Monday, December 29, 2014

எனக்கும்

இறந்து போன 
தாயின் மடியிலேயே 
நீணட நேரமாக 
அழுது கொண்டிருக்கிறது குழந்தை 
யாராவது போய் 
குழந்தையைத் தூக்குங்கள் 
அப்படியே வந்து 
எழுதிய எனக்கும் 
ஆறுதல் சொல்லுங்கள்

Thursday, December 25, 2014

ஒற்றை வரி

எழுதிய ஒற்றை வரியை 
ஊதி 
நூலாக்கி விட்டேன் 
இந்த முனையை 
நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன் 
எதிர் முனை 
வானத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது

Wednesday, December 24, 2014

ஏழு நிமிடங்கள்

ஏழு நிமிடங்கள் 
அந்தக் கயிறுடன் 
அவன் பேசிக் கொண்டிருந்தான் 

எட்டு 
ஒன்பது 
பத்து 

இந்த நிமிடத்தில் 
அந்தக் கயிறு பற்றிய தகவலை 
உங்களுக்குச் சொல்ல வேண்டியது 
அவசியமாகிறது 

அது 
தற்கொலைக் கயிறு 

Sunday, December 21, 2014

பழைய நண்பர்

பார்க்காமல் போகிறார் 
பழைய நண்பர்
அவர் கால்களில் இருப்பது 
தவிர்க்க நினைத்த வேகமா 
எதையோ தேடிய ஓட்டமா 
தெரியவில்லை
நின்றிருக்கிறேன்
நினைவின் வடுவைத்
தடவியபடி

Saturday, December 20, 2014

அவருடன்

கைத்தட்டிக் கூப்பிட்டவர்
அவரை என்றார்
உங்கள் கைத்தட்டலில்
என் பெயர் இருந்ததால்
திரும்பி விட்டேன் என்றேன்
சிரித்தபடி கடந்து போனார்
அவருடன் 

குரூரத்தின் குருதி

நீங்கள் சுட்டப் பறவை 
என் கையில் 
விழுந்திருக்கிறது 
வழிகிறது 
பறவையின் குருதி 
என்று என்னால் எளிதாக 
சொல்ல முடியவில்லை 
உங்கள் குரூரத்தின் குருதி 
என்று சொல்லாமல் 
இருக்கவும் முடியவில்லை

Tuesday, December 16, 2014

எப்போதும் போல்

துயரம் போல் 
பெய்கிறது மழை
என்றவரும் 
சந்தோஷம் போல் 
பெய்கிறது மழை 
என்றவரும் 
எதிரெதிர் மாடியிலிருந்து 
பார்த்துக் கொண்டிருந்தார்கள் 
எப்போதும் போல்
பெய்து கொண்டிருந்தது மழை

Saturday, December 13, 2014

உங்களால் முடியுமா

கைகோர்த்து வந்தவன் 
உன் கழுத்தை 
நெரிக்கப் போகிறேன் என்றான் 

உங்களால் முடியுமா 
என்றேன் 

என் பிரேதத்தைத் தாண்டி 
இன்னொருவன் கைகோர்த்தபடி 
போய்க்கொண்டிருந்தான் 

Thursday, December 11, 2014

குழந்தைச் சொன்னக் கதை

அப்பா சொன்னக் கதையில்
பாகன் யானையுடன்
நகரில் திரிந்து கொண்டிருந்தான்
குழந்தைச் சொன்னக் கதையில்
பாகன் டீ குடித்துக் கொண்டிருந்தான்
யானைக் காட்டிற்குப் போய் விட்டது

Wednesday, November 26, 2014

வனம்

தன் வனத்திற்கு 
வரச் சொல்கிறது 
வரைந்த பட்டாம்பூச்சி 
தன் அறைக்கு 
வரச் சொல்கிறாள் 
வரைந்த குழந்தை

Sunday, November 23, 2014

தண்டவாளம் பக்கத்தில்

அவளே கேள்விக் கேட்டு
அவளே பதிலும் சொன்னாள்

பட்டாம்பூச்சியின் மேல்
ரயில் மோதினால்
என்னாகும்

உயிர் பறந்துப் போகும்

மறுநாள் காலை
தண்டவாளம் பக்கத்தில்
அவள் சடலம் கிடந்தது

அவளைச் சுற்றி
பறந்துக் கொண்டிருந்தன
பட்டாம்பூச்சிகள்

Saturday, November 15, 2014

குட்டிப் பூனை

குட்டிப் பூனை 
உன்னைப் பார்க்க வந்துது 
நீ சத்தம் போட்டதால் 
ஓடிப் போனது 
கீழ்வீட்டுக் குழந்தையிடம் 
விளையாட்டாகச் சொன்னேன் 
பூனைக்காகக் காத்திருக்கிறாள் 
அமைதியாக

