே
போனபோதுதான் தெரிந்தது
இது பயணம் என்று

பயணம் முடியும்போது
நிச்சயம் கதையும் முடியும்

குறுஞ்செய்தி

காதல் கொல்கிறது
என்று வரும்
குறுஞ்செய்தியை
எல்லோரும் எல்லோருக்கும்
அனுப்பிக்கொண்டிருக்கிறோம்
அழிக்காமல்
காதல் வாழ்கிறது

Friday, October 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

717-

மழை மீதேறிப்
போன மெளனம்
பெய்தது சத்தமாக

718-

கண் மூட
நீந்தும்
மரணம் கண்டேன்

கண் மூடி
நானும்
மரணம் கொண்டேன்

719-

என்னை அழித்தும்
நான் இருந்தது

நான் அழித்தும்
நான் இருந்தது

720-

வசிக்க
நிறைய சத்தம்

வாழ
கொஞ்சம் இசை

721-

பழைய ஆறு
குளித்தெழ
புதிய நான்

722-

நீச்சல் தெரியாது
நீந்துகிறேன்
யோசனைகளில்

723-

மீன் தொட்டியிலிருந்து
தாவி
பறந்துபோய்
கடலில் குதித்தது
மீன்

724-

நகர்த்தும்
வார்த்தைகளுக்குள் ஓடும்
படைப்பின்
உந்து சக்தி

725-

கணக்கு போட்டுப்
பேசுகிறீர்கள்
எண்களாகிறது
உங்கள் மொழி

726-

ஒளி என்பது
வேறல்ல
நாம்தான்

727-

தருணங்களின் தவமே
பாய்ச்சல்
அதுவே
மின்னல் நொடி
நிகழ்வாகவும்

Wednesday, October 26, 2011

சேகுவாராவின் செருப்பு

சேகுவாராவின் செருப்பை
யாரோ திருடிவிட்டார்கள்

கல் போட்டது போல்
வந்து கலைத்தது
மீண்டும் தள்ளியது
இந்த வரி

வரியைத்
தொடர்ந்து சென்றால்
சேகுவாராவை அடையலாம்
அல்லது
செருப்புக் கிடைக்கலாம்

Sunday, October 23, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

713-

நான் அணிந்திருக்கும் உயிர்
என்னுடையதல்ல
பிரபஞ்சத்தினுடையது
வேண்டும் போது
எடுத்துக் கொள்ளும்

714-

நான் உதிர்ந்தேன்
நீ
மலர

715-

புத்தகங்களின் வனத்தில்
நானோர்
விலங்கு

716-

என் முகமூடியைப் போட்டுப்
பார்க்காதீர்கள்
கழற்றும் போது
என் முகம்
படிந்து போயிருக்கும்

Saturday, October 22, 2011

எனது பொய்கள்

இத்துடன்
எனது பொய்கள்
முடிவடைகின்றன
எனச் சொல்கிறவன்
வேறு சில
பிரமாண்டமான பொய்களுக்குத்
தயாராகிறான்

Friday, October 21, 2011

வழிப்போக்கன்

மழைக்கு
ஒதுங்குவதில்லை
வழிப்போக்கன்

கிடைத்தது

வானவில்லை வைத்து
அனுப்பிய வானம்
கிடைத்ததா

வானவில்லை
ரசித்த போது மழையும்
கிடைத்தது

ஓடும் ரயிலில்

ஓடும் ரயிலில்
கதவருகில் அமர்ந்திருந்த
பெரியவருக்கு
கொஞ்சம் தேநீரைப்
பரிமாறி கொண்டபின்
கேட்டேன்
சொன்னார்

உடம்பு சரியில்ல சார்
வாயில புண் வேற
இன்னைய பொழப்பு போச்சு
இவனுக்கு நல்ல ஓய்வு

ரயிலின்
சத்தத்தைக் கேட்டபடி
அவர் மடியில்
குழந்தை போல் கிடந்தது
புல்லாங்குழல்

Thursday, October 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

710-

மிச்சமிருக்கிறேன்
நான்
இது போதும்

711-

அனுமதி மறுப்பதில்லை
நிலங்கள்
நமது வாசகங்களில்
அனுமதி மறுக்கப்பட்ட
இடங்கள்

712-

பசிக்கத் தேடு
பசிக்கு
பசியே உணவு

தண்டனை

உங்கள் வியூகத்தில்
அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு
நீங்கள் தண்டனை கொடுத்தீர்கள்
தப்பித்துப் போனவர்கள்
உங்களுக்கு தண்டனைக் கொடுப்பார்கள்

வெளியில்

எதுவும் எழுதவில்லை
குளிர் காய்கிறேன்
மொழிக்கு வெளியில்
அமர்ந்து

Wednesday, October 19, 2011

புல் சொன்னது

புல்லிடம்
மலை பேசியது

எனக்கு கீழேதானே
நீ இருக்கிறாய்

என் உச்சியைப் பார்க்க
உனக்குத் தோன்றவில்லையா

புன்னகைத்து
புல் சொன்னது

நான் வானத்தையே
பார்க்கிறேனே

அதற்கு கீழேதானே
நீ இருக்கிறாய்

Monday, October 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

705-

உள் நீந்த
மீனானேன்
மீன் நீந்த
நானானேன்

706-

ஒற்றை வரி
அழைக்கும்
மற்ற வரி
மற்ற வரி
இணைக்கும்
மொத்த வரி

707-

தயக்கம்
அடியெடுத்து வைக்கும்
குழந்தையைப் போல

அடிசாய்த்து விடும்
பிசாசைப் போல

708-

என் மேல்
நின்று பார்க்க
தெரிந்தது
என் உயரம்

709-

என்ன என்று
அறியும் முன்
வழிந்தது கனவு
கண்ணீரில்

Saturday, October 15, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

700-

எனது தொப்பியின் மேல்
வானத்தை
ஒரு சிறகாக
சூடியுள்ளேன்

701-

மலையை விழுங்கிய
கனவின் உச்சியில்
நிற்கிறேன் நான்

702-

வழி
பயணச் சீட்டு
புறப்பட வேண்டும்

703-

எனது ரயில்
போய் விட்டது

எனது தண்டவாளங்கள்
இருக்கிறது

704-

அழுவதைத் தவிர
வழியில்லை

அழுகைக்கும்
வேறு வழியில்லை

Friday, October 14, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

695-

அறியேன் எனினும்
அறிவேன்

அறிவேன் எனினும்
அறியேன்

696-

குட்டி குட்டியாய்
நீந்தின கேள்விகள்
திமிங்கலப் பசியுடன்

697-

நீளும் பாதை
முடிவற்று

698-

நன்றியை
சொன்ன நேரம்
சொல்லியது
கண்ணீரும்

699-

எளிமையான கோடுகள்
ஓவியத்திற்கு
அழைத்துச் செல்லும்
நம்பிக்கை இருக்கிறது

மின்னும் வரி

நள்ளிரவில்
மின்னிய வரியை
நள்ளிரவுகளில்
தேடுகிறேன்

கிடைக்கக் காணோம்

இருளில் என்னைத்
தள்ளி விட்டு
விளையாடுகிறது
ஒளிந்து கொண்டு

Wednesday, October 12, 2011

இருக்கக் கூடும்

ஒயின் ஷாப் பாரில்
கிளாஸ் பொறுக்கி
டேபிள் துடைக்கும்
சிறுவனைப் போன்று
குடித்துக் கொண்டிருக்கும்
யாரேனும் சிலருக்கு
இருக்கக் கூடும்
படிக்கும் மகன்கள்

Tuesday, October 11, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

690-

பெருமூச்சுடன்
முடிகிறது
ஏக்கம்

691-

கனவின் பிசுபிசுப்பை
இமைகளின் இடையில்
ஒட்டிக்கொண்டு
தூங்கப் பார்க்கிறேன்

692-

ரகசிய விளக்குகள்
இருளை விட
பயமுறுத்துகின்றன

693-

ஒன்றை கவனிக்க
இன்னொன்று
கவனிக்க வைக்கும்

694-

சிறிதாய் அடிக்கடி
வரும் கேள்வி
எது பெரிது

இருந்தது

தொலைந்தது வரி
கிடைத்தன வார்த்தைகள்

பொருத்திப் பார்க்க
இருந்தது

அதே போலவும்
புதிதாகவும்

Sunday, October 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புக்கள்

685-

எளிமையான
வரியின் மேல்
நான் ஊர்ந்து போகும்
சிறு எறும்பு
வேறொன்றுமில்லை

686-

காடு எரிகிறது என்று
எழுதிய வரியை
உடனே அழித்தேன்
வார்த்தைகளுக்குள்
வனம் அழிவதை
விரும்பவில்லை

687-

பெயரை
திரும்ப திரும்ப
அழிக்கிறேன்
புதிய பெயர்கள்
முளைக்க

688-

துளியை
மாபெரும்
துளியென
உடை
திரும்ப திரும்ப
உண்

689-

பூ
உடைந்தது
மணம்
உடையவில்லை

Saturday, October 08, 2011

படிகள்

படிகளை வரைந்தாள் குழந்தை
எப்போது இதில்
ஏறிப்போவாய் என்றேன்
சிரித்தபடியே சொன்னாள்
நான் இறங்கி வந்த
படிகளைத்தான்
வரைந்து கொண்டிருக்கிறேன்

Wednesday, October 05, 2011

சொல்லாமல்...பேசாமல்

ஒரு கல்லைத்
தூக்கி எறிவது போல

ஒரு கதவை
சாற்றுவது போல

சிலரை
புறக்கணித்து விடுகிறோம்

விழும் கல்
வலி சொல்வதில்லை

சாற்றப்படும் கதவு
பதில் பேசுவதில்லை

அவர்களும் அப்படிதான்
போய்க் கொண்டிருக்கிறார்கள்

வலி சொல்லாமல்
பதில் பேசாமல்

கற்றுத் தரும் வார்த்தைகள்

எதுவும் பெற்றுத் தராத
இந்த வார்த்தைகளை
வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறீர்கள்

உங்களுக்கு வேண்டுமானால்
இது பெற்றுத் தராத
வார்த்தைகளாக இருக்கலாம்

எப்போதுமே எனக்கு இது
கற்றுத் தரும் வார்த்தைகள்

Tuesday, October 04, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

682-

சொல்லில்
சுடர் அசைந்தது
சுடரை
ஊதி அணைத்தேன்
ஆனாலும்
சொல் ஒளிர்ந்தது

683-

நடந்து விடுவேன்
நம்பிக்கை இருக்கிறது

கடந்து விடுவேன்
நம்பிக்கை நடக்கிறது

684-

வரிகள்
கண்டெடுக்கும்
என்னை

Tuesday, September 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

672-

அசையும் கல் நான்
தூக்கி எறியலாம்

அசையா மலை நான்
பார்த்துப் போகலாம்

673-

காத்திருக்கிறேன்
கிடைக்கவில்லை
என்றாலும்
காத்திருப்பேன்
கிடைக்கும்

674-

முறிந்து கிடக்கும்
சொற்கள்
ஒட்டப் பார்க்கும்
மழை

675-

குளிருக்கு பயந்து
நிறைய போர்வைகள்
போர்வைகளின் அடியில்
நசுங்கிய தூக்கம்

676-

தாகத்தை
விதைத்தேன்
கிணறு
முளைத்தது

677-

பறந்து பறந்து
என்ன அடைந்தாய்
பறவையிடம் கேட்டேன்

கேட்டு கேட்டு
என்ன சாதித்தாய்
பறவைக் கேட்டது

678-

வழிகள் நண்பர்கள்
வழிப்போக்கன்
நான்

679-

எந்த நீர்குமிழியும்
உடையவில்லை
உடைந்ததெல்லாம்
நான்தான்

680-

இரு பார்வைகள்

என் தியானம்
மெளனத்தில் தொடங்குகிறது

என் தியானம்
மெளனத்தில் முடிகிறது

681-

மரணம்
ஒரு பெரும் கதவாகி
மூடும்போது
நான் அதன்
சிறு துவாரம் வழியே
வெளியேறி விடுவேன்

Thursday, September 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

669-

தாகம் நிரம்பிய குளம்
தண்ணீராகவும்
தெரிகிறது

670-

வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன
அதனாலென்ன
பூமி திறந்திருக்கிறது

671-

குப்பி நிறைந்திருக்கும் நேரம்
குடித்துக்கொண்டிருக்கிறேன்
நிகழ்காலத்தை மாற்றாமல்

சொல்

சொல் திறக்க
வழி

வழி திறக்க
மொழி

மொழி திறக்க
நான்

நான் திறக்க
உலகம்

உலகம் திறக்க
சொல்

Tuesday, September 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

665-

வெளியில்
தொலைந்தேன்

வெளியில்
நிறைந்தேன்

666-

சுமந்ததை
இறக்கிய பின்னும்
சுமக்கும் நினைவு

667-

தியானம் முடித்து
கண் திறக்கும்
எழுத்து

668-

பெரிதினும் பெரிதென
பெரிதினும் பெரிதென
பெரிதாகி
சிறிதானேன்

அழகாக இருக்கிறது

மது
நிரம்பி வழியும் கோப்பை
அழகாக இருக்கிறது

இரவு
நிரம்பி வழியும் கனவு
அழகாக இருக்கிறது

நான்
நிரம்பி வழியும் நான்
அழகாக இருக்கிறது

அழகு
நிரம்பி வழியும் அழகு
அழகாக இருக்கிறது

ஒவ்வொரு...

