Friday, April 15, 2011

இரண்டு வரிகளுக்கிடையில்

இரண்டு வரிகளுக்கிடையில்
ஓடுகிறது ஒரு நதி
எரிகிறது ஒரு காடு
சாம்பலாகிறது ஒரு கடிதம்
பேசுகிறது ஒரு பொம்மை
சிரிக்கிறது ஒரு குழந்தை
இறக்கின்றன சில வார்த்தைகள்

இரண்டு வரிகளுக்கிடையில்
தெரிகிறது ஒரு சிற்றூர்
கேட்கிறது யாழிசை
பறக்கிறது ஒரு பட்டாம்பூச்சி
நகர்கிறது ஒற்றை மண் புழு
தெறிக்கிறது ஒரு ஊற்று
அழைக்கிறது ஒரு வனம்

இரண்டு வரிகளுக்கிடையில்
ஒளிர்கிறது ஒரு கலங்கரை விளக்கு
வழி அடைகிறது ஒரு கப்பல்
கையசைக்கின்றனர் சில பயணிகள்
விழுகிறது ஒரு அருவி
பெருமூச்சு விடுகிறாள் ஒரு மூதாட்டி
உதிர்கின்றன சில கண்ணீர்த் துளிகள்
கண் திறக்கிறது ஒரு சவப்பெட்டி

இரண்டு வரிகளுக்கிடையில்
மின்னஞ்சலுக்கு பழக்கப்பட்ட விரல்கள்
நாளுக்குத் தயாரான புன்னகை
பதுங்கியுள்ளனர் சில தீவிரவாதிகள்
புதைந்துகிடக்கின்றன சில துப்பாக்கிகள்
மறைந்திருக்கின்றன சில மர்மங்கள்

இரண்டு வரிகளுக்கிடையில்
காதலை மீட்டெடுக்கிறான் ஒருவன்
குழந்தைக்கு பெயர் யோசிக்கிறாள் ஒருத்தி
தினசரியில் தன் மரண அறிவிப்பை பார்க்கிறான் பயந்தவன்
துரோகத்தின் வலிகளை விழுங்குகிறான் இழந்தவன்

இரண்டு வரிகளுக்கிடையில்
தற்கொலையைத் தள்ளிவைக்கிறான் யோசிப்பவன்
மீன்களை வரைபவள் பொறி போடுகிறாள்
தூசிமுட்டித் திணறுகிறது திருமண ஆல்பம்

இரண்டு வரிகளுக்கிடையில்
தப்பித்தவன் முகமூடியை மாற்றிக்கொள்கிறான்
கிளம்புகிறது ஒரு மலைப்பாதை ரயில்
கனவைத் திறக்கிறாள் ஒரு சிறுமி
குளிரில் நடுங்குகிறது இரவு
வார்த்தைகளை நனைக்கிறது மழை

இரண்டு வரிகளுக்கிடையில்
தனிமையை உடைக்கிறது கனவு
போதையில் ஏறுகிறான் வழி மறந்தவன்
நேரம் கொறித்தபடி பார்வையாளன்
தனக்குள் நடந்து போகிறது நெடுஞ்சாலை

இரண்டு வரிகளுக்கிடையில்
எதுஎதுவோ நிகழ்கிறது
எதுஎதுவோ மாறுகிறது
எதுஎதுவோ தொடர்கிறது
எதுஎதுவோ பிரிகிறது
எதுஎதுவோ அழிகிறது

இரண்டு வரிகளுக்கிடையில்
முடிவைத் தேடுகிறது இந்தக் கவிதை

4 comments:

  1. என்ன சொல்லி வாழ்த்துவது..
    சூப்பர்....

    ReplyDelete
  2. இரண்டு வரிகளுக்கிடையே ஒரு கவிதை! அழகாய் வந்திருக்கிறது.

    ReplyDelete