Thursday, November 13, 2014

ஒளி வட்டம்

தலைக்குப் பின்னால்
அடிக்கடித் திரும்பிப்
பார்த்துக் கொண்டார்
அவருக்குத் தெரிந்த
ஒளி வட்டம்
மற்றவர்களுக்குத் தெரியவில்லை

Wednesday, November 12, 2014

சொல்/வாக்கியம்

நிற்கும் போது நான் 
சொல் 
சொல்லிப் பாருங்கள் 
நடக்கும் போது நான் 
வாக்கியம் 
படித்துப் பாருங்கள்

மறந்துப் போய் விட்டது

காத்திருப்பது மட்டுமே
மனதில் உள்ளது
எதற்கு
காத்திருக்கிறேன் என்பது
மறந்துப் போய் விட்டது

கதையில் எரிந்த மெழுகுவத்தி

கதையில் எரிந்த 
மெழுகுவத்தியை 
ஊதி அணைத்தேன் 
வார்த்தைகளில் வழிந்து 
பக்கங்களைப் 
படிக்க முடியாமல் 
செய்து விட்டது

Thursday, November 06, 2014

காயத்தின் நிழலில்

காயத்தின் நிழலில் 
வலி இளைப்பாறும் 
என்று எழுதிய வரியை 
மருந்தாக்கப் பார்க்கிறேன் 
ஆனாலும் 
வலிக்கவே செய்கிறது 

பைத்தியக்காரனின் பிரியம்

மழையில்
ஒரு தேநீர் கேட்டு
என்னைத் தொட்டு
முத்தமிட்ட
பைத்தியக்காரனின் பிரியம்
நெகிழச் செய்தது
ஆனாலும்
எல்லோரும் அவனை
விரட்டிய போது
பேசாமல்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

Saturday, November 01, 2014

யாரேனும் சொல்லுங்கள்

தற்கொலைக்கு ஓடுபவனை
எதற்குக் கொலை செய்ய
ஓடுகிறீர்கள்
என்ற வரியில் இருப்பவன்
என்ன ஆவான்
யாரேனும் சொல்லுங்கள்

Thursday, October 30, 2014

நான் பார்க்க வந்தவர்

தாமதமாகவே கிளம்பினேன்
நேரே
இடுகாடு வந்துவிட்டேன்
அங்கும் தாமதமாகிவிட்டது
மின் தகனச் சடங்கு
முடிந்திருந்தது
எல்லோரும் போயிருந்தார்கள்
தனியாய்
ஒற்றை ஆளாய்
நின்றிருந்தேன்
சார் யாரப் பாக்கணும்
நான் பார்க்க வந்தவர்
போய் விட்டார்
சொல்லிவிட்டு நடந்தேன்

Wednesday, October 29, 2014

நாங்கள் எங்களுடன்

நான் தனிமையுடன்
பேசினேன்

தனிமை இரவுடன்
பேசியது

இரவு என்னுடன்
பேசியது

நாங்கள் எங்களுடன்
பேசினோம்

Monday, October 20, 2014

சாலை

கலைந்து கிடக்கிறது சாலை 
எவ்வழிப் போவது 
என்ற வரியை 
அழிக்கிறேன் 

Friday, October 10, 2014

மழை நாளில்

கவிதை எழுதுவாள் கௌரி 
ஒரு மழை நாளில் 
அவளுக்குக் குழந்தைப் பிறந்தது 
கண்களில் நீர்த் துள்ள 
இப்படி எழுதினாள் 
மழை நாளில் 
மழையைப் பெற்றெடுத்தேன் 
(கௌரிக்கு)

Wednesday, October 08, 2014

உளி

என்னை உளியாக்கி 
தன் கையில் எடுத்து 
கனவை உடைக்கப் 
பார்க்கிறது இரவு 
கனவு உளியைக் கைப்பற்ற 
எதுவுமற்று 
விழிக்கிறது இரவு 
புரண்டு படுக்கிறேன்
இன்னொரு கனவுடன் 

Friday, October 03, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1111-

வாசிக்காத புல்லாங்குழல் 
வனத்தில் எறிந்த போது 
இசைத்தபடியே விழுந்தது

1112-

நீண்ட நேரமாக 
நடந்து கொண்டிருக்கிறேன் 
எங்கு போக வேண்டும் என்று 
மறந்து போய் விட்டது