ஒவ்வொரு பிரிவையும்
நம் சந்திப்பில்
உடைத்தோம்

ஒவ்வொரு சந்திப்பையும்
நம் அன்பில்
இணைத்தோம்

முதல் மணி

தன்னை எழுப்ப
முதல் மணியை அடிக்கிறான்
தேவாலய ஊழியன்
பிறகு அடிப்பது
மற்றவர்களுக்காகிறது

Saturday, September 17, 2011

தள்ளி தள்ளி

தள்ளி தள்ளி
கண்ணீரின் அருகில்
கொண்டுபோய்
நிறுத்துகிறீர்கள்

புன்னகைத்தபடியே
பார்க்கிறேன்
துளிகளைத்
துடைத்தபடி

Thursday, September 15, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

660-

கையளவு காற்றை
ஊதி அசைத்தேன்
இசை வீசிப்போனது

661-

வார்த்தைகளுக்கிடையில்
புதைந்து போனதை
எந்த வார்த்தைகள் கொண்டு
எழுத இயலும்

662-

என்ன முடிவு
செய்திருக்கிறீகள்

எதையும் முடிவு
செய்யக்கூடாதென்று

663-

இந்த நள்ளிரவில்
இந்த ஒற்றைத்துளி கண்ணீர்
போதுமானதாக இருக்கிறது

664-

பொய்களின் பாசியில்
வழுக்கி விழுகிறேன்
தாங்கிப் பிடிக்கும்
உண்மை கை தேடி

Tuesday, September 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

654-

நான் சினம்
அணிந்த சிவம்
சினம் உதிர்ந்தால்
எதுவுமற்ற சவம்

655-

புள்ளியில்
வந்து நின்றேன்
இனி புள்ளியை
நகர்த்த வேண்டும்

656-

மழை பெய்கிறது
தனிமையின்
மீதும்

657-

கண் மூட
அழைத்துப் போனது
இருள்
கண் திறக்க
வரவேற்றது
வெளிச்சம்

658-

பெரு மூச்சில்
இறங்கி விழும்
ஏக்கம்

659-

தன் நடையில்
பாய்ச்சல் உண்டு என்றவர்
உடனே வந்து சேர்ந்தார்

தன் நடையில்
ஓட்டம் உண்டு என்றவர்
அடுத்து வந்து சேர்ந்தார்

தன் நடையில்
நடை உண்டு என்றவர்
தொடர்ந்து வந்து சேர்ந்தார்

தன் நடையில்
என்ன உண்டு என்றவர்
வந்து சேரவே இல்லை

இன்னொரு மையத்தில்

நான் கொல்லப்படுவேன் என்று
படிக்கிறீர்கள்
பதட்டத்துடன்

சரியாகப் பாருங்கள்

நீங்கள் கொல்லப்படுவீர்கள்
என்று எழுதி இருக்கிறது

அது யார் எவர் ஏன் என்ற
கேள்விகளுக்குள் போய்
உடைந்து வந்து
மேலும் ஒரு முறை
அப்படியேப் படிக்கிறீர்கள்

நான் கொல்லப்படுவேன்


செய்து குவித்த குற்றங்களும்
தவிக்க விட்ட ரணங்களும்
ஒன்றின் மீது
ஒன்று மோதி
வெடித்துச் சிதறுவது
மேலும் உங்களை
பதட்டமடைய வைக்கிறது

இப்போது
மனதைக் கூர்மையாக்கி
மையம் இழக்காமல்
படிக்கிறீர்கள்
மிகச் சரியாக

நீங்கள் கொல்லப்படுவீர்கள்

அப்போது உணர்கிறீர்கள்
அதே மனது
இன்னொரு மையத்தில்
நான் கொல்லப்படுவேன் என்று
படித்திருப்பதை

அறையின் வரைபடம்

நகர மூலையில் உள்ள
எனது சிறு அறையில்
மாட்டப்பட்டிருக்கிறது
அறையின் வரைபடம்

வண்ணங்களின் வீச்சில்
அறை இன்னொரு
அறையாகி விடுகிறது

பார்க்கும் போதெல்லாம்
வரைந்தவனின் கையை
தொட்டுப் பார்க்கத்
தோன்றுகிறது

மஞ்சள் வண்ணத்தில்
ஒளி பாய்ச்சுகிறது சூரியன்
இரவிலும்

வண்ணங்களை திறந்துதான்
ஓவியக்காரன் இந்த
அறைக்குள் நுழைந்திருக்க வேண்டும்

எனது சிறு அறையில்
மாட்டப்பட்டிருக்கிறது
அறையின் வரைபடம்

எனது அறைக்குள் நுழைந்து
அந்த அறைக்குள்
போய் வசிப்பது
இடக்குறையை
நிவர்த்தி செய்து விடுகிறது

சுதந்திரம் ததும்பும்
உணர்வையும் தருகிறது

Thursday, September 08, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

649-

இல்லாத வரியை
உற்றுப் பார்க்கிறேன்
இது வரை

650-

விரும்பி தொலைந்த ஆடு `
விலகி ஓடுகிறது
மந்தையிலிருந்து

651-

நினைவள்ளிப்
போட்டு போட்டு
கனவெல்லாம்
நெறைஞ்சிப் போச்சு

652-

சொல்லிக் கொள்ள
சொந்தம் உண்டு
சொல்லிச் செல்ல இல்லை

653-

வரிகளுக்கிடையில்
நகரும் மேகம்
எங்கே பெய்யும்

Tuesday, September 06, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

646-

நினைவின் மேலேறி
நினைவை எடுத்துக்கொண்டு
போனது நினைவு

647-

கனவை திறக்க
வெளி ஓடின
கனவுகள்

648-

ஜோராய் நடக்கிறது
வியாபாரம்
நீயும் நானும்
விற்கப்படுகிறோம்

வியர்வைகள்

உள்ளங்கையில்
நட்சத்திரங்கள் இல்லை
கை திறந்ததும்
மின்னித் தெறிப்பதற்கு

வியர்வைகள் உண்டு
நீந்தி உழைப்பதற்கு

நீட்சியில்

முற்றுப் புள்ளியை
அனுமதிக்க விரும்பாமல்
நீளமாகிக் கொண்டே
போகிறது வரி

எங்கு முடியும்
எப்படி முடிவை
சென்றடையும்
தெரியவில்லை

நீளும் வரி
தன் நீட்சியில்
அர்த்தங்கள் கரை புரண்டோடும்
நதியாகவும் தெரிகிறது

Sunday, September 04, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

639-

தொலைவான வனம்
தூரம் நிரப்பும்
பறவை ஓலி

640--

புல்லாங்குழலிலிருந்து
மழை பெய்கிறது

கேட்கிறது
மழை பெய்வது

641-

நானே தூசி
என்னை எதற்கு
தூசி தட்ட

642-

எனக்குள் மூழ்க
கண்டேன்
ஓர் கடல்

643-

சொல்
உதிரும்
அழுகையில்

644-

இருந்த இடத்தில் இல்லை
வேறு இடத்தில்
வலி

645-

பெயரின் மையத்தில்
பெயரற்ற
ஒற்றர்கள்





Saturday, September 03, 2011

வேண்டாம்

கண்களில்
நிராகரிப்பின் கசப்பு

உதட்டில்
புன்னகையின் இனிப்பு

உங்கள் முரணில்
எனக்கு உடன்பாடில்லை

பிறகு
எதற்கு சந்திக்க

வேண்டாம்

கூழாங்கல்

இந்தக் கணத்தில்
உள்ளங்கையில் இருக்கும்
இந்தக் கூழாங்கல்
இதமான குளிர்ச்சியைத்
தந்து கொண்டிருக்கிறது

ரகசியமாய்
உனக்கு நானிருக்கிறேன்
என்று சொல்லவும் செய்கிறது

விட்டெறிய விரும்பாத
குட்டிக்கல் இப்போது
என் மேஜையில்

ஒளிப்பட மின்னுகிறது
தன் வசீகரத்துடன்

Thursday, September 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

631-

பசி
கனவுத் தேடும்
தாய் முலை

632-

சிரித்தபடியே
குரு சொன்னார்

பிறப்பு
தற்காலிக சொத்து

மரணம்
பூர்வீக சொத்து

633-

ஒன்றிலிருந்து ஒன்று
கிடைக்கும்
அந்த ஒன்று
எப்படி கிடைக்கும்

634-

வரிகளில்
நடந்து சென்றேன்
களைப்பே இல்லை

635-

முள்ளேறும் எறும்பு
முனை அடையாமல்
திரும்புகிறது

636-

பெருவெளியில்
நின்று அழுதேன்
உலகை சுட்டது
என் துளி

637-

படுக்க இடம்
தேடியவன் சொன்னான்
வானம் என் கட்டில்

638-

நிற்க நேரமில்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது
காலம்

Wednesday, August 31, 2011

ஆதி முதல்

ஆதி முதல்
இன்று வரை
நாம் நிறையவே
கற்றுக் கொண்டோம்

சாதாரணத்தை
அசாதாரணமாக மாற்ற
கற்றுக் கொண்டோம்

உதாரணமாய்
ஒன்றைச் சொல்லலாம்

கயிறைத்
தூக்குக் கயிறாக்கக்
கற்றுக் கொண்டோம்






Sunday, August 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

629-

நீர்க் கோடு வரைந்தேன்
மறைந்தது நீர்
இருந்தது கோடு

630-

திசைப் பார்த்து
பறக்காது
புகை








நண்பன்

ஒரு நண்பனைப் போல்
பார்த்து நடக்கிறேன்
என் நிழலை

அதோடு
பேசியும் செல்கிறேன்
யாரும் பார்க்காத போது

Saturday, August 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

619-

இயலாமையை மறைக்க
திரைகள் இடுகிறோம்
திரைகளின்
ஓட்டைகள் வழியே
இயலாமையைப் பார்க்கிறோம்

620-

கடிகாரத்தின் பெண்டுலத்தில்
ஆடுகிறது
காலம்

621-

சிரித்து விடுங்கள்
அழுகையின் பக்கத்தில்
நமக்கென்ன வேலை

622-

அசைவற்று இருப்பதிலும்
இருக்கிறது
அசைவு

623-

யாரும் சொல்லாததை
நான் சொல்லவில்லை

எல்லோரும் சொல்லி விட்டதால்
நான் சொல்லாமலில்லை

624-

நட
கால்கள் செய்யும்
வழி

625-

உள்ளிருக்கும் மிருகங்களை
எழுப்பி விடுகிறது
காமம்

626-

நான்
தேநீர்
இந்தத் தருணம்
வேறென்ன வேண்டும்

627-

மொழியில் தொலைந்தேன்
கண்டெடுத்துத் திரும்புவேன்
எனக்கான வார்த்தைகளோடு

628-

வேறு வழியில்லை
வென்றாக வேண்டும்





Thursday, August 18, 2011

பார்த்தேன்

முதல் மின்னலில்
உன்னைப் பார்த்தேன்

இரண்டாம் மின்னலில்
உன் கண்களைப் பார்த்தேன்

மூன்றாம் மின்னலில்
உன் கண்ணீரைப் பார்த்தேன்

நான்காம் மின்னலில்
உன்னைக் காணவில்லை

ஐந்தாம் மின்னலில்
இருளைப் பார்த்தேன்

வெறும் இருளையேப் பார்த்தேன்

வெளியேற்றுதல்

தள்ளித் தள்ளி
உங்களுக்குள்ளிருக்கும்
குழந்தையை
வெளியேற்றுகிறீர்கள்

பின் அது
சைத்தானுக்குரிய
இடமாகி விடுகிறது

வளர்தல்

சொல்லிடம் அனுமதி கேட்டு
தங்க வந்த முள்
நாளாக நாளாக
சொல்லைக் குத்த ஆரம்பித்தது

நன்றி இழந்த முள்
ஒரு நாள்
முனையையும் இழந்தது

பின் இறந்தது

முள்ளை
அடக்கம் செய்துவிட்டு
அதன் மேல்
பூவை வைத்த சொல்
வானம் பார்த்தது

அப்போது பெய்த
மழையின் துளி
வசிக்கிறது சொல்லில்

வளர்கிறது சொல்
கவிதையில்

Tuesday, August 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

614-

முறிந்து போன `
புன்னகை
ஒட்டப் பார்க்கிறது
கண்ணீர்

615-

இருளில்
நெய்த வழியில் நடந்தேன்
இருளின்
துணைகொண்டு

616-

என்ன செய்ய
அபத்தமான வரிகளுக்கிடையில்
அகப்பட்டுக் கொள்கிறோம்
சில நேரம்

617-

போதும் என்று
சொல்லக் கற்றுக்கொள்
வானம் சொன்னது

சொல்லிப் பார்த்தேன்

வானத்தின் விசாலம்
போதும் என்ற வார்த்தைக்குள்
வந்திருந்தது

618-

இரண்டாவது நாக்காலும்
பேசுவேன்
சில நேரம்
அது தெரியாது
உங்களுக்கும்
முதல் நாக்குக்கும்



Wednesday, August 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

613-

நைந்து கிழிந்து போயிருந்தது துணி

இதை அணியவும் முடியாது
இது எதற்கும் பயன்படாது என்றேன்

எதுவும் எதற்கும் பயன்படும்
எனச் சொல்லியபடியே
வந்த அனுபவ சித்தன்
அதை மேலும் கிழித்து
ஒரு மெல்லிய திரியாக்கி
விளக்கேற்றிக் காட்டினான்

அசைந்த சுடரில்
காணமல் போயிருந்தன
நைந்து கிழிந்த இருள்கள்

நழுவுதல்

வண்ணங்களிலிருந்து
நழுவி விடும் ஓவியத்தை
யார் வரையப் போகிறார்கள்

Tuesday, August 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

609-

சொல் திறக்கும்
மொழி

610-

இரவை
மடித்தபடி நடந்தேன்
பகல் வந்தது

பகலை
விரித்தபடி நடந்தேன்
இரவு வந்தது

611-

கடைசி வரை
அழவில்லை
செய்த உறுதியின்
அடியிலிருந்தது
மறைக்கப்பட்ட கண்ணீர்

612-

மரணம் போதும்
எனக்கு
வாழ்வதற்கு

என்று

அரை நிர்வாணமாகி
காந்தியானேன்

என்று மனம் நிர்வாணமாக
முழு காந்தியாவேன்

நீந்தும் வார்த்தைகள்

படுக்கை அறை
மீன் தொட்டியானது

மீன்களோடு
நீந்தத் தொடங்கினேன்
உறக்கம் கலையாமல்

கடித்து எழுப்பின மீன்கள்
காதருகே வந்த ஒன்று சொன்னது

நீந்தியபடியே தூங்கு
தூங்கியபடியே நீந்தாதே

உடன் எழ
மீன் தொட்டி மறைய

காதில் நீந்தியபடி
இருந்தன வார்த்தைகள்

இன்னும் சொல்லியபடி

Sunday, August 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

600-

பாய்வது போல்
பாவனை செய்யுங்கள்
பாயாதீர்கள்

601-

எல்லாவற்றிற்கும்
நேரம் இருக்கிறது
என்பவர்களுக்கு
எல்லாவற்றிற்கும்
நேரம் இருக்கிறது

