Thursday, February 27, 2014

வேட்டை நாய்கள்

எல்லோரையும்
வேட்டை நாய்களாக்கி விட்டோம்
மனம் வருந்திச்
சொன்னார் பெரியவர்
என் கண்களிலிருந்த
வேட்டை நாய்
வெளியே வந்து
அவர் கால்களை
நக்கிக் கொண்டிருந்தது

சாவி துவாரத்தில்

சாவி துவாரத்தில்
இறந்து கிடக்கிறது
ஒரு கண்
அதன் இமைகள்
துடித்தபடி

Friday, February 21, 2014

நகரும் கதை

1-
அதர்மம் 
நடிக்கிறது
தர்மம் 
பார்க்கிறது

2-
நீ எப்போது 
சைத்தான் ஆனாய் 

இரக்க மனதை 
இறக்கி வைத்தபோது 

3-
எழுத்தில் 
ஓய்வெடுக்கிறேன்
என்றாலும் எழுதுகிறேன்

4-
கதை நகர்வதைப் 
பார்த்துக்கொண்டிருந்தேன்
நகர்வின் 
அழகில் மயங்கி 
எழுதுவதை 
மறந்து விட்டேன்

5-
பேராசையை 
மனதிற்கு ஊட்டிவிட்டு 
அதை பசியுடனேயே இருக்க 
பழகி வைத்திருக்கிறோம்



Thursday, February 20, 2014

இழு

இழுக்க முடியுமா 
இந்த தேரை 

முடியும் 
இழு 
தேரே சொன்னது

Tuesday, February 18, 2014

கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

காட்டில் கொண்டு போய் 
விட்டுவிடலாமா 
சர்க்கஸ் சிங்கத்தை 
பார்க்க விடாமல் 
கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

மறுநாள் 
அவள் வரைந்த வனத்தில் 
அந்த சிங்கம் 
உலவிக்கொண்டிருந்தது

Sunday, February 16, 2014

கொம்பு

எனக்குத் தலையில் 
கொம்பு முளைத்திருக்கிறது 
என்கிறீர்கள் நீங்கள் 

உங்களுக்குத் தலையில் 
கொம்பு முளைத்திருக்கிறது 
என்கிறேன் நான் 

இருவரும் இல்லை 
என்கிறோம் 

கண்ணாடியில் 
பார்க்கிறோம் 

கண்ணாடியில் 
கொம்பு முளைத்திருக்கிறது 

உணர்வின் மையம்

எழுதினேன் 
சித்திரம் கிடைத்தது 

வரைந்தேன் 
சித்திரம் கிடைத்தது 

ஒன்று போலில்லை 
மற்றொன்று 

ஆனாலும் 
உணர்வின் மையம் ஒன்று