1113-

ஆறுதல் பரிசை 
ஆகாயம் போல் 
வாங்கிக் கொள்கிறீர்கள் 
அந்த நேரத்தில் 
இறந்து போகிறது 
உங்கள் சிறகு




கண்ணீருக்கும் பசிக்கும்

கண்ணீருக்கும் பசிக்கும்
இந்த இரண்டு
சொற்களுக்குள்
கவிதை இருக்கிறதா
தெரியாது
சொன்னவள் இருக்கிறாள்

Wednesday, October 01, 2014

வரும் சத்தம்

வரும் சத்தம் 
நெருங்கி வர 
ரயிலில் 
பயணம் செய்வதாக 
நினைத்தபடியே அவன் 
தண்டவாளங்களுக்கிடையில் 
நடந்து கொண்டிருந்தான்

சிறகைத் தருவாயா

உன் சிறகைத் தருவாயா
நான் அணிந்துப் பறக்க
வானம் கேட்டது
இல்லை
வானம் கேட்பது போல்
பறவை நினைத்தது
மழைத்துளி அதன்
நினைவின்
மேல் விழ
வேகம் கொண்டு போனது

Saturday, September 13, 2014

எப்படிச் சொல்லலாம்

எதிரில் இருந்தவர் 
நாளை மற்றொரு நாளே என்றார் 
பக்கத்தில் இருந்தவர் 
இன்று இன்னொரு நாளே என்றார் 
நேற்றை எப்படிச் சொல்லலாம் 
என்ற யோசனையில் 
நான் இருந்தேன் 

Thursday, August 28, 2014

இப்படித்தான்

இப்படித்தான்
இந்தக் கவிதையை
உடைத்தேன்
இத்தனை கவிதைகளாகும்
என்று தெரிந்திருந்தால்
எழுதியே இருக்க மாட்டேன்

இரண்டும்தான்

உங்கள் சொற்களில் 
விளையாடுவது 
பொய்யா சாதுர்யமா 
இரண்டும்தான் 
பொய்யின் சாதுர்யம் 
சாதுர்யத்தின் பொய் 

Friday, August 22, 2014

இறந்தும் போகிறான்

நஞ்சைக் கொடுத்து 
நகைச்சுவை உணர்வுடன் 
குடிக்கச் சொல்கிறீர்கள் 
குடிக்கிறான் 
சிரித்துச் சிரித்தே 
இறந்தும் போகிறான் 
உருக்கமாக வருகிறது 
உங்கள் கண்ணீர் 
குழந்தை அறைக்குள்ளிருந்து 
வெளி வருவதைப் போல 

Monday, August 11, 2014

உரக்கச் சொல்லுங்கள்

நான் சொற்களை 
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்
படித்து உங்களுக்கு 
ஏதேனும் கிடைத்தால் 
எனக்கும் உரக்கச் சொல்லுங்கள் 

உன்னால் மறுக்க முடியாது

உன் எல்லாச் சிறகுகளையும் 
வெட்டிவிட்டேன் 
நீ பறக்க முடியாது 

அதனாலென்ன 
நான் பறவை இல்லை என்று 
உன்னால் மறுக்க முடியாது 

Saturday, August 09, 2014

நடிக்க முடியாது

என்னைப் போல்
உங்களால்
நடிக்க முடியாது
உங்களைப் போல்
என்னால்
நடிக்க முடியாது
நம்மைப் போல்
யாராலும்
நடிக்க முடியாது

Tuesday, August 05, 2014

தெரிந்தார்

வலையோடு 
ஒரு மீனவரைப் 
புகைப்படம் எடுத்தேன் 
ஒரு கணம் 
நின்று புன்னகைக்கும் 
மீன் போல் தெரிந்தார்

Monday, August 04, 2014

எழுதியபடி

கதவைத் தட்டும் 
கனவுக்கும் 
கனவைத் திறந்து 
உள்ளே வரும் 
கனவுக்கும் 
இடையில் நான் 
என்ன செய்வது 
என்று தெரியாமல் 
இந்த வரிகளை 
எழுதியபடி 

சொல்

மடித்து வைக்கப்பட்ட
ஒரு சொல்லை
விரித்தேன்
வாக்கியங்களாக
நீண்டுகொண்டே போகிறது

மலைமுகட்டில்

இன்று எதையும் 
எழுதப் போவதில்லை 
இந்த மலைமுகட்டில் 
நின்றுகொண்டு 
வெள்ளைக் காகிதங்களைக் 
காற்றில் 
பறக்க விடப் போகிறேன்