602-

தூங்குவது நொடிகள்தான்
ஆனாலும்
மணிகளாக
பாவிக்க முடியும்

603-

நல்ல நாள்
கடவுள் கையொப்பம்
இட்ட தாள்

604-

அழகாய் தெரிவதில்லை
நின்றிருக்கும்
குதிரைகள்

605-

மிதக்கும்போதெல்லாம்
விழுந்து போகின்றன
பாரங்கள்

606-

எந்த வெளிச்சமும்
வெளிச்சத்திற்கு வராமல்
இருப்பதில்லை

607-

நின்று போயிற்று வலி
நின்றபாடில்லை
வலியின் அதிர்வுகள்

608-

இலையின் ஓரத்தில்
இருக்கட்டும்
கொஞ்சம் பசி

Saturday, August 06, 2011

அடையாளம்

உங்கள் வார்த்தைகள்
உங்களை அடையாளம் காட்டின

பிறகு
அதை தவறு எனச் சொல்லி
உங்கள் மொழியால்
அழிக்கப் பார்க்கிறீர்கள்

Friday, August 05, 2011

தெரியும்

அடுத்த அத்தியாயத்தில்
உன்னைக் கொல்லப் போகிறேன்
கதாபாத்திரத்திடம் சொன்னேன்

கோபம் ஏறி
கத்தியது

எனக்குத் தெரியும்
ஒரு பிணம்
என் கதையை
எழுதிக்கொண்டிருக்கிறது என்று

வசித்தல்

ஒரு சிறு வரிக்குள்
அகப்பட்டுக்கொண்டேன்
வெளிவரத் தெரியாமல்

பிறகு வசிக்கப்
பழகிக் கொண்டேன்
புத்தகத்தில்

வலிகள்

ஒரு பெரிய வலியை
ஒரு சிறிய வலியிடம்
சொன்னேன்

சிறிய வலி
காணமல் போயிருந்தது

பெரிய வலி
குறைந்திருந்தது

Wednesday, August 03, 2011

உடைத்தல்

சிறையில்
முன்பின்
நடந்து நடந்து
தன் பயணத்தை
தூரமாக்கி விடுபவன்
சிறை வடிவங்களை
உடைத்து விடுகிறான்

Tuesday, August 02, 2011

விசாரித்தல்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு
ஊருக்குப் போய்
எல்லோரையும்
விசாரித்துவிட்டு வந்தேன்
ஊரை விசாரிக்காமல்
வந்து விட்டேன்

Saturday, July 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

590-

என்னுள் நகர
கண்டேன் வானம்

என்வெளி விரிய
கொண்டேன் ஞானம்

591-

பிறகு
இரவு
அதன் பிறகு
பகல்
அவ்வளவுதான்
வேறொன்றுமில்லை

592-

மொழிக்குள் நுழைந்து
வார்த்தைகளில்
வெளியேறிவிடுவதை
எப்படி எழுத

593-

படிகளில்
இறங்கியது மழை

மழையில்
இறங்கின படிகள்

594-

சதுரத்திற்குள்
இருக்கும் சதுரங்கள்
சதுரத்திற்குத் தெரியாது

595-

பதில் கண்டெடுக்காத
கேள்விகள்
கேள்விகளே அல்ல

596-

எழுது
என்ற கட்டளையை
எழுத்தே
பிறப்பித்து விடுகிறது

597-

கண்ணீரும் மழையும்
பேசும்
புன்னகை
தள்ளி நின்று
பார்க்கும்

598-

துளிக்குள்
பதுங்கும் கடல்போல
மெளனத்திற்குள்
பதுங்குகிறது மொழி

599-

நிசப்தத்தின் கோடரி
இரவின்
மேல் விழும்
வழியும் கனவுகள்
ஒன்றிரண்டு
என் கரை வரும்

Thursday, July 28, 2011

நிகழ்தல்

மொழியில்லை
வரிகள் இல்லை
வார்த்தைகள் இல்லை
ஒரு நெல்மணி அளவு கூட
எழுத்தில்லை
ஆனாலும்
நிகழ்கிறது உரையாடல்

மலை

தன் நாவில்
மொழி அழுந்திக்கிடக்க
யார் யார் குரலையோ
எதிரொலித்துக்கொண்டே
இருக்கிறது மலை

Tuesday, July 26, 2011

கதை

உள்ளங்கை
சொற்களைக் குலுக்க
கேட்டது
புராதன கதையின்
சத்தம்

கையசைப்பு

கையசைத்து
கையசைத்து
கடைசி கையசைப்பு
ரயிலுக்கு
என்றாச்சு

Friday, July 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

584-

பிறகுதான் சொல்லப்பட்டது
பசியாறிய இறைச்சி
சமாதானப் புறாவின்
உயிர் என்று

585-

எல்லாம்
இறக்கி வைத்தாயிற்று
இனி எதுவும்
சுமையில்லையே

இந்த கேள்வியை
இறக்கி வைத்தால் போதும்

586-

எழுத்தின் பசி
எழுப்பும்
உறங்கும் வார்த்தைகளை

587-

முதுகை நோக்கி
எறியப்படும் ஈட்டிகள்
துரோகத்தின்
விஷம் தோய்ந்தவை

588-

ஏதோ ஒன்று
நம்மை விரட்டுகிறது

ஏதோ ஒன்றை
நாம் விரட்டுகிறோம்

589-

எப்படி சொல்வதென்று
தெரியவில்லை

என்னிடமும்
சொற்கள் இருக்கின்றன

Thursday, July 21, 2011

மழை

மழை நம்மை
குழந்தையாக்கிவிடுகிறது
சரிதானே

ஆமாம் என்கிறார் அப்பா

நனையும் மழை
இன்னும்
குழந்தையாக்கி விடுகிறது
இதுவும் சரிதானே

சொல்லி ஓடுகிறாள் குழந்தை
கூப்பிடும் மழையிடம்

Wednesday, July 20, 2011

வழியில்

உன் தடங்கள் இல்லை
ஆனாலும் நீ வந்து போன
குறிப்புகள் வழியில்

யார்

இசைக்கத் தெரியாத
இந்த மூங்கிலுக்கு
யார் இத்தனை
துளை இட்டது

Monday, July 18, 2011

தானானது

என் மேல்
பூக்கும் பனித்துளி
பிரபஞ்சம்போல்
என்னை
பெரிதாக்கி விடுகிறது

சொல்லி சிரிக்க
துளி மறைய
மீண்டும் தானானது
புல்

அறைகள்

அறை முழுதும்
அறைகள்
என எழுதியபின்
வத்திப்பெட்டி அளவு இடம்
வானமாக விரிவு கொண்டது

Saturday, July 16, 2011

நகரத்தில் சந்தித்தவன்

நகரத்தில் சந்தித்தவன்
சொன்னான்

நான் மனிதர்களை
வேட்டையாடும்
மனிதன்

கால்களில்
ஓட்டத்தை குவித்தபடி
கேட்டேன்

இப்போது
நீ என்னை
வேட்டையாடப் போகிறாயா

அது உன் மேல் கமழும்
இறைச்சி வாசனையைப்
பொறுத்தது

மூக்கை விரித்தபடி
சொன்னான்

அவனிடமிருந்து தப்பிக்க
வேகமாக ஓடுகையில்
அவனைப் போலவே
எதிர்பட்டனர்
நிறைய பேர்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

577-

கை குவித்த
சொற்களுக்குள்
நான் குவிந்து

578-

இப்போது நான்

கிடைக்காதா என்ற
படபடப்புடனும்

கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையுடனும்

579-

சொல் கொண்ட
சூல் உடைத்து
பாய்ந்தது வரி

580-

என் மீது
சொருகப்பட்ட வாளை
எடுக்கிறேன்
என் யுத்தம்
பதில் சொல்லும்

581-

எல்லா வழிகளும்
அடைக்கப்பட்டிருக்கின்றன
என்ன செய்யப் போகிறீர்கள்

பறக்கப் போகிறேன்

582-

என் நாவால்
பேசும்
சபை

583-

நகரும் கதையில்
ஓடுகிறது குதிரை
எழுத்துக்களைப்
பின்னுக்குத் தள்ளி

மறைதல்

காமமாய்
மாற்ற நினைத்த
காதலொன்று
கைகுழந்தைபோல்
அழுதது

மெல்ல கீழிறக்கிவிட்டுப்
போகச் சொல்ல
பூப்படைந்த
புதுப்பெண் போல்
ஓடி மறைந்தது

Wednesday, July 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

572-

அழுவதைத் தவிர
வழி இல்லை
அழுதாயிற்று
இனி அழுகைக்கு
வழி இல்லை

573-

வெள்ளைத் தாளை படிப்பதற்கு
எழுத்துக்கள்
தேவையில்லை

574-

வானத்தில் விழிகள்
சதுரங்களில்
தூங்கி விடுகிறேன்

575-

பறிக்க நீளும் கரம்
பூவின் புன்னகைப் பார்த்து
தடவிவிட்டுத் திரும்புகிறது

576-

அன்பு மட்டுமே இருக்கிறது
உன்னிடம்

இதை வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறாய்

அன்பு செய்யப் போகிறேன்

Sunday, July 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

568-

கதைப் புத்தகத்தில்
கலைந்து போயிருந்தது
இன்னொரு கதை

569-

நான்
கொன்று
நான் பிறந்தேன்

570-

பொருளற்ற நான்
பொருள் உள்ளவன்
சொல்லிப் பார்த்தேன்
பொருள் இருந்தது

571-

ஏதோ ஒரு விட்டில் பூச்சி
அணைத்து விடுகிறது
சுடரை

Saturday, July 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

560-

நானும் நீங்களும்
நானும் அவர்களும்
என்பது போலத்தான்
நானும் நானும்

561-

முறிந்து போன வார்த்தைகளை
குணப்படுத்த வேண்டும்
முதலில்

562-

யுத்தம் பழகியவன்
சத்தமில்லாமல்
கொல்வான்

563-

காற்றைத் திரித்து
கண்டேன் ஒரு வரி
அது கானம் இசைத்து
போனது பல வழி

564-

விரட்டாத பறவை
விட்டுச் சென்றது
வானத்தை

565-

இருளில்
படிக்கிறேன்
இருளை

566-

தூக்கம் கேட்கின்றன
இமைகள்

காட்சிகள் கேட்கின்றன
விழிகள்

567-

இரவும்

மதுவில் இறங்கிய
இரவும்

ஒரு இரவில்
தூங்கினேன்

ஒரு இரவில்
விழித்திருந்தேன்

Tuesday, July 05, 2011

மகளின் வரிகள்

மரங்களே
விதையிலேயே இருங்கள்
நீங்கள் வளர்ந்தால்
வெட்டித் தள்ளிவிடுவார்கள்

தான் எழுதிய வரிகளை
எடுத்து வந்து காட்டினாள் மகள்

படித்து
அவள் தலை தடவ
வெட்டப்படாத
மரங்களின் காற்று
என் மேல் வீசிச் சென்றது

Saturday, July 02, 2011

காத்திருத்தல்

என்னைப் போலவே காத்திருப்பவர்
யாருக்காக காத்திருக்கிறார்
என்று தெரியாது

என்னைப் போலவே காத்திருப்பவர்கள்
எதற்காக காத்திருக்கிறார்கள்
என்று தெரியாது

காத்திருக்கிறேன்

காத்திருக்கிறார்

காத்திருக்கிறோம்

Friday, July 01, 2011

செய்தியில்...

காலை செய்தியில்
வாகனம் ஏறி
இறந்த குழந்தை

அன்று முழுதும்
அந்த குழந்தையைக் காப்பாற்ற
மருத்துவமனைகளுக்கு
ஓடிக்கொண்டிருந்தேன் நான்

இதற்கு மேல்

இதற்கு மேல்
எழுத எதுவுமில்லை என்று
முடித்திருக்கிறாய்

உனக்குத் தெரியாது
அதற்கு மேல்
தொடர்ந்துகொண்டிருந்ததை
நான் படித்துக்கொண்டிருந்தது

Wednesday, June 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

555-

எழுத வைக்கும்
வரியை
எப்படி எழுத

556-

தனிமை கிழித்த
உடலைத் தைக்கிறேன்
தனிமை கொன்று

557-

தேதிகளைக் கிழிக்கும் குழந்தை
காலத்தின் மறுமுனை போய்
திரும்பி வருகிறது

558-

எனது தற்கொலை
வெளியேற்றும் மரணம்
ஒருபோதும் வழங்கப்போவதில்லை
எனக்கு மன்னிப்பை

559-

பல்லாயிரம்
சொற்களைக் கொன்றேன்
எனினும் அடங்கவில்லை
என் பசி

Tuesday, June 21, 2011

ரொட்டி

உங்களில்
அதிக பசி உள்ளவர்கள்
இந்த ரொட்டியை
எடுத்துக்கொள்ளலாம்

ரொட்டி அப்படியே இருக்க
பசித்தவர்கள்
இறந்து கிடந்தார்கள்

Sunday, June 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

544-

பதுங்கிக்கொள்ள
பழகுகிறேன்
பாய்வது
தானாய் வரும்

545-

உங்கள் மந்திரத்தில்
சிலை உயிர் பெற்றது
மந்திரம் பொய் என்று
உங்களை அழித்தது

546-

நான் எண்களால்
கட்டப்பட்ட மாளிகை
என் பெயர் பூஜ்யம்

547-

இங்கு என்னைப் பற்றிய
எந்த குறிப்புகளும் இல்லை

நீங்கள் எதிர்பார்த்து வந்து
ஏமாந்து போகாதீர்கள்

அல்லது

எதிர்பார்த்து வந்ததை
குறிப்புகளாக
எழுதி வைத்துவிட்டுப்
போய்விடாதீர்கள்

548-

எறும்பு இளைப்பாறும்
இந்த தாளில்
எதுவும் எழுத
விரும்பவில்லை

549-

கேள்வியில்
நுழை
பதிலில்
வெளியேறு

550-

சுமக்க எதுவுமில்லை
என்பதே கனக்கிறது
சுமையாய்

551-

கனவின் குறிப்புகளை
காட்டியவர்களுக்கு
அனுமதி வழங்கப்பட்டது

கனவாகவே இருந்தவர்களுக்கு
அனுமதி மறுக்கப்பட்டது

552-

குழந்தையின் கையால்
தொடுகிறேன்
பஞ்சுபோல்
அசைகிறது மலை

553-

ஒற்றனைப்போல் வந்து
நண்பனைப்போல்
வெளியேறுகிறீர்கள்

நண்பனைப் போல் வரவேற்று
ஒற்றனைபோல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

554-

தியானத்தில்
எறிந்த கல்
போகிறது
ஆழம் நோக்கி
தியானிக்க

Friday, June 17, 2011

சொல்

சிறகை போல்
பறந்தது இலை

இலையைப்போல்
பறந்தது சிறகு

இரண்டையும் போல்
பறந்தது சொல்

Thursday, June 16, 2011

நீ...நான்...

