Thursday, July 31, 2014

இதுபோல்

நாங்க 
பசிக்குப் பசியத்தான் 
தொட்டுக்குவோம் 
இதுபோல் 
வெறும் தட்டில் 
வேறு வரிகளும் 
இருந்தன 

Wednesday, July 30, 2014

சொற்கள்

இருவருமே
இருளில் இருந்தோம்
சொற்கள்
முகம் பார்க்கப்
பேசிக்கொண்டிருந்தோம்

ஏன்

ஏன் தற்கொலை 
செய்து கொள்ளக்கூடாது 
என்ற கேள்வியில் 
தொங்கி 
மீள்கிறேன்
பல நேரம் 

Tuesday, July 29, 2014

போல


ரகசியத்தின் 
அந்தப் பக்கமும் 
இந்தப் பக்கமும் 
இருக்கிறோம் 
ரகசியங்களைப் போல 

ஒன்றுமில்லை

திரை விழுந்து  
நேரமாகிறது 
அரங்கில் 
இதற்கு மேல் 
ஒன்றுமில்லை 
நீங்கள் பார்க்க 

Saturday, July 26, 2014

அந்த பெண்

மழையை ரசித்தபடி 
வயலின் வாசிக்கும் பெண்ணை 
வரைந்து முடித்தேன்
இப்போது நான் ரசிக்க
மழை இசை 
மற்றும் அந்த பெண்

முதலில்

கத்தி பாய்ந்த மனிதரை 
பிறகு காப்பாற்றலாம் 
குருதி படிந்த கத்தியை 
முதலில் கழுவுவோம்

Friday, July 25, 2014

பசியின் கண்களில்

என் கண்களில் 
பசி 
பசியின் கண்களில் 
நான்

நடக்கிறேன்

என்னோடு 
பயணித்தப் பறவை 
மறைந்து போய் விட்டது 
மறுபடி வருமென்று 
வானம் பார்த்தபடி 
நடக்கிறேன்

ஒரு கணம்

குழந்தை 
பறித்துத் தந்தது 
பூ 
வாங்கிக் கொண்ட 
ஒரு கணம் 
கடவுளாக இருந்தேன்

மழையின் பாடல்

மழைக்கு ஒதுங்கி இருந்த 
சிறுவன் கையில் 
புல்லாங்குழல் இருந்தது 
அதன் மேல் 
துளிகள் மின்னிக்கொண்டிருந்தன 
அதிசயித்தபடி 
பார்த்துக்கொண்டிருந்தான்
எனக்காக வாசிப்பாயா 
எனக் கேட்டேன்
முகம் திருப்பாமல் சொன்னான்
மழையின் பாடலைக் 
கேட்டுக்கொண்டிருக்கிறேன் 
மன்னிக்கவும்

Tuesday, July 22, 2014

உற்றுப் பார்க்கிறது இரவு

நேரம் கடக்க 
பெருமூச்சு விட்டு 
அங்கும் இங்கும் 
பார்த்து
பசியை எச்சிலில் 
துப்பியபடி
யாராவது கிடைப்பார்களா என 
இரவிடம் கேட்கிறாள்
கால் ஊனமானப் பெண் 
சொல்ல வார்த்தைகள் 
எதுவும் இன்றி
அவளையே 
உற்றுப் பார்க்கிறது
இரவு

Saturday, July 12, 2014

நமக்கு நனையத் தெரியவில்லை

1-

வெறும் கைகளுடன் 
திரும்புகிறார் அப்பா 
அந்தக் கைகளுக்கு 
முத்தம் தருகிறாள் குழந்தை

2-

மழைக்குள் இருக்கும் 
குழந்தைகளுக்கு 
நனைவது தெரியவில்லை 
மழைக்கு வெளியே 
இருக்கும் நமக்கு 
நனையத் தெரியவில்லை

Thursday, July 10, 2014

பசி

பகிர்ந்து சாப்பிட 
நம்மிடம் பசிதான் 
இருக்கிறது என்று 
எழுதிய வரியில் 
அடங்கியது கொஞ்சம் 
என் பசி

Sunday, July 06, 2014

படகு

குடை வரைந்த தாளில் 
படகு செய்து
மழை நீரில் 
விடுகிறாள் மான்யா 
போகிறது படகு 
குடை பிடித்து