Sunday, August 03, 2014

உடைந்த கனவில்

உடைந்த கனவில்
நடக்கும் இரவு
குருதிக் கசிய

வேண்டுமா என்ன

அழுகிறேன்
காரணம் எதுவுமின்றி
அழ ஏதாவது
வேண்டுமா என்ன 

என்ன செய்யப் போகிறீர்கள்

அரங்கம் நிரம்பி விட்டது 
என்ன செய்யப் போகிறீர்கள் 
வீதிக் காட்சிகளைப் 
பார்த்தபடி 
நடக்கப் போகிறேன் 

Saturday, August 02, 2014

நடிக்கிறேன்

நான்தான்
எல்லாக் கதாபாத்திரமும்
உங்களுக்குக்
களைப்புத் தட்டிவிடக் கூடாது
என்பதற்காக
முகம் மாற்றி நடிக்கிறேன்

ஒரு வியூகத்தில்

அப்படி எல்லாம் நீங்கள்
தப்பித்து விட முடியாது
ஏதாவது ஒரு வியூகத்தில்
சிக்கித்தான் ஆக வேண்டும்

Thursday, July 31, 2014

இதுபோல்

நாங்க 
பசிக்குப் பசியத்தான் 
தொட்டுக்குவோம் 
இதுபோல் 
வெறும் தட்டில் 
வேறு வரிகளும் 
இருந்தன 

Wednesday, July 30, 2014

சொற்கள்

இருவருமே
இருளில் இருந்தோம்
சொற்கள்
முகம் பார்க்கப்
பேசிக்கொண்டிருந்தோம்

ஏன்

ஏன் தற்கொலை 
செய்து கொள்ளக்கூடாது 
என்ற கேள்வியில் 
தொங்கி 
மீள்கிறேன்
பல நேரம் 

Tuesday, July 29, 2014

போல


ரகசியத்தின் 
அந்தப் பக்கமும் 
இந்தப் பக்கமும் 
இருக்கிறோம் 
ரகசியங்களைப் போல 

ஒன்றுமில்லை

திரை விழுந்து  
நேரமாகிறது 
அரங்கில் 
இதற்கு மேல் 
ஒன்றுமில்லை 
நீங்கள் பார்க்க 

Saturday, July 26, 2014

அந்த பெண்

மழையை ரசித்தபடி 
வயலின் வாசிக்கும் பெண்ணை 
வரைந்து முடித்தேன்
இப்போது நான் ரசிக்க
மழை இசை 
மற்றும் அந்த பெண்

முதலில்

கத்தி பாய்ந்த மனிதரை 
பிறகு காப்பாற்றலாம் 
குருதி படிந்த கத்தியை 
முதலில் கழுவுவோம்

Friday, July 25, 2014

பசியின் கண்களில்

என் கண்களில் 
பசி 
பசியின் கண்களில் 
நான்

நடக்கிறேன்

என்னோடு 
பயணித்தப் பறவை 
மறைந்து போய் விட்டது 
மறுபடி வருமென்று 
வானம் பார்த்தபடி 
நடக்கிறேன்

ஒரு கணம்

குழந்தை 
பறித்துத் தந்தது 
பூ 
வாங்கிக் கொண்ட 
ஒரு கணம் 
கடவுளாக இருந்தேன்

மழையின் பாடல்

மழைக்கு ஒதுங்கி இருந்த 
சிறுவன் கையில் 
புல்லாங்குழல் இருந்தது 
அதன் மேல் 
துளிகள் மின்னிக்கொண்டிருந்தன 
அதிசயித்தபடி 
பார்த்துக்கொண்டிருந்தான்
எனக்காக வாசிப்பாயா 
எனக் கேட்டேன்
முகம் திருப்பாமல் சொன்னான்
மழையின் பாடலைக் 
கேட்டுக்கொண்டிருக்கிறேன் 
மன்னிக்கவும்

Tuesday, July 22, 2014

உற்றுப் பார்க்கிறது இரவு

நேரம் கடக்க 
பெருமூச்சு விட்டு 
அங்கும் இங்கும் 
பார்த்து
பசியை எச்சிலில் 
துப்பியபடி
யாராவது கிடைப்பார்களா என 
இரவிடம் கேட்கிறாள்
கால் ஊனமானப் பெண் 
சொல்ல வார்த்தைகள் 
எதுவும் இன்றி
அவளையே 
உற்றுப் பார்க்கிறது
இரவு