உன் கத்தியின் வசீகரத்தில்
நான் மயங்கிவிடும்போது
நீ குத்திவிட நினைக்கிறாய்

உன் குரூரத்தின் கண்கள்
மூடிவிடும்போது
நான் தப்பிவிட நினைக்கிறேன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

536-

நான் பலநூறு ஆண்டு
பழமையான மரம்
வெட்டவா போகிறாய்

பதிலில்லை

விழுந்துகொண்டிருந்தது
பல நூறு ஆண்டுகளோடு
இப்போதைய கணங்களும்

537-

மூச்சு முட்டி
இறந்துபோனது
ஜன்னலற்ற வீடு

538-

எப்போதும் போல்
இந்த கண்ணீர் சுடவில்லை
எரித்தது

539-

பசி
கனவள்ளித் தின்னும்
இரவு

540-

கண்ணீரால் பேசிக்கொண்டோம்
புன்னகை ஒளிந்தபடி
பார்த்திருக்க

541-

துள்ளி மேலெழும்பி வந்து
சொல்லிவிட்டுப்போனது
நான் கடலைத் திறக்கும் மீன்

542-

மையமற்ற நிலைக்கு
போவாயா என்றேன்

எனக்கு வடிவச் சிக்கலை ஏற்படுத்தி
நீ உட்கார்ந்து
வேடிக்கைப் பார்க்க போகிறாயா என்று
கேட்டபடியே
ஓடியது வட்டம்

543-

கண நேர
கண் மூடல்
பெரும் தூக்கம்

Tuesday, June 14, 2011

மலை உச்சியில்

இந்த மலை உச்சியில் இருக்கும்
என்னை நீங்கள்
தற்கொலை செய்துகொள்ளப்போகிறவனாகப்
பார்க்கிறீர்கள்

நான்
தற்கொலை செய்துகொள்ளப்போகிறவனைத்
தடுக்க வந்தவனாகப்
பார்க்கிறேன்

அந்த பறவை
விரைவில் மேலெழும்பி
பறக்கப்போகும் பறவையாக
என்னைப் பார்த்துச் செல்கிறது

Monday, June 13, 2011

தாலாட்டுதல்

எல்லோரும் தூங்கிவிட
விழித்திருக்கும் குழந்தையை
தாலாட்டியபடியே
ஓடுகிறது ரயில்

வெறும் காகிதம்

இதில் விலாசமில்லை
வெறும் காகிதம்

இதை வைத்துக்கொண்டு
எப்படி போவது

காகிதத்தில்
கோடுகளை வரையுங்கள்
பாதைகள் கிடைக்கும்

பாதைகளில்
காதுகளை வையுங்கள்
விலாசங்கள் கிடைக்கும்

Sunday, June 12, 2011

விடைபெறும்போது

விடைபெறும்போது
ஒரு சின்ன புன்னகையை
விட்டுச் செல்லுங்கள்

கை குலுக்குங்கள்

தங்கிப்போன தருணங்களைப்
பகிர்ந்துகொள்ளுங்கள்

விடைபெறும்போது
பால்கனிச் செடி பிடித்திருக்கிறது
என்று சொல்லுங்கள்

குழந்தையின் கிறுக்கல்களை
ஓவியமாகக் கண்டெடுங்கள்

குறைவான சர்க்கரை இருந்தும்
காப்பி குறித்த சுவையை
சுவையாக சொல்லுங்கள்

விடைபெறும்போது

பிறந்த நாளை குறிப்பிட்டு
என் வாழ்த்துக்கள் வரும் என்று
உற்சாகப்படுத்துங்கள்

டீவியின் மேலிருக்கும்
பொம்மையை ரசியுங்கள்

அதன் கண்கள் வழியே
உங்களைப் பாருங்கள்

முதியவர்கள் இருப்பார்கள் எனில்
அவர்கள் வயதுக்குள்
போய் வாருங்கள்

விடைபெறும்போது
நாய்க்குட்டியைத்
தடவிக்கொடுக்க
மறக்காதீர்கள்

அது குரைக்குமெனில்
வீட்டின் பாதுகாப்பு கவசம்
எனப் பாராட்டுங்கள்

நகை இல்லாத
கழுத்தைப் பார்த்து
துயரப்படுவதை தவிருங்கள்

மீன் தொட்டி மீன்களிடம்
கடல் விசாரித்ததாய் சொல்லுங்கள்

வாங்கிச் செல்லும் பொருளில்
உங்கள் பிரியத்தை
குறித்துவையுங்கள்

விடை பெறும்போது
தூசி படிந்த கணங்களை
அசைபோடுங்கள்

ஒன்றிரண்டு சுவாராஸ்யவங்களை
பொதுவான அலைவரிசையில்
பேசுங்கள்

முக்கியமாக
விடைபெறும்போது
நீங்கள் முழுதாய்
விடைபெற்றுவிடாமல்
நினைவுகளின் நீட்சியாய்
லயமாய்
அங்கு சுற்றிவரும்படி
இருக்கப் பாருங்கள்

(19.06.2011,கல்கி இதழில் வெளியானது)

Wednesday, June 08, 2011

பூவிடம்

பறித்துக்கொள்ளலாமா என்று
செடியிடம்
அனுமதி கேட்டேன்

பறிக்கலாமா என்று
பூவிடம்
கேட்க மறந்துவிட்டேன்

Sunday, June 05, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

531-

எழுப்பிவிட்டு
நள்ளிரவின் மேல்
தாவிப்போகிறது கனவு

532-

பிடிபடாமல்
பிடிக்க முடியாமல்
வந்து வந்து
போகின்றன வரிகள்

533-

பெய்துமுடித்துவிட்டது மழை
வடிந்துகொண்டிருக்கும் மழைதான்
முடியக்காணோம்

534-

தாளில் ஏறிய எறும்பு
இழுத்துப் போகிறது
எழுத்துக்களை

535-

நாக்கின் நுனியில்
பெளர்ணமி மரம்
வார்த்தைகளுக்கு
ஒளி பாய்ச்சும்

Wednesday, June 01, 2011

கண்களில் ஆடிய ஜூவாலை

மெழுகுவத்தி வெளிச்சத்தில்
எப்போதும் குடிக்கும் பழக்கம்
நண்பனுக்கு

அவன்
நான்
மெழுகுவத்தி

அல்லது

அவன்
மெழுகுவத்தி

இந்த அட்டவணையில்
நிகழ்வு இருக்கும்

உட்கொள்ளும் துளிகளுக்கேற்ப
சொற்களை நடனமிடச் செய்வான்

அப்போது
நானும் மெழுகுவத்தியும்
கேட்கும் காதுகளாவோம்

அவன் பேச்சிலிருந்து
குதிக்கும் தவளைகள்
சத்தமிட்டு தாண்டிப்போகும்
இருளில் மறையும்

பேசும்போது
அவனை அறியாமல்
வரும் கண்ணீர்த்துளி

அதை மெழுகுவத்தியின்
உருகும் துளியோடு
கலந்து பார்ப்பான்

எந்த வாளினால்
உலகை அறுத்தாலும்
அது மீண்டும்
ஒன்று சேரும்
அன்பை வழங்கும் என்று
அபூர்வமாக ஏதாவது சொல்வான்

ஒவ்வொரு காயத்திலும்
தத்துவத்தை தடவினால்
வலிக்கவே வலிக்காது என்பான்

போதை அவனை
செல்லமாகத் தாலாட்டும்

அந்த ஊஞ்சலின்
அசைவுக்கேற்ப ஆடுவான்

சில நேரங்களில்
எல்லாம் துண்டிக்கப்பட்ட
அமைதி நிலவும்

அது பயத்தைத் தரும்

அப்போது மெழுகுவத்தி
சொட்டுவது மட்டும் கேட்கும்
பார் இது பேசுகிறது என்பான்

மெழுகுவத்தி
கோப்பையில் நிலவைப்போல
அசைந்தாடுகையில்
குடிக்காமல் கவனிப்பான்

எல்லாவற்றிலும்
நம்மை நட்டுவைத்து
சுயநலத் தோப்பாகிப்போனோம்

இந்த அவனது வாசகம்
எனக்கு மிகவும்
பிடித்த ஒன்று

ஒரு நாள் கேட்டேன்
மெழுகுவத்தி அணைந்துபோனால்
என்ன செய்வாய்

சிரித்தான்
சத்தமிட்டான்
அமைதியானான்
சொன்னான்

நான் ஏற்றும் மெழுகுவத்திகள்
அணைவதே இல்லை
எல்லாம் எனக்குள்
எரிந்துகொண்டிருக்கின்றன

அப்போது
அவன் கண்களில்
ஆடிய ஜூவாலை
என்னை கவனிக்கவைத்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

525-

குழந்தையின் மழலைக்குள்
குதிக்கிறது
அருவியின் பேரிசையும்
அமைதியின் கருணையும்

526-

கிடைக்கும்
ஏதாவது கிடைக்கும்
இரண்டிற்குமிடையில்
கிடைக்கப்போவதை
நினைத்தபடி

527-

நான் தருணங்களில்
தொலைபவன்
காலம் கண்டெடுக்கும்

528-

குத்திக் கிழித்து
ரத்தம் வரவழித்தது
எது என்று பார்த்தேன்

முனை முறிந்த
கனவு

529-

புவியீர்ப்பு விசைக்குள்
வராமல் மிதந்தபடி
எறிந்த பந்து

530-

எங்கிருந்து
தொடங்குவது
கேள்வியிலிருந்து

Saturday, May 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

522-

உரையாடல்
முடியும்முன்
உதிர்ந்தது இலை

இறங்கிக்கொண்டிருக்கும்
இலையின் மீது
விழுகின்றன
மரத்தின்
மீதிச்சொற்கள்

523-

கையள்ளிப்போனது
கடலானது
இறைத்தபோது

524-

எனக்கான மன்னிப்புகளை
எனக்கான தவறுகள்
வழங்கிக்கொண்டிருக்கின்றன

Friday, May 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

518-

நரை வீதிகளில்
ஞாபகம் மறந்து திரியும்
நினைவுகள்

519-

புள்ளிகளில் நெரிசல்
தாளில் தடம் தேடும்
வார்த்தைகள்

520-

கேட்டவனுக்குத்
தர எதுவுமில்லை
பிரபஞ்சத்தைப்
போட்டுவிட்டு நடந்தேன்

521-

ஏதோ ஒரு
இருளும்
வழி காட்டும்

தூறல் மேகங்கள்

மழை வர
பிரார்த்திக்கும்
குழந்தையின் கண்களில்
தூறல் மேகங்கள்

கண்ணீரின் புன்னகை

கண்ணீரின் புன்னகை
என்று எழுதிய பின்
துடைத்துக்கொண்டேன்
அதுவாய் வந்த கண்ணீரை
அதுவாய் வந்த புன்னகையுடன்

திரும்புதல்கள்

ஊர் திரும்ப வேண்டும்
நகரத்தை
எடுத்துக்கொண்டு

நகரம் திரும்ப வேண்டும்
ஊரை
எடுத்துக்கொண்டு

Wednesday, May 25, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

511-

ஊசிக்குள்
நான் நுழைந்து
பின் வரச்சொன்னேன்
தயங்கிய நூலை

512-

இருளில்
ஒரு தவறு செய்தேன்

தவறுக்கு
இருளையும் உடந்தையாக்கியது
இன்னொரு
தவறாகிப்போனது

513-

நுனிப்புல் மேய்பவர்களிடம்
கேட்காதீர்கள்
வேரின் ருசி பற்றி

514-

அறையை
பந்தயமைதானமாக்கிய
தனிமை
தூக்கி எறிந்து விளையாடியது
என்னை

515-

போகக்காணோம்
நான்கள் துப்பி
ஏறிய கறைகள்

516-

எதுவுமற்று
முடிந்த கவிதை
அனாதையாகிவிட்டது
எதுவுமற்று

517-

காற்றே
இசைதான்

Tuesday, May 24, 2011

குறிப்பு

தற்கொலை செய்துகொண்டவன்
அருகில் இருந்த
ஒற்றை வரி குறிப்பு

சற்று நேரத்தில்
மழை வரலாம்

மீண்டும் மீண்டும்

நீங்கள் பொம்மையை
உடைத்துவிட்டதற்காக
குழந்தை அழவில்லை
தன்னை உடைத்துவிட்டதால்
அழுகிறது
அது தெரியாமல்
புதிதுபுதிதாய்
பொம்மைகளைத் தயாரிக்கிறீர்கள்
மீண்டும் மீண்டும்
குழந்தைகளை உடைக்கிறீர்கள்

Monday, May 23, 2011

மிதத்தல்

குழந்தையின் மழலையில்
மிதக்கிறது
பெளர்ணமி

தடங்கள்

மூன்று குதிரைகள்
ஓடின

இரண்டு குதிரைகள்
ஓடின

ஒரு குதிரை
ஓடியது

எந்த குதிரையும்
இல்லை

ஓடிக்கொண்டிருக்கிறேன்
குதிரையின்
காலடித் தடங்களுடன்

இப்போது

இந்த அழுகையை
இந்த காயத்திற்கு
பொறுத்திக்கொள்ள முடியாது

ஆனாலும்
இந்த அழுகை இப்போது
தேவையாக இருக்கிறது

Saturday, May 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

501-

யார் போட்டார்
தெரியவில்லை
உட்செவியில்
குவிந்த பொய்கள்

502-

உயிர்விடாது
நீர் துளியில்
நீந்தும் மீன்

503-

நடக்கும்போதெல்லாம்
போதிக்கும்
சாலைகள்

5O4-

இடைவெளியில்
மறைந்துகிடக்கும்
இடைவெளிகள்

505-

பிய்த்தெறியும்போது
குத்தியதைவிடவும்
வலி

506-

வழியும் கண்ணீரில்
முடிந்துபோகிறது
ஏதோ ஒரு கனவு

507-

ஊர்ந்துபோகிறது
அமைதி
அமைதியாக

508-

எடுத்துக்கொள்கிறேன்
தேவையுள்ளதில் இருந்து
மிகத் தேவையானதை

509-

துண்டு துண்டாக
உறங்கிவிடுகிறேன்
உள்சதுரங்களில்

510-

சிலர் பேச்சில்
குரைக்கும்
நாய் சத்தம்

வானத்திலிருந்து

மழை நூல் பிடித்து
ஏறிய குழந்தை
கையசைத்தது
வானத்திலிருந்து

வரச்சொன்னது
மேலேறி

என் அறியாமை கண்டு
சிரித்து
பின் இறங்கியது
மழைத்துளியாய்

நட்புடன்

குறுகிய அறையை
கண்டுபிடித்து
ஜன்னல் திறக்கும்போதெல்லாம்
வந்துவிடுகிறது குருவி

நானாய் விரட்டியதில்லை
அதுவாயும் போனதில்லை

அது இருந்துபோகும்
தருணங்களில்
விசாலமாகிவிடுகிறது
அறையும்

கைவிடப்பட்ட குழந்தை

கைவிடப்பட்ட குழந்தை
ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது
ஒரு கதையில் இடம் தேடுகிறது
வாகனங்களை பொம்மைகளைப்போல ரசிக்கிறது
அதன் சத்தங்களை தன் வாயால் எழுப்ப முயற்சிக்கிறது
விரட்டுபவரின் நிழலை மிதித்துச் செல்கிறது

கைவிடப்பட்ட குழந்தை
ஒரு பட்டத்தை நோக்கி ஓடுகிறது
கொஞ்சம் அழுகையை நிறுத்துகிறது
சுண்டல் விற்பவனிடம் கை நீட்டுகிறது
அம்மாவின் இடுப்பில் ஆடும் குழந்தையைத் தொடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
மணல் அள்ளிப் போடுகிறது
தன் பெயரைத் தேடுகிறது
பொம்மையைப்போல் கிடக்கிறது
கால் பரவும் சிறுநீரைத் துடைத்துவிடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
தன் மழலை வழியே மேலேறுகிறது
கைகளால் வானவில்லை அசைக்கிறது
விழும் நிறங்களை அள்ளுகிறது
கடலில் தூக்கி எறிகிறது

கைவிடப்பட்ட குழந்தை
காணமல் போனவரின் போஸ்டர் அருகில் நிற்கிறது
அதிலிருக்கும் முகத்தைத் தடவுகிறது
மேல் ஊரும் எறும்பை மெல்ல எடுத்து விடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
தாய்களைப் பார்க்கிறது
தந்தைகளைப் பார்க்கிறது
மனிதர்களைப் பார்க்கிறது
யாரும் தன்னைப் பார்க்கவில்லை எனினும்
ஆழ்ந்து உற்று அருகில்போய்
அதிகமாகப் பார்க்கிறது

கைவிடப்பட்ட குழந்தை
தான் கைவிடப்பட்டது தெரியாமல்
தேடிச்செல்கிறது இன்னொரு குழந்தையை
தன் கைபிடித்து அழைத்துச் செல்ல


நன்றி- ஆனந்த விகடன்

*ஆனந்த விகடன் இதழில்(25.5.11)
வெளியான கவிதை.

