Friday, May 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

477-

சுழலும் பம்பரம்
விழப்போகும் தருணம்
துயரமானது
தவிர்க்க வேண்டும்

478-

வெளவால் போல்
தலைகீழாய் நீ

வெளவால் போல்
தலைகீழாய் நீதான்

மனமும் நானும்
ஒருவருக்கொருவர்
புகார் சொல்லிக்கொண்டு

479-

முடிவோடு வந்து
தாழ்பாளிட்டவனிடம்
கோரிக்கை வைத்தது

நான் வெறும் கயிராகவே
இருக்கிறேனே

அந்தக் குரல் அவனுக்கு
கேட்கவில்லை

480-

தண்டவாளத்தில் கோழிக்குஞ்சு
வருகிறது ரயில்
உடைந்தது கனவு

481-

எதுவுமில்லை

கிடைத்துவிட்டது
என்ற வார்த்தையோடு
விளையாடுகிறேன்

482-

தனியே வந்தவன்
பேசிச்செல்கிறான்
போதையுடன்

483-

நுழைவாயிலில்
பரிசோதனைகளுக்குப் பிறகு
இந்த வார்த்தைகளோடு
செல்லக்கூடாது என்றார்கள்
ஆயுதமற்ற போராளியாய்
போக விரும்பவில்லை
திரும்பிவிட்டேன்
என்னை வளர்க்கும்
வார்த்தைகளுடன்

484-

தன் வன்மம்
உதிர்த்த பாறை ஆனது
தொன்மம் மாறா
சிலையாய்

485-

பறந்து வந்து
அமர்ந்தது இருள்
பட்டாம் பூச்சியைப்போல
வரைந்துகொண்டிருந்த
பட்டாம் பூச்சி மேல்

486-

எனக்கு முன்
ஊர்போய் சேர்ந்த
எறும்பிடம் கேட்டேன்

எப்படி உன்னால் முடிந்தது

நீ கேள்வியின்
அந்த முனையில் இருக்கிறாய்

நான் பதிலின்
இந்த முனையில் இருக்கிறேன்

குரல் வந்தது

487-

மரத்திடம் சொன்னேன்

நீ இலைகளை
கொன்றுபோடுகிறாய்

உதிர்தல்
மரணம் என்று
சொல்வாய் எனில்
பூத்தலும் மரணம்தான்

சொல்லி சிரித்தது
என் மேல்
இலைகள் விழ

No comments:

Post a Comment