Saturday, July 12, 2014

நமக்கு நனையத் தெரியவில்லை

1-

வெறும் கைகளுடன் 
திரும்புகிறார் அப்பா 
அந்தக் கைகளுக்கு 
முத்தம் தருகிறாள் குழந்தை

2-

மழைக்குள் இருக்கும் 
குழந்தைகளுக்கு 
நனைவது தெரியவில்லை 
மழைக்கு வெளியே 
இருக்கும் நமக்கு 
நனையத் தெரியவில்லை

Thursday, July 10, 2014

பசி

பகிர்ந்து சாப்பிட 
நம்மிடம் பசிதான் 
இருக்கிறது என்று 
எழுதிய வரியில் 
அடங்கியது கொஞ்சம் 
என் பசி

Sunday, July 06, 2014

படகு

குடை வரைந்த தாளில் 
படகு செய்து
மழை நீரில் 
விடுகிறாள் மான்யா 
போகிறது படகு 
குடை பிடித்து

Friday, June 27, 2014

பிரார்த்தனை

என் பிரார்த்தனையில் 
உப்புக் கரித்தது 
என்றார் கடவுள் 
கண்ணீர் கலந்திருந்தது 
என்றேன் நான் 

Thursday, June 26, 2014

ஒரு வரி போதும்

இறந்து போக 
எத்தனையோ தருணங்கள் 
இருக்கின்றன 
உயிர்த்தெழ 
ஒரு வரி போதும்

பயம் மேயும் ஆடு

பயம் மேயும் ஆடு 
என்ற வரியை 
அடுத்த வரியில் 
வந்த சிங்கம் 
அடித்துக் கொன்றது

Saturday, June 14, 2014

தெரியவில்லை

குட்டிப்பூனைப் போல
கண்கள் மெல்ல
வெளியே வந்து
உடல் மேல் குதித்து
விளையாடுகிறது
எப்படிப் பார்க்கிறேன்
தெரியவில்லை

Friday, June 13, 2014

நான் கடவுளுடன் விளையாடுகிறேன்

நான் கடவுளுடன்
விளையாடுகிறேன்
கடவுள் பட்டாம்பூச்சியுடன்
விளையாடுகிறார்
பட்டாம்பூச்சி என்னுடன்
விளையாடுகிறது
சொல்கிறாள் மான்யா
அவள் சொற்களில் மயங்கி
கடவுளைப் பார்க்காமல்
விட்டு விட்டேன்

Tuesday, June 10, 2014

கடந்து போ

சில சொற்களை 
நகர்த்தி 
பல மைல் 
கடந்து போ என்றவர் 
தொலைதூரம் 
போயிருந்தார்

Sunday, June 08, 2014

ஒரு பறவை

அந்தரத்தில் 
மிதக்கும் என்னை 
ஒரு பறவை 
தொட்டுத் தள்ளிவிட்டுப் 
போகப் பார்க்கிறது

வைக்கோல் கன்றுக்குட்டி

கண்களில் 
ஆச்சர்யம் குவித்து 
இந்த கன்றுக்குட்டிக்கு 
அம்மா யார் 
கேட்கிறாள் குழந்தை 
குழந்தையின் குரலில் 
உயிர் பெற்ற 
வைக்கோல் கன்றுக்குட்டி 
தன் தாயைத் தேடி 
ஓடுகிறது

Monday, June 02, 2014

பொம்மை

தற்கொலை செய்துகொண்டது போல்
தண்டவாளத்திற்குப் பக்கத்தில்
கிடக்கிறது பொம்மை
ஆடு மேய்க்கும் சிறுமி
ஓடி வந்து எடுத்துப் போக
மெல்ல உயிர் வருகிறது
பொம்மைக்கு

Saturday, May 31, 2014

ஒரு பெண்

வலிக்கு கண்ணீரால்
மருந்து பூசிக்கொண்டிருந்த
ஒரு பெண்ணைக் கண்டேன்
எதுவும் செய்ய முடியாமல்
மெளனமாய் பார்த்தேன்
புன்னகைத்தேன்
உன் புன்னகையும்
இப்போது என் புண்ணுக்கு
மருந்தாகி விட்டது
எனச்சொல்லி சிரித்தாள்