Friday, May 20, 2011

கேட்கிறான்

நீ தின்னும் ரொட்டியில்
இறைவன் இருக்கிறான்

போதாதவன் சொன்னான்

என் பசியில்
இருக்கும் இறைவன்
இன்னும் கேட்கிறான்

Wednesday, May 18, 2011

கரித்துண்டு

குழந்தை கையில்
கரித்துண்டு
வானவில்லைப்போல
சிரிக்கிறது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

495-

நடந்தவர் சொன்னார்
நான் வழிகளில்
பயணம் செய்யும் போதே
வரிகளிலும் பயணிப்பவன்

496-

தூர்ந்து போன கிணறாய்
சிலர் மனம்
இறைக்க முடியாமல்
தாகம் தீர்க்க முடியாமல்

497-

திட்டம் மாற்றப்பட்டது
இன்று பயணம்
எனக்குள்தான்

498-

என்ன வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள்

எதுவுமில்லையே

உங்களுக்கு
எடுக்கத் தெரியவில்லை

அடுத்தவர் வாருங்கள்

499-

நீர் வற்றிப்போனாலும்
மணல் மிதந்து போகிறது
சொப்பனப் படகு

500-

திறக்க
உள்ளிருக்கும்
பிரபஞ்சம்

Tuesday, May 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

488-

கிளையாக
நீண்டுபோனதை
முறித்துப் போடலாம் என
முடிவு செய்தபோதுதான்
தெரிந்தது
ஆழமாக
வேர்விட்டிருப்பது

489-

உங்களிடம்
நெருப்பு இருக்கிறது
அணையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

நான் அணைக்காமல்
பார்க்க வேண்டும்
என்பதில்லை

அதுவே அணையாமல்
பார்த்துக்கொள்ளும்

490-

முதுகு சொறிந்துவிடுபவரைப்
பார்த்தேன்

முகமே இல்லாமல்
பேசிக்கொண்டிருந்தார்


491-

அந்தரத்தில்
மிதந்துகொண்டிருந்தேன்
தள்ளிவிடுவார்களோ என்று
யோசித்தபோது
விழுந்துபோனேன்

492-

கையளவே
வார்த்தைகள்

கடலில்
எறிகிறேன்

மூழ்கி
மீன்களோடு
விளையாடிவிட்டுப்
போகட்டும்

493-

அல்லது இது
அல்லது அது
அல்லது எதுஎனினும்
என அல்லதுகளில்
கழியுது காலம்

494-

அசையும் கிளை
சொல்லெடுத்துத் தர
உரையாடுகிறேன்
வனத்துடன

Monday, May 16, 2011

கடைசி வார்த்தை

கொல்லப்பட்ட பறவையின்
கடைசி வார்த்தை
துடிக்கிறது
காற்றில் போய்
தன் குஞ்சுக்கு
எதையோ
சொல்லி விட

Sunday, May 15, 2011

ஞாபக வட்டம்

உடையும்
நீள்சதுரமாகும்
சதுரமாகும்
கூம்பாகும்
தூளாகும்
துகள்களாகும்
புள்ளிகளாகும்
வடிவம் மாறி
திரும்ப
தானாகும்
ஞாபக வட்டம்

தெய்வங்கள்

குழந்தைகள்
சிறு தெய்வங்கள்
குழந்தையிடம் சொன்னேன்
சிரித்துச் சொன்னது
தெய்வங்கள்
பெரிய குழந்தைகள் என்று

Saturday, May 14, 2011

நட்பு

மலையுச்சி தாண்டி
வரும் பறவை
நட்பாயிற்று
பல பிரயத்தனங்களுக்குப் பிறகு

அடிவாரம் தாண்டா
என்னருகில்
ஒரு நாள் அமர்ந்து
தன் கண்ணுக்குள் இருந்த
மலையுச்சியைக்
காட்டி சென்றது

Friday, May 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

477-

சுழலும் பம்பரம்
விழப்போகும் தருணம்
துயரமானது
தவிர்க்க வேண்டும்

478-

வெளவால் போல்
தலைகீழாய் நீ

வெளவால் போல்
தலைகீழாய் நீதான்

மனமும் நானும்
ஒருவருக்கொருவர்
புகார் சொல்லிக்கொண்டு

479-

முடிவோடு வந்து
தாழ்பாளிட்டவனிடம்
கோரிக்கை வைத்தது

நான் வெறும் கயிராகவே
இருக்கிறேனே

அந்தக் குரல் அவனுக்கு
கேட்கவில்லை

480-

தண்டவாளத்தில் கோழிக்குஞ்சு
வருகிறது ரயில்
உடைந்தது கனவு

481-

எதுவுமில்லை

கிடைத்துவிட்டது
என்ற வார்த்தையோடு
விளையாடுகிறேன்

482-

தனியே வந்தவன்
பேசிச்செல்கிறான்
போதையுடன்

483-

நுழைவாயிலில்
பரிசோதனைகளுக்குப் பிறகு
இந்த வார்த்தைகளோடு
செல்லக்கூடாது என்றார்கள்
ஆயுதமற்ற போராளியாய்
போக விரும்பவில்லை
திரும்பிவிட்டேன்
என்னை வளர்க்கும்
வார்த்தைகளுடன்

484-

தன் வன்மம்
உதிர்த்த பாறை ஆனது
தொன்மம் மாறா
சிலையாய்

485-

பறந்து வந்து
அமர்ந்தது இருள்
பட்டாம் பூச்சியைப்போல
வரைந்துகொண்டிருந்த
பட்டாம் பூச்சி மேல்

486-

எனக்கு முன்
ஊர்போய் சேர்ந்த
எறும்பிடம் கேட்டேன்

எப்படி உன்னால் முடிந்தது

நீ கேள்வியின்
அந்த முனையில் இருக்கிறாய்

நான் பதிலின்
இந்த முனையில் இருக்கிறேன்

குரல் வந்தது

487-

மரத்திடம் சொன்னேன்

நீ இலைகளை
கொன்றுபோடுகிறாய்

உதிர்தல்
மரணம் என்று
சொல்வாய் எனில்
பூத்தலும் மரணம்தான்

சொல்லி சிரித்தது
என் மேல்
இலைகள் விழ

Tuesday, May 10, 2011

வேறு வேறு

தங்கச் சுரங்கத்தை
இழந்துவிட்டேன்
மோதிரம்
தவறிப்போனது குறித்து
வருத்தமில்லை

வேறு வேறு
இருவர்களுக்கிடையில்
இந்த வரி
வேறு வேறு
வடிவம் கொள்கிறது

Monday, May 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

472-

கடைசி ஆசையையும்
புதைத்தேன்
சவப்பெட்டியில்
பூத்திருக்கும் மலர்கள்
உதிர நாளாகும்

473-

இல்லை என்பவர்களிடம்
இருக்காது
பெரிதாக எதுவும்

474-

முதல் வார்த்தைக்கு
தவமிருந்தேன்
மற்றவை
வார்த்தைகளின் தவங்கள்

475-

வழிகளில்
தொலைபவன் நான்

வழிகளை
தொலைப்பவன் அல்ல

476-

ஒரு நூல்கண்டால்
என்னைக் கட்டிப்போட்டேன்
பின் நூல்கண்டு
அறுபடாமல் வெளியேறினேன்
அறுபட்ட காயங்களில் நான்
அங்குமிங்குமாய்
கொஞ்சம்
சிதறி இருக்கலாம்

அவன்

சூயிங்கம் மெல்கிறவன்
காட்சிகளையும் மெல்கிறான்
அதில் நசுங்கி வெளியேறுகிறாள்
ஒரு பெண்

Friday, May 06, 2011

ரயில்

அழுதது குழந்தை

நீ அழுதால்
மெதுவாக போகும் ரயில்
சிரித்தால்
வேகமாகும்
என்றேன்

அழுகை நிறுத்தி
சிரித்தது

பார் ரயில்
வேகமாகிறது


இல்லை
அப்படியேதான் போகிறது
சொல்லியபடியே அழுதது

குழந்தை பிடித்த தும்பியாய்
நெளிந்தபடி
நான்

குழந்தையின்
அழுகைக்கும் சிரிப்புக்கும் இடையில்
எந்த வேகத்தில்
செல்வது என்று தெரியாமல்
ரயில்

Thursday, May 05, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

467-

வேட்டைக்கு பின்
இறந்து கிடந்தோம்
மிருகமும் நானும்

வேட்டைக்கு முன்
தப்பி பிழைத்தோம்
நானும் மிருகமும்

468-

வயதானால் என்ன
அந்தரங்கத்தில்
குழந்தை நான்

469-

வேகமாக
வெளியேறி விடுகிறோம்
அதைவிட வேகமாக
சிக்கியும் விடுகிறோம்

470-

காற்றில் செய்த சாவி
கையிலுண்டு

அது வானின்
எந்த கதவையும்
திறக்கும் நன்று

471-

வார்த்தை இல்லாதபோது
வெறுமனே பார்க்கிறேன்
வேறு ஒன்றும்
செய்வதில்லை

Wednesday, May 04, 2011

கவிதைக்குள்

கவிதைக்குள்
நுழைவது என்பது
ஒரு வனத்திற்குள்
நுழைவதைப் போல

கவிதையிலிருந்து
திரும்புவது என்பது
விலங்குகள் எதையும்
வேட்டையாடாமல்
ஒரு பூவைப்
பறித்துக்கொண்டு
வருவதைப் போல

Sunday, May 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

460-

தன் தலையில்
ரத்தம் சூடி இருக்கும்
முள்ளுக்குத் தெரியாது
துடித்து அடங்கிய வலி

461-

துரோகங்களை
நீங்கள் மறந்துவிடலாம்
துரோகங்கள்
ஒருபோதும் உங்களை
மறப்பதில்லை

462-

நாகரீகம் கருதி
அழவில்லை
ஆனாலும் ஒரு துளி
கசியாமலில்லை

463-

பிரார்தனைகளை
மறந்துவிட்டேன்
இறைவன் ஞாபகத்தில்
வைத்திருப்பார் என்பதால்

464-

குவளை நீரை
குடித்தன பறவைகள்
தீர்ந்தது என் தாகம்

465-

என்னைத்
தின்னக் கேட்கிறது
வன்மம்
வன்மத்தை
தின்கிறேன்
நான்

466-

வாக்கியங்களின்
வார்த்தைகளுக்கிடையில்
பார்வைகள்
புத்தகம் முழுதும்
கண்கள்

நாவு

வீட்டின் நாவு
கதவு
பூட்டி
ஊர் செல்லும்போதெல்லாம்
அது சீக்கிரம்
வரச்சொல்லிக்
கேட்டிருக்கிறேன்

தெரிவதில்லை

ஒரு பூச்சியை
நசுக்கி கொல்வதைப் போல
என் பிரியத்தைக் கொல்கிறாய்
இறந்த பின்னும்
வலி தரும்
இந்த மரணம் பற்றி
உனக்குத் தெரியவாப் போகிறது

Saturday, April 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

456-

நான் எனும் சொல்
நான் சொல்ல
மொழியாயிற்று

457-

முன் கனவை நோக்கி
நான் சென்றேன்
பிற கனவுகள் வந்தன
எனை நோக்கி

458-

நான் வரைந்த பறவை
தான் அமர
வரைந்தது கிளையை

459-

இறந்த கால பிழையை
நிகழ்கால ரப்பரால்
அழிக்கப்பார்த்தேன்
முடியவில்லை
தேய்கிறது எதிர்காலம்

Thursday, April 28, 2011

விட்டு வந்த வார்த்தை

வனத்தில்
விட்டு வந்த வார்த்தை
அடுத்த முறை
சென்றபோது சொன்னது

நான் இங்குதான்
முளைத்திருக்கிறேன்
கண்டுபிடி என்று

திரும்பும் வரை
தெரிந்துகொள்ள முடியவில்லை

வெளியேறியபோது
சிரிப்பு சத்தம் வந்தது

அது வனத்திடமிருந்தா
வார்த்தையிடமிருந்தா
தெரியவில்லை

தெரியாது

நீங்கள் நல்லவர்தான்
உங்களுக்கு எதுவும் தெரியாது

நாங்கள் கெட்டவர்தான்
எங்களுக்கு எதுவும் தெரியாது

மக்கள் அப்பாவிகள்தான்
அவர்களுக்கு எதுவும் தெரியாது

ஒரு பூ

எப்போதும் போகும்
சாலை ஓரத்தில்
இப்போது புதிதாய்
பூத்திருக்கிறது
பெயர் தெரியாமல்
ஒரு பூ

Monday, April 25, 2011

இன்னொரு குழந்தை

பால்கனியிலிருந்து
நடந்துபோகும்
என்னைப் பார்த்தபடி
கை அசைக்கிறது
ஒரு குழந்தை
கண் மலர

