Wednesday, June 01, 2011

கண்களில் ஆடிய ஜூவாலை

மெழுகுவத்தி வெளிச்சத்தில்
எப்போதும் குடிக்கும் பழக்கம்
நண்பனுக்கு

அவன்
நான்
மெழுகுவத்தி

அல்லது

அவன்
மெழுகுவத்தி

இந்த அட்டவணையில்
நிகழ்வு இருக்கும்

உட்கொள்ளும் துளிகளுக்கேற்ப
சொற்களை நடனமிடச் செய்வான்

அப்போது
நானும் மெழுகுவத்தியும்
கேட்கும் காதுகளாவோம்

அவன் பேச்சிலிருந்து
குதிக்கும் தவளைகள்
சத்தமிட்டு தாண்டிப்போகும்
இருளில் மறையும்

பேசும்போது
அவனை அறியாமல்
வரும் கண்ணீர்த்துளி

அதை மெழுகுவத்தியின்
உருகும் துளியோடு
கலந்து பார்ப்பான்

எந்த வாளினால்
உலகை அறுத்தாலும்
அது மீண்டும்
ஒன்று சேரும்
அன்பை வழங்கும் என்று
அபூர்வமாக ஏதாவது சொல்வான்

ஒவ்வொரு காயத்திலும்
தத்துவத்தை தடவினால்
வலிக்கவே வலிக்காது என்பான்

போதை அவனை
செல்லமாகத் தாலாட்டும்

அந்த ஊஞ்சலின்
அசைவுக்கேற்ப ஆடுவான்

சில நேரங்களில்
எல்லாம் துண்டிக்கப்பட்ட
அமைதி நிலவும்

அது பயத்தைத் தரும்

அப்போது மெழுகுவத்தி
சொட்டுவது மட்டும் கேட்கும்
பார் இது பேசுகிறது என்பான்

மெழுகுவத்தி
கோப்பையில் நிலவைப்போல
அசைந்தாடுகையில்
குடிக்காமல் கவனிப்பான்

எல்லாவற்றிலும்
நம்மை நட்டுவைத்து
சுயநலத் தோப்பாகிப்போனோம்

இந்த அவனது வாசகம்
எனக்கு மிகவும்
பிடித்த ஒன்று

ஒரு நாள் கேட்டேன்
மெழுகுவத்தி அணைந்துபோனால்
என்ன செய்வாய்

சிரித்தான்
சத்தமிட்டான்
அமைதியானான்
சொன்னான்

நான் ஏற்றும் மெழுகுவத்திகள்
அணைவதே இல்லை
எல்லாம் எனக்குள்
எரிந்துகொண்டிருக்கின்றன

அப்போது
அவன் கண்களில்
ஆடிய ஜூவாலை
என்னை கவனிக்கவைத்தது

No comments:

Post a Comment