Friday, May 30, 2014

கண்ணீரின் உப்பு

காலை ஒளி பூக்க
கண்ணாடியை
சரி செய்து
தேநீர் அருந்தியபடி
செய்தித்தாள் வாசிப்பவர்
விபத்து
பாலியல் வன்முறை
கொலை
தற்கொலை
குழந்தை மரணம் என
பக்கங்களை
கடந்து போகிறார்
கடைசி சொட்டுத் தேநீரில்
கண்ணீரின் உப்பு
கரிக்கிறது

Thursday, May 29, 2014

ஒரு சித்திரம்

அந்த மின்விசிறி
அவளுக்கு மிகவும் பிடிக்கும்

அதை ஒரு
தொங்கும் கவிதையைப் போல ரசிப்பாள்

சுழலும் ஓவியம் போல பார்ப்பாள்

அது தரும் காற்று
தன்னோடு பேசுவது போல உணர்வாள்

பெஞ்ச் மேல் ஏறி நின்று
குதிகால் தூக்கி
எட்டிப் பிடிக்கும் குழந்தையைப் போல
அதை அழகாய் துடைப்பாள்

அப்போது ஒரு பாடலை முணுமுணுப்பாள்

குளிர் காலத்தில்
மின் விசிறி ஓய்வெடுக்கும்

ஓடாத அதன் மெளனம்
அவளை நிம்மதி
இழக்கச் செய்யும்

ஒரு முறை பழுதடைய
உடனே போன் செய்து
எலக்ட்ரீஷியனை
வர வைத்து
சரி செய்து
ஓடியவுடன்
முகம் துடைத்து
பெருமூச்சு விட்டாள்

கனவில் வரும் அம்மாவின்
கை விசிறி போல
இதன் மீதும்
அவளுக்குப் பிரியம் அதிகம்

மின்விசிறிப் பற்றி
சின்ன சின்ன கவிதைகளை
எழுதி வைத்திருக்கிறாள்

உன் காற்றைப் போல
நானும் மறைந்து போவேன்
என்ற வரியை
ஆழமாய் முணுமுணுத்தபடியே
ஒரு மழை இரவில்
அந்த மின்விசிறியில்
தொங்கிப் போனாள்



Wednesday, May 28, 2014

சொற்கள்

சொற்கள்
பாதையானதா
வாக்கியமானதா
வாக்கியத்திடம் கேட்டேன்
பாதை என்றது
பாதையிடம்  கேட்டேன்
வாக்கியம் என்றது 

Tuesday, May 27, 2014

சாய்ந்திருக்கும் சைக்கிள்

சுவரில்
சாய்ந்திருக்கும் சைக்கிள்
ஓவியம் போலிருக்கிறது
விட்டவர் வந்து
எடுத்துப் போக
எனக்கும் சுவருக்கும்
தேவைப்படுகிறது
வேறொரு ஓவியம்

Monday, May 26, 2014

இந்த அறையில்

இந்த அறையில் 
நீங்கள் என்னோடு 
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் 
ஆனாலும் ஒளிந்திருந்து 
வேறு எதையோ 
கேட்கவும் பார்க்கிறீர்கள்

Wednesday, May 21, 2014

சாம்பல்

மின் மயானத்தின் 
வெளியே 
காத்திருந்த போது 
என் உள்ளங்கையில் 
கொதித்து அடங்கியது
என் சாம்பல்

பொய்கள்

கதவடைக்கப்பட்ட அறையில் 
எல்லா நாற்காலிகளிலும் 
பொய்கள் அமர்ந்திருந்தன 
நின்றிருக்க விரும்பாமல் 
சாவி துவாரத்தின் வழியே 
உண்மை வெளியேறியது

Monday, May 19, 2014

பெரு வனம்

மகா கற்பனையில் 
ஒரு பெரு வனத்தை 
உருவாக்குகிறீர்கள் 
துளி ஒளி கூட 
விழாத வனம் அது 
அதனுள் போகிறீர்கள் 
ஏதாவது விலங்குகளால் 
வேட்டையாடப்படுவோம் 
என்று பயப்படுகிறீர்கள் 
பெயர் தெரியாத 
விலங்கொன்று அடிக்க 
இறந்து போகிறீர்கள் 

விழித்திருப்பவன்

விழித்திருப்பவன்
இரவை ஒரு
சிகிரெட்டைப் போல
பிடித்துக் கொண்டிருக்கிறான்
என்ற வரியை
நள்ளிரவில் தொடங்குகிறேன்
விடியலைக் கீறி
வெளிவரப் பார்க்கின்றன

மற்ற வரிகள்