விழுந்து இறந்துபோன
நீச்சல் குளத்திலிருந்து
மேலெழும்பி வந்து
கை அசைத்துப் போகிறது
இன்னொரு குழந்தை
கண்ணீர் உதிர

(நந்தனாவின் நினைவிற்கு)

Sunday, April 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

453-

வான்வெளியில்
பறந்தடங்கும்
சுட்டு வீழ்ந்த
பறவையின் சத்தம்

454-

பொறுமையின்
ஆழ்வெளியில்
படைப்பின் வெளிச்சம்

455-

கண் மூடிப் பார்த்தேன்
கண் திறந்து
என்னை பார்த்த
உறக்கத்தை

தாகம் உடையும்

காணோம் மழையை
வானம் அனுப்பிய
ஒற்றைத் துளி மட்டும்
வந்து கொண்டிருக்கிறது
தாகம் உடைக்க

வெள்ளை சுவர்

இந்த வெள்ளை சுவரில்
யாரும் எதுவும்
வரைய வேண்டாம்
இதுவே
ஓவியம் போலிருக்கிறது

Friday, April 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

450-

பிடிபடும்
நழுவும்
மாயமீன்
என் நீச்சல்
அழித்து

451-

நகம் வெட்ட
உடைந்து விழுந்தது
ஒளிந்து கிடந்த இருள்

452-

கண்ணாடி முன்
நிற்கிறேன்

சிறு பொய்யாய்
பிம்பத்தில்
ஊர்ந்து செல்வதைப்
பார்த்தபடி

Wednesday, April 20, 2011

ஒரு மழை நாளில்

ஒரு மழை நாளில்
பிரிந்தோம்

மழை நாட்கள்
நம்மை விட்டுப்
பிரியவே இல்லை

Tuesday, April 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

446-

இல்லாத எல்லையில்
இருப்பது
எல்லை இல்லாதது

447-

யாரோ விட்டுப்போன வியர்வை
மைல்கல் மேல்
உறைந்து போயிருந்தது
அதிலிருந்தன திசைகள்
கடலளவு கைகளுடன்
வழிகாட்ட

448-

போதையில்
வழி தொலைத்தவன்
தன் கால்களிடம் கெஞ்சுகிறான்
வழி பார்த்து
போகச் சொல்லி

449-

ஒரு துளியே
கடலாச்சு

Friday, April 15, 2011

இரண்டு வரிகளுக்கிடையில்

இரண்டு வரிகளுக்கிடையில்
ஓடுகிறது ஒரு நதி
எரிகிறது ஒரு காடு
சாம்பலாகிறது ஒரு கடிதம்
பேசுகிறது ஒரு பொம்மை
சிரிக்கிறது ஒரு குழந்தை
இறக்கின்றன சில வார்த்தைகள்

இரண்டு வரிகளுக்கிடையில்
தெரிகிறது ஒரு சிற்றூர்
கேட்கிறது யாழிசை
பறக்கிறது ஒரு பட்டாம்பூச்சி
நகர்கிறது ஒற்றை மண் புழு
தெறிக்கிறது ஒரு ஊற்று
அழைக்கிறது ஒரு வனம்

இரண்டு வரிகளுக்கிடையில்
ஒளிர்கிறது ஒரு கலங்கரை விளக்கு
வழி அடைகிறது ஒரு கப்பல்
கையசைக்கின்றனர் சில பயணிகள்
விழுகிறது ஒரு அருவி
பெருமூச்சு விடுகிறாள் ஒரு மூதாட்டி
உதிர்கின்றன சில கண்ணீர்த் துளிகள்
கண் திறக்கிறது ஒரு சவப்பெட்டி

இரண்டு வரிகளுக்கிடையில்
மின்னஞ்சலுக்கு பழக்கப்பட்ட விரல்கள்
நாளுக்குத் தயாரான புன்னகை
பதுங்கியுள்ளனர் சில தீவிரவாதிகள்
புதைந்துகிடக்கின்றன சில துப்பாக்கிகள்
மறைந்திருக்கின்றன சில மர்மங்கள்

இரண்டு வரிகளுக்கிடையில்
காதலை மீட்டெடுக்கிறான் ஒருவன்
குழந்தைக்கு பெயர் யோசிக்கிறாள் ஒருத்தி
தினசரியில் தன் மரண அறிவிப்பை பார்க்கிறான் பயந்தவன்
துரோகத்தின் வலிகளை விழுங்குகிறான் இழந்தவன்

இரண்டு வரிகளுக்கிடையில்
தற்கொலையைத் தள்ளிவைக்கிறான் யோசிப்பவன்
மீன்களை வரைபவள் பொறி போடுகிறாள்
தூசிமுட்டித் திணறுகிறது திருமண ஆல்பம்

இரண்டு வரிகளுக்கிடையில்
தப்பித்தவன் முகமூடியை மாற்றிக்கொள்கிறான்
கிளம்புகிறது ஒரு மலைப்பாதை ரயில்
கனவைத் திறக்கிறாள் ஒரு சிறுமி
குளிரில் நடுங்குகிறது இரவு
வார்த்தைகளை நனைக்கிறது மழை

இரண்டு வரிகளுக்கிடையில்
தனிமையை உடைக்கிறது கனவு
போதையில் ஏறுகிறான் வழி மறந்தவன்
நேரம் கொறித்தபடி பார்வையாளன்
தனக்குள் நடந்து போகிறது நெடுஞ்சாலை

இரண்டு வரிகளுக்கிடையில்
எதுஎதுவோ நிகழ்கிறது
எதுஎதுவோ மாறுகிறது
எதுஎதுவோ தொடர்கிறது
எதுஎதுவோ பிரிகிறது
எதுஎதுவோ அழிகிறது

இரண்டு வரிகளுக்கிடையில்
முடிவைத் தேடுகிறது இந்தக் கவிதை

Wednesday, April 13, 2011

வலிகள்

இரவு தன் வலியை
கனவிடம் சொன்னது

கனவு தன் வலியை
கண்ணீரிடம் சொன்னது

கண்ணீர் தன் வலியை
பூமியிடம் சொன்னது

பூமி தன் வலியை
வேரிடம் சொன்னது

வேர் தன் வலியை
பூவிடம் சொன்னது

பூ தன் வலியைச் சொல்லாமல்
உதிர்ந்து போனது

Tuesday, April 12, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

445-

நான் விழுந்ததைப் பார்த்தவர்
சிரித்துக்கொண்டே போனார்

எழுந்ததைப் பார்த்தவர்
முறைத்துக்கொண்டே போனார்

விழுந்ததற்கும் எழுந்ததற்கும்
இடையில்
நடந்து சென்றதைப் பார்த்தவர்
கைதட்டிக்கொண்டே போனார்

Saturday, April 02, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

437-

வெட்டியவன் சொன்னான்
உன் பாவங்களை
உன் ரத்தத்தால் கழுவுகிறேன்

அதிர்ச்சியுடன் எழுந்தேன்
கனவுகள்
உண்மை பேசுமா என்ன

438-

தீரா நான்
தீரா என்னில்
தீரா வேட்கையுடன்

439-

அலைந்து திரிந்து
திரிந்து அலைந்து
வந்து சேர்ந்தேன்
அலைந்து திரிய
திரிந்து அலைய

440-

கனவு அறுத்த தூக்கங்கள்
உதிர்ந்து கிடக்கின்றன
கண்ணுக்குள்

441-

மூழ்கியவர்கள் பட்டியலில்
என்னையும் சேர்க்க
முயற்சிக்கிறீர்கள்

கரை சேர்ந்த
என்னைப் பார்த்தபடியே

442-

விளக்கணைகிறேன்
இருளுடன்
பேச வேண்டும்

443-

மின்னல் ஒளி போதும்
கடக்க

மழைத்துளி போதும்
குடிக்க

444-

என் ஆழம் அறிந்தால்
உயரம் உணர்வாய்
சொன்னது மலை

Monday, March 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

433-

பயணம்தான்
எனது
பயணச் சீட்டும்

434-

காற்றில்
தொலைந்து போனேன்

பாடலாய்
வெளிவருவேன்

435-

கதவுக்குத் தேவையில்லை
எல்லாப் பூட்டும்
உங்களுக்குதான்

436-

நதியில் மிதக்கிறது
என் பேனா
எழுதாமல் திரும்புகிறேன்

Saturday, March 26, 2011

நீண்ட பயணத்தில்

நீண்ட ரயில் பயணத்தில்
எதையாவது பேசிக்கொண்டே
வருபவர்கள் மத்தியில்
எதுவுமே பேசாமல் வருபவர்களும்
பேசிக்கொண்டிருப்பார்கள்
தம்முடன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

430-

விளிம்பில்
வழியும் துளி
பூமியைப்
பாத்திரமாக்கிக்கொள்ளும்

431-

ஆழத்தில் உடையாமல்
நீந்துகின்றன
ஞாபகக்குமிழ்கள்

432-

தயக்கம்
தான் விழுங்கும்
காலங்களைத்
துப்புவதே இல்லை

தயங்குபவன்
தன்னைத் தின்னக்கொடுக்கும்
காலத்திடமிருந்து
தப்புவதே இல்லை

Friday, March 25, 2011

மழையுடன்

தூறலை பிடித்துவிட்டதை
குதித்தாடி
மழையிடம் சொல்கிறது
குழந்தை

தொலைபவன்

கடைக்கோடியில் அமர்ந்து
கைதட்டுபவன்
தொடர்ந்து
தொலைந்துகொண்டிருக்கிறான்
பெரும் பேச்சுகளில்

Thursday, March 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

425-
விதைக்குள்
என்னை அடைத்தேன்
அதனால்
நானும் முளைத்தேன்

426-

இப்படித்தான் நீங்கள்
என்னைக் கொன்றீர்கள்

இப்படித்தான் நான்
உங்களைக் கொன்றேன்

இப்படித்தான் அவர்கள்
நம்மைக் கொன்றார்கள்

427-

கூட்டத்தில்
அழுதுகொண்டே
கடந்து போகிறாள் ஒருத்தி

அவள் அழுகையோடு
நடந்து போகிறேன் நான்

428-

சிதறிக்கிடக்கின்றன
தூக்கங்கள்
இரவில் சேர்ந்தால்
இமைகள் மூடலாம்

429-

பிடிபட்டவன் சொன்னான்
உங்களில் யார் யார்
திருடர்கள் என்று
எனக்குத் தெரியும்

Saturday, March 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

419-

என் மேல்
மிருகத்தைப்போல்
படுத்துக்கிடக்கும்
அறியாமை

420-

எழுதப் பழக
நீச்சல்
வெற்றுத் தாளில்

421-

எதுவுமில்லை

அள்ளியபோது
எதுவும்
இல்லாமலில்லை

422-

தொடும்போதெல்லாம்
விரல் வழியே
உள் வரும் உலகம்

423-

உருகி வழியும் தூக்கம்
பிசின் போல ஒட்டும்
ஓடும் காலடிகளில்

424-

யுத்தம் பழகிய
உடலை
தியானத்தில்
புதைத்து வைத்தேன்

தியானம் பழகிய
அன்பை
வெளியில்
நட்டுவைத்தேன்

Wednesday, March 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

414-

ஓடும் கால்களில்
நேரம் பார்க்கும்
சாலை

415-

தனிமைக்குள்
குதிக்கும் தவளை
வாயெல்லாம்
என் பெயர்

416-

மனதில்
நகர்த்தும் காய்கள்
பேசும்போது
வார்த்தைகளாகும்

417-

நுழைபவர்களின் கைகளில்
வேறுவேறு சாவிகள்

கடவுச் சொல்லை
மாற்றிக்கொண்டிருக்கிறேன்

418-

நான் உடைந்து உடைந்து
உருவானவன்

உடைக்கப் பார்க்கிறீர்கள்

முடியாது

Tuesday, March 15, 2011

சிறுமியின் கதைகள்

சிறுமி
கதை கேட்டாள்

என்னிடம் சொல்ல
எதுவுமில்லை என்றேன்

நான் சொல்லட்டுமா
என்றாள்

உன்னிடம் கதை
இருக்கிறதா

இல்லை என்பதுபோல்
தலையாட்டினாள்

பிறகு எப்படி
சொல்வாய்

சிரித்தபடியே சொன்னாள்

இருப்பதை
சொல்வதல்ல கதை
சொல்ல சொல்ல
வருவதே கதை

Monday, March 14, 2011

காற்றில்

உங்கள் அலைவரிசையில்
என் பாடல்
வந்து சேருமா என்று
எனக்குத் தெரியாது
ஆனாலும் இது
காற்றில் இருக்கும்

Sunday, March 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

407-

ஏரியில்
எறிந்த கல்லோடு
இறங்கிக்கொண்டிருந்தேன்
என்னை மீனாக்கிவிட்டு
புதைந்து போனது கல்

408-

காட்டிக்கொடுக்கும்
கண்ணீர்
புன்னகையில்தான்
மறைக்க வேண்டும்

409-

சிலரை நினைவிலிருந்து
தவறவே விடக்கூடாது
சிலரை தவறியும்
நினைவிற்குள்
வரவிடக்கூடாது

410-

காற்றைக்
கிழித்தது வாள்

துடித்து விழுந்தன
சொற்கள்

மூச்சற்று அடங்கினேன்
நான்

411-

பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
ஆனாலும்
பதிவு செய்யப்பட்ட குரலில்

412-

பசி உருவாக்கும்
பசிகள்
எப்பசி அடைக்க

413-

என் நிழலில்
இளைப்பாரும்
வெயில்

Saturday, March 12, 2011

ஓடும் ரயில்

தண்டவாளத்தின் மேலேறிய
ஆட்டுக்குட்டியை
தூக்க ஓடியது குழந்தை

ரயில் வந்துகொண்டிருந்தது

பயமற்று
ஆட்டுக்குட்டி விளையாடியது

அஞ்சியபடியே
ஆட்டுக்குட்டியைத்
நெருங்குகிறது குழந்தை

அப்போதுதான்
பார்த்த சிறுமி
உடனே நிறுத்தினாள்
வரைந்த ரயிலை

செல்லமாய் கோபித்தபடியே
ஆட்டுக்க்குட்டியை
தூக்கிய குழந்தை
இறங்கிப்போனாள்
தண்டவாளத்திலிருந்து

மீண்டும்
வரையத் தொடங்கினாள் சிறுமி
ஓடும் ரயிலை

நிம்மதியுடன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

401-

பெருநகர் மீதும்
என் மீதும்
பெய்கிறது மழை

நனையாத
பெருநகர் பார்க்கிறது
நனைந்து போகும்
என்னை

402-

நாகரீகம் கருதி
நமது வாள்களை
மறைத்துவைத்திருக்கிறோம்

போர் முடிந்தபின்
தெரியும்

நம் வன்மத்தின் குரூரமும்
துரோகத்தின் வேஷமும்

403-

சொல்லுக்குள்
சுழலும் ஒலி
நிற்பதில்லை

404-

பொறுமையாக படியுங்கள்
சொற்களின் மீது
பட்டாம் பூச்சி

405-

அள்ளி வந்த மணலை
தெளிக்கும்போதெல்லாம்
அலையைப் பார்க்கிறது குழந்தை

406-

எல்லா வேஷமும்
கட்டி ஆடுவேன்
மனுஷ வேஷம்
கட்டும் போது
தோற்றுவிடுவேன்

Thursday, March 10, 2011

பூங்கொத்தும் குழந்தையும்

பூங்கொத்தோடு வந்தவர்
நண்பனின் வார்டை
தேடிக்கொண்டிருக்கிறார்

நோய்மைக் குழந்தை
புன்னகைத்துப் பார்க்கிறது
முதலில் அவரை
பிறகு பூங்கொத்தை

நின்றுவிடுபவர்
அருகில் போய்
குழந்தையின் தலைதடவி
பூங்கொத்தைத் தருகிறார்

வாங்கி அணைத்து
சிரிக்கிறது குழந்தை

ஒரு பூவை
கிள்ளி எடுத்து
குழந்தையின்
கன்னத்தை தடவிவிட்டு
ஓடுகிறார்
நண்பனைத் தேடி

தூரமாகும் அவரைப்
பார்த்தபடியே
பூங்கொத்தில்
முகம் புதைக்கிறது
குழந்தை

Tuesday, March 08, 2011

பலூன்

பலூனை
ஊதுகிறது குழந்தை
பயமெல்லாம்
நமக்குதான்

Monday, March 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

400-

இறந்து போன
வாக்கியம்
அனாதையாக

பார்த்துக் கடப்பர்
எல்லோரும்
அமைதியாக

Sunday, March 06, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

396-

அசைந்த கிளையில்
அசையும் அழகு
நின்ற பின்னும்

397-

தவம்
பிசகா
தவம்
செய்

398-

பிடிக்கப் பார்த்தும்
நழுவி
நதியில் குதித்தோடும்
வார்த்தைகள்

399-

தோல் கிழிக்கும் பார்வைகள்
உள்ளிறங்கும்
கத்திகளாக

Friday, March 04, 2011

மழலை குற்றாலம்

அருவி விழுவதை
அபிநயித்து
அதில் நீராடியதை
நடித்துக் காட்டியது
குழந்தை
மழலை குற்றாலத்தில்
நானும் குளித்து
முடித்தேன்

Thursday, March 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

393-

எல்லாம் இழந்து
எதைப்பெறப்போகிறோம்
நாம்

394-

இந்த மலைஉச்சிபோல்
உன் அன்பு
உயரமானது

இங்கிருந்து தள்ளிவிடும்
துரோகத்தைப்போல்
ஆபத்தானதும் கூட

395-

இந்த முக்கோணத்தின்
மூன்று முனைகளிலும்
நான்தான்
இருக்கிறேன்

Wednesday, March 02, 2011

குழந்தையின் கதை

ஒரு காட்டுக்குள்ள
நான் போயிக்கிட்டிருக்கேன்

அம்மாவுக்கு
கதை சொல்லத்
தொடங்கியது குழந்தை

காட்டுக்குள்ள
நீ போவக்கூடாது
வேற கதை சொல்லு

காட்டில்
தொலைந்த குழந்தை
தேடிக்கொண்டிருந்தது
வேறொரு கதையை

Sunday, February 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

388-

கண்ணீர்
எனது திரவ புன்னகை
என்றான்

யாராலும் அவனை
அழவைக்க
முடியவில்லை

389-

தயங்கி தயங்கி
சொல்ல நினைப்பவனை
கைவிடுகினறன
வார்த்தைகள்

தயங்காமல்
சொல்ல நினைப்பவனை
அழைத்துச் செல்கிறது
மொழி

390-

நுனி பிடித்து
நடக்கிறேன்

நுனி என்று
எதுவுமில்லை

நடக்கிறேன்

நுனி பிடித்து

எனை பிடித்து

391-

நீங்கள் சிந்திய சொல்
முள்ளாய்
விளைந்து கிடக்கிறது
சொல்லாமல்
சென்றுவிடுங்கள்

392-

அரங்கம் முழுதும்
பார்க்க வேண்டும்
மேடையில் நிற்கிறான்
மேடை பார்க்கிறது
அவனையும்
அரங்கையும்

Saturday, February 26, 2011

வழியும் இசை

மெல்லிய
தகரத்தின் மீது
விழும் மழை
இசையாகிறது

பிறகு
வழிகிறது இசை
தகரத்திலிருந்து

போதும்

சிறு புல்

சின்னஞ் சிறு
பனித்துளி

போதும்
ரசிக்க

வேறொன்றும்
தேவையில்லை
பெரிதாய்

திரும்பிக்கொண்டிருப்பவன்

போதை கூடி
நள்ளிரவில்
வீடு திரும்பிக்கொண்டிருப்பவன்
யார் யாரையோ சபிக்கிறான்

குழந்தைக்கு வாங்கிய
பொம்மை கீழே விழ
மிதித்துவிட்டுப் போகிறான்

நசுங்கிய பொம்மையின்
உயிர் கசிந்து அடங்குகிறது

பொம்மையை அள்ளியபடியே
ஓடிக்கொண்டிருக்கிறாள் மகள்

வழிமாறிச் செல்லும்
அப்பாவை கைபிடித்து
வீட்டிற்கு கூட்டிச் செல்ல

Friday, February 25, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

383-

பூமிக்கு பாரமாக
நான் விட்டுப்போகும்
இந்த காலடித்தடங்களை
மன்னித்துவிடுங்கள்

384-

பொருளற்றது
என் வாழ்க்கை
சொல்லிச்செல்கிறான்
வழிப்போக்கன்

385-

என்னை
வழி நடத்தும்
நானை
வழி கடத்த
முடியாது
யாரும்

386-

சொல்
மேல்
சொல்
அதன்
மேல்
சொல்
சொல்
இப்படி
மேல்
மேல்
சொல்
சொல் என
அடுக்கி வைத்து
உச்சி நின்று
குதிக்கிறேன்

உடல் வாங்கிய
நீரலையில்
ஒதுங்குகிறது
ஒவ்வொரு
சொல்லும்
சத்தமற்று

387-

என்னைப் பார்த்து
நிராயுதபாணி என
முன்னேறாதீர்கள்

ஆழ்மனத்தின்
ஆழத்தில்
பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன
கத்திகள்

அவளுக்கு

துடைத்து துடைத்து
கண்ணாடியைப்
போட்டுப் பார்க்கிறாள்
மூதாட்டி

ஆனாலும்
உடைந்து உடைந்தே
தெரிகிறது உலகு
அவளுக்கு

ஒற்றைச் சொல்

நீ எழுதிவைத்துவிட்டுப்
போயிருக்கும்
நன்றி என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
இப்போது என்னிடமிருக்கிறது

ஒரு புத்தகத்திலிருக்கும்
மொத்த வாக்கியங்களைப் போல
அது கனக்கவும்
செய்கிறது

நுட்பம்

மிருதங்கம் வாசிப்பவரின்
விரல்களுக்கும்
வாத்தியத்துக்கும்
இடையில்
நீந்தும் இசை
அவர் காதுக்கு மட்டுமே
சென்று சேர்கிறது

காற்று
பிடிக்க நினைத்து
முடியாமல் போகிறது

பின் அந்த இசையை
அவர் வாசிக்கத் தொடங்குகிறார்
நமக்காக

இன்னும் நுட்பத்துடன்
விரல்களால்
இசையை செதுக்குவதைப்போல

Tuesday, February 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

377-

உங்கள் கண்ணீர்
உண்மையா
பொய்யா

நான் பொய்
கண்ணீர் உண்மை

378-

கிளையில் பறவை
தொங்க வந்தவன் ரசிக்கிறான்
அலகு கொத்துவதைப் பார்த்து

379-

பனிப்பாறை மேல்
படுத்திருந்தேன்
பாறை உருகுவதை நானும்
நான் உருகுவதை
பனியும் பார்த்தபடி

380-

ஒட்டடை
படிந்த தூரிகை
ஓவியத்தைப் பார்க்காது

381-

ஒத்திகை செய்யும் மரணம்
ஒருபோதும்
நேரத்தை சொல்வதில்லை

382-

விதியை
உருவாக்குபவர்களை
விதி ஒன்றும்
செய்வதில்லை

Monday, February 21, 2011

சுவை

உண்ட சுவை பற்றி
குழந்தை சொல்ல
தாய் பெற்றாள்
தின்ற சுவை

கடைசி வரி

கடைசி வரியில்
பட்டாம் பூச்சி பற்றிய
குறிப்பு இருந்தது

படிக்கும் போதே
பறந்து போனது

வியந்து பார்த்து
தாளுக்குத் திரும்ப
வரியும் காணாமல்
போயிருந்தது

மிச்ச உயிர்

அன்பை ஆயுதமாக்கி
போர் முடித்து
வெளியேறுகிறாய்

சிந்திக்கிடக்கும்
குருதியிலிருக்கும்
மிச்ச உயிர்
துடித்து அடங்குகிறது
அனாதையாக

Sunday, February 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

376-

நீங்கள்
திறந்து காட்டச்சொல்லும்
இந்த பெட்டியில்
என் மரணம்
மட்டுமே இருக்கிறது

திறந்து காட்டுங்கள்

பாருங்கள்

ஒன்றுமில்லையே

அதையேதான்
நானும் சொன்னேன்

ஒன்றுமில்லாததுதான்
உங்கள் மரணமா

ஆமாம்
வாழ்க்கையும் கூட

Saturday, February 19, 2011

மிதத்தல்

மிதந்தது பூ

காற்றில் அசைந்தது

நதியின்
அலைவுக்கேற்ப
நடனம் நிகழ்ந்தது

மிதந்தது பூ

மிதந்த பூ
படகானது

படகில்
இளைப்பாறிப்போனது
பறவை

பறவை சத்தம் கேட்டு
மீன்கள் வெளிகுதித்து
படகின் சுவரோரம்
முதுகுரசிப் போயின

இப்போது
அதே பூ
படகின் மேல்

கதிர்தீண்ட
ஒளித் திவளைகளுடன்
பார்த்தது

படகோட்டி
பூவை வணங்குகிறான்

மெதுவாய் எடுத்து
படகில் அமர்ந்திருக்கும்
இளவரசி தோற்றம்கொண்ட
பெண்ணிடம் பணிவுடன்
தருகிறான்

அதிசயத்தைப் போல
அவள் வாங்கி
முகர்ந்து
ரசித்து
கூந்தலில் வைக்கிறாள்

மெல்லத் தொடுகிறாள்

படகோட்டி
படகை வேகமாக்குகிறான்

பாய்ந்து வரும் காற்று

படகை
படகோட்டியை
அவளை
அவள் கூந்தலை
அவள் பூவைத்
தீண்டுகிறது

தலையிலிருந்து
நதி விழுவதுபோல்
நதியில்
விழுகிறது பூ

விழும் லாவகத்தில்
சில இதழ்கள்
தனியாகின்றன

முதலில்
மிதந்தது போலவே
இப்போது
மிதக்கிறது பூ

அலையின்
அசைவை வாங்கி
அசைகிறது

தொலைவாகும் படகை

அதிலிருந்து
தன்னை பார்த்து
கையசைக்கும் பெண்ணை
பார்த்தபடி

மிதக்கிறது பூ

Friday, February 18, 2011

முடிவுகள்

நீ உண்ணும்
இந்தத் தூக்க மாத்திரைகள்
உன்னை
ஆழ்ந்த
மிக ஆழ்ந்த
உறக்கத்திற்கு
இட்டுச் செல்லும்

அதன் பிறகு
நீதான்
முடிவு செய்யவேண்டும்

இதை
தற்கொலையாக
மாற்றப்போகிறாயா
என்பதையும்

இல்லை
இது ஒரு
தற்செயல் என
முடிவு செய்து
வாழ்க்கைக்குத்
திரும்ப போகிறாயா
என்பதையும்

Thursday, February 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

373-

கண்ணீர்
கவலையின் திரவமாகவும்
காயத்தின் மருந்தாகவும்

374-

ஓய்வே
உழைக்கச் சொல்கிறது

375-

இரவின் விளிம்பில்
வழியும்
கனவு

Wednesday, February 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

370-

அன்பை விநியோகிக்கவே
வந்தோம்

ஆயுதத்தை
தூக்க வைத்தீர்கள்

371-

எப்படி முடியும்
இந்த கவிதை

தெரியாது

எனக்கும்
கவிதைக்கும்

372-

யாருடனும்
போட்டியிட விரும்பாதவன்
தன்னிடமே
தோற்றுவிடுவான்.

சிறுமீன்

அடுக்கி வைத்துவிட்டுப்போன
வார்த்தைகளை
திரும்பவந்து
கலைத்தது குழந்தை
கலைத்த கடலுக்குள்
நீந்தும் சிறுமீன்
நான்

Sunday, February 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

364-

எல்லாமே
தொடர்ந்து வரவேண்டும்

எல்லாவற்றையும்
தொடந்து செல்லவேண்டும்

தவிர்க்க வேண்டும்
இந்த நினைவை

365-

மீன்தொட்டியில்
ஊற்றுகிறாள் குழந்தை
கொண்டுவந்த கடலை

366-

கதவடைக்கிறாய்
சாவிதுவாரத்தில்
பரவும் ஒளி
திறக்கப் பார்க்கிறது
உன் இருளை

367-

இந்தப் பள்ளத்தாக்கு
கடவுள் ஊற்றிய
வண்ணங்களால்
நிரம்பி இருக்கிறது

368-

வழி தப்பும் ஆடுகளாய்
நினைவுகள் போகும்
விரட்டிப் பிடித்தாலும்
வேறிடம் மாறும்

369-

தெரிந்தே
தொலைந்திருக்கிறேன்
தேடாதீர்கள்

Saturday, February 12, 2011

உறுத்தல்

இறந்த குழந்தையின்
மீது போர்வை
சிசுவின் மரணத்தை விட
உறுத்துகிறது
கடினமான துணி

அனுபவ சித்தனின் குறிப்புகள்

359-

கண்மூடித்
தூங்குவது போல்
நடித்தேன்
எழுப்பினார்கள்

கண்மூடி
தவமிருப்பதுபோல்
நடித்தேன்
எழுப்பச் சொல்கிறார்கள்

360-

உள் நெளியும் இருள்
வழி காட்டும்
வழியெல்லாம் ஒளி
தலையாட்டும்

361-

போனபின்னும்
முளைத்திருப்பேன்
உங்களில்
ஒருவரைப் போல

362-

கல்லெறிய
சொல்லெறிந்து
போனது காகம்

363-

திருத்திக்கொள்ளலாம்
எழுதுங்கள
தேடிக்கொள்ளலாம்
தொலையுங்கள்

Friday, February 11, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

357-

கண்ணாடியில்
பார்த்த அழுக்கைத்
துடைக்க துடைக்க
அழியாமல் தெரிந்தது
என் அழுக்கு

358-

நீங்கள் நல்லவரா என்று
எனக்குத் தெரியாது

நீங்கள் நல்லவரா என்று
உங்களுக்குத் தெரியுமா

Thursday, February 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

354-

வேரிலிருந்து
கிளைக்குத் தாவும்
மரம்

355-

முன்வலி போலில்லை
இவ்வலி
தடவிக்கொள்ளும் ஆறுதல்
குறைக்கப் பார்க்கும்
வலியின் வலியை

356-

மெளனம் என்பது
சத்தமில்லாதிருத்தல் அல்ல
சத்தத்தின் கரையில்
பூத்திருத்தல்

நுழைவாயில்

அந்த கவிதையை
அழித்து விடுங்கள்

மெல்ல

ரப்பருக்கு எதுவும்
தீங்கு நேராமல்

இல்லை
எரித்து விடுங்கள்
ஒரு தீக்குச்சியில்
எல்லாம் முடித்துவிடும்

அந்த கவிதை
இன்னும் உங்களில்
கனக்குமெனில்
மறுபடி
எழுதிப் பாருங்கள்

வேறு ஆழத்திலிருந்து
வேறு தளத்திலிருந்து
வேறு ஒன்றிலிருந்து

வாந்தி எடுப்பதுபோல்
அதுவே
வந்து சேருமெனில்
தயங்காதீர்கள்

அதையும்
முன்சொன்னதுப்போல்
செய்துவிடுங்கள்

அழிக்க வேண்டியதை
ஆக்கிக்கொண்டிருப்பதால்
எந்த பலனும் இல்லை

பேசாமல்
வார்த்தைகளற்ற
வெளியில் பயணித்துத்
தேடுங்கள்

உடனே
திரும்பி விடாதீர்கள்

ஓடோடி வந்து
தாளில் அப்பிவிடுவதால்
ஒன்றும் நிகழ்ந்துவிடாது

சரியான சமிக்ஞை
கிடைக்குமெனில்
அப்போது எழுதுங்கள்

சிக்கி இருப்பதே
வருமெனில்
நீங்கள்
அடைபட்ட கூண்டிலிருந்து
இன்னும் வெளிவரவில்லை
என்று பொருளாகும்

காத்திருங்கள்
மெளனம் பழகுங்கள்
வார்த்தைகள் ஊடாக
உயிர் நுழைத்துப் பாருங்கள்

பிறகு எழுதுங்கள்

இந்த தொடர்ந்த
செயல்பாடுகளில்
ஒன்று நீங்கள்
முடிந்துபோய்விடுவீர்கள்

அல்லது

கவிதையின்
ஒரு புதிய நுழைவாயிலை
கண்டடைவீர்கள்

Wednesday, February 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

351-

இதோடு
இந்த ஆட்டத்தை
முடித்துக்கொள்ளலாம்

இரண்டுபேரும்
வெற்றிபெற்றதாக
அல்லது
இருவரும் தோற்றுவிட்டதாக
அறிவித்துவிடலாம்

352-

ஓங்கிய வாள்
பயணம் செய்யும்
காலம் கிழித்து

353-

இங்கு எல்லாமே
ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன
ஒழுங்கற்று
நுழைவீர் எனில்
சவமாய் வெளியேறுவீர்கள்

சக்கர நாற்காலியில் உறங்கும் பூனை

சக்கர நாற்காலியில்
உறங்கும் பூனையை
வரைந்த ஓவியர்
மதிய களைப்பில்
சற்று கண்மூடினார்

வெயில்பட
கண் விழித்தது பூனை

உறங்கியவரைப் பார்த்தது

நிறங்களை முகர்ந்தது

பாய்ந்து
ஓடிப்போக எழ
சக்கர நாற்காலி
மெல்ல நகர
வந்த ஒலிகேட்டு
முன்போலவே
கண் மூடியது

ஜன்னல் மோத
எழுந்த ஓவியர்
பூனைமேல் விழுந்த
வெயிலை மூடி
வண்ணங்கள் எடுத்து
பூனைக்கு இன்னும்
உயிரேற்றத் தொடங்கினார்

Tuesday, February 08, 2011

ஒற்றை வாக்கியம்

ஒற்றை வாக்கியத்தை
சிதைக்க வந்தவனிடம்
ஒரு நொடி
அதைப் படித்துவிட்டு
அழித்துக்கொள் என்றேன்

படித்துக்கொண்டிருக்கிறான்
இன்னும்
முடித்தபாடில்லை

பக்கத்தில்
துரு ஏறிக்கொண்டிருக்கிறது
அவன் ஆயுதம்

எப்போதாவது

தொட்டுப்
பார்த்திருக்கிறீர்களா

பசிக்கு
கை நீட்டும்
குழந்தையின் கையை
எப்போதாவது

Monday, February 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

348-

ஒரே ஒரு
கண்ணீர்த்துளியோடு
உங்கள் அழுகையை
முடித்துக் கொள்ளமுடியுமா

வாய்விட்டுச் சிரிக்கிறேன்
வரும் ஒரு துளியோடு
நிறைவடைகிறது
நீங்கள் கேட்பது

349-

என் தியானம் கலைத்து
உள்ளிறங்குகிறது
ஒரு கல்
தன் தியான
இடம் தேடி

350-

கையிலிருந்த
ஆணியை அறைய
இறங்கிக்கொண்டிருந்தது
சுவரிலும் வானிலும்

Sunday, February 06, 2011

ஒரு சிறு கோடு

முன் திட்டம்
தயாராயிற்று

புத்திசாலித்தனமாக
வீழ்த்த வேண்டும்
ஓவியரை

அணுகினேன்

உங்களிடமிருந்து
எனக்கு ஒரு
சிறு கோடு மட்டும் போதும்
ஓவியம் எதுவும் வேண்டாம்

குவிந்துப் பார்த்தார்

அப்போது வரைந்திருந்த
காளிரூபம் கொண்ட பெண்ணின்
ஒரு பகுதியைக்
கிழித்துத் தந்தார்

அதிலிருந்தது
கோடு

நேராய்
வளைவாய்
பலவாய்

பிறகு போய்விட்டார்
தன் வண்ணங்களின்
குகைக்குள்

ஒரு கணம் நின்று
நடந்தேன்

என் கையில்
கோடும்
அதில் கனக்கும் பெண்ணும்

Wednesday, February 02, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

342-

பிஞ்சு ஒளி
நிரம்பி வழியும்
தேநீர் கோப்பையில்

343-

கனவில்
வருகிற கனவுகளை
பார்ப்பது எந்நாள்

344-

சுடர் பெயர்ந்து
போனது காற்றோடு

இருள் இருந்து
பேசுது என்னோடு

345-

என் இலையில்
பசியைப் பரிமாறியது
யார்

346-

மன்னிக்கவும்
உங்கள் வார்த்தைகளில்
சத்தம் மட்டுமே
அர்த்தம் இல்லை

347-

இருள் மெளனம்
என்று தோன்றியது
இருள் கழிந்தது
மெளனம் விட்டு

பறவையின் பெயர்

என் பெயர் சொல்லி
கூப்பிட்டது பறவை

எப்படி என் பெயர்
தெரியும் என்றேன்
ஆச்சர்யத்துடன்

நீயேதான்
சொன்னாய் என்றது

எங்கு
எப்படி

நீ ஒரு மரத்தை
கனவு கண்டபோது
அதன் கிளையில்
நான் வந்து அமர்ந்தேன்

அப்போது
விழுந்தது பழம்

நீ அதை எடுத்து
சுவைத்தபடி
உன் பெயர்சொல்லி
என் பெயர் கேட்டாய்

நீயே ஏதாவது
வைத்துக்கொள்
எனச்சொல்லிவிட்டு
பறந்துபோனேன் என்றது

அப்போது யோசித்த பெயரை
சொல்லி கூப்பிடுவதற்குள்
இப்போதும்
பறந்து போயிருந்தது

நான் மட்டுமே

இந்த அறையில்
நான் மட்டுமே
இருக்கிறேன்

இந்த கவிதையை
நான் மட்டுமே
வாசிக்கிறேன்

இந்த இச்சையை
நான் மட்டுமே
தீர்க்கிறேன்

இந்த அமைதியை
நான் மட்டுமே
கேட்கிறேன்

இந்த சுவரை
நான் மட்டுமே
உடைக்கிறேன்

இந்த மதுவில்
நான் மட்டுமே
கலக்கிறேன்

இந்த கண்ணீரை
நான் மட்டுமே
கடக்கிறேன்

இந்த ஒப்பனையை
நான் மட்டுமே
கலைக்கிறேன்

இந்த வேட்டையை
நான் மட்டுமே
நடத்துகிறேன்

இந்த காயங்களை
நான் மட்டுமே
மறைக்கிறேன்

இந்த சதுரங்கத்தை
நான் மட்டுமே
ஆடுகிறேன்

இந்த பிம்பங்களை
நான் மட்டுமே
சிதைக்கிறேன்

இந்த பறவையை
நான் மட்டுமே
அழைக்கிறேன்

இந்த தானியங்களை
நான் மட்டுமே
இறைக்கிறேன்

இந்தத் தடயங்களை
நான் மட்டுமே
அழிக்கிறேன்

இந்த கூட்டத்தில்
நான் மட்டுமே
வெளியேறுகிறேன்

இந்த கூண்டை
நான் மட்டுமே
திறக்கிறேன்

இந்த மிருகத்தை
நான் மட்டுமே
அனுப்புகிறேன்

இந்த கடிகாரத்தை
நான் மட்டுமே
நிறுத்துகிறேன்

இந்த இருளில்
நான் மட்டுமே
நடக்கிறேன்

இந்த உச்சத்தில்
நான் மட்டுமே
நிற்கிறேன்

இந்த நெருப்பை
நான் மட்டுமே
தீண்டுகிறேன்

இந்த விஷத்தை
நான் மட்டுமே
துப்புகிறேன்

இந்த விசாரணையை
நான் மட்டுமே
நடத்துகிறேன்

இந்த மாத்திரைகளை
நான் மட்டுமே
உண்கிறேன்

இந்த அறையில்
நான் மட்டுமே
இருக்கிறேன்

இந்த அறையில்
நான் மட்டுமே
இறக்கிறேன்

Sunday, January 30, 2011

காரணம்

பல காரணங்கள்
சொல்லியாயிற்று
நான் வாழ்வதற்கு

செவி குவித்து
கேட்காதது
உங்கள் தவறுதான்

பல நூறு காரணங்கள்
சொல்லியாயிற்று
நான் வாழ்ந்தே தீருவதற்கு

செவி குவித்து
கேளாதுபோனது
உங்கள் தவறுதான்

சரி
இப்போது கேளுங்கள்

ஓரே ஒரு
காரணம்தான் இருக்கிறது

நான் மரணித்துப் போகாமல்
இருப்பதற்கு

ஒரே ஒரு காரணம்

நான் வாழ வேண்டும்

Saturday, January 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

340-

நான் மரமல்ல
இளைப்பாறிச்செல்ல

341-

பசியிடம் சொன்னேன்
நீ சாப்பிட்டதுபோல்
நினைத்துக்கொள்

பொய்கூழ் ஊற்றி
என் நெருப்பை
வீரியமாக்குகிறாய்
சொல்லியபடியே
சுட்டது பசி

நிலம்

கன்னிவெடி பதிக்கப்பட்ட
நிலத்தின் மீது
ஓடி வந்துகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை

கன்னிவெடி பதிக்கப்பட்ட
நிலத்தின் மீது
ஓடி வந்துகொண்டிருந்தது
ஒரு குழந்தை

Thursday, January 27, 2011

நன்றி பிகாஸோ

பிகாஸோவுடன்
பேசிக்கொண்டிருந்தேன்
கனவிலிருந்து
வெளியேறும் வரை

கடைசி தருணத்தில்தான்
பார்த்தேன்

அவர் என் பெயரை
எழுதிவிட்டுப்
போயிருப்பதை

பாதரசம் போல்
ததும்பியது பெயர்

என்னையே வரைந்திருக்கலாமே
என்ற ஆதங்கத்துடன்
பெயரை ஊத
முகம் வந்தது

என் முகம்தான்

நம்புங்கள்

என் முகமேதான்

நன்றி பிகாஸோ

Monday, January 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

334-

கனவில் கொட்டுகின்றன வண்ணங்கள்
எழுகிறான் ஓவியன்
ஓவியங்களைப் பிடிக்க

335-

ஏறி
ஏறி

மேலேறி
மேலேறி

வானம்
மேலேறி

336-

காட்டிய இடத்தில்
எதுவுமில்லை என்றார்

எதுவுமில்லாததைதான்
காட்டினேன் என்றேன்

பார்க்க ஆரம்பித்தார்
எதுவோ இருப்பதுபோல்

337-

நொடிக்கும்
குறைவான கணத்தில்
இறந்துபோனது
நசுக்கிய எறும்பு

பெரும் குற்றமாகி
நசுக்குகிறது
அதன் ஆயுளின் கனம்

338-

அமைதியில்
தொடங்குகிறது
பாடலின் இசை

339-

வாங்கிக்கொண்டீர்களா
என்கிறீர்கள்

வெறும் கை
எங்களிடம்

கிடைத்தது
உங்களிடம்

சேர்ந்து சொல்கிறோம்

வாங்கிக்கொண்டோம்

Sunday, January 23, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

330-

இது தவமல்ல

வெறும் கண்மூடல்தான்

நீங்கள்
கல்லெறியலாம்

331-

என் கேள்வி உங்களை
பாரமாக அழுத்துகிறதா

இல்லை
விடையாக இலேசாக்குகிறது

332-

கிளையில் ஏறிய எறும்பு
கேட்டது மரத்திடம்
பாரமாக இருக்கிறேனா
கிளை அசைத்து
சொன்னது மரம்
உன் கேள்விதான்
பாரமாக இருக்கிறது

333-

நீங்கள் நினைத்த இடத்தில்
முடித்துக்கொள்ளலாம்

நினைக்கும் இடத்தில்
தொடங்கலாம்

அதுபோல்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இந்தக் கவிதை