Monday, January 16, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

817-

அந்தரத்தில்
மிதக்கிறது
என் முகவரி

818-

என் பிரார்த்தனைகள்
முடிந்து போயின
இனி நான்
கடவுளை சந்திக்க
நாளாகும்

819-

ஒருவரை ஒருவர்
தள்ளிவிடாமல்
பேசிக்கொண்டோம்
ஆனாலும்
எத்தனையோ முறை
விழுந்து போனோம்

820-

எதுவுமில்லை
அன்பை பரிமாறிப்
பசியடைக்கப்
பார்க்கிறோம்

821-

நினைவின் பாதையில்
நீண்ட தூரம்
நினைவுகளற்று

822-

உறங்கச் சொல்கிறேன்
கண்களிடம்
விழிக்கச் சொல்கிறேன்
இமைகளிடம்

823-

சொல்
திறக்கும் காற்று
இசை எடுத்துப் போகும்

824-

குடித்துக் கொள்ள
வைத்திருந்த தண்ணீர்
அந்த வேளை
உணவானது

825-

அன்பின் நெகிழ்வில்
உயிர்த்திருக்கிறது
வாழ்வின் ருசி

No comments:

